Thursday, August 5, 2010

ஆக, தமிழர்களே... சாகத் தொடங்குவோம்!

உலகத்து மொழிகளிலெல்லாம் உயர்தனிச் செம்மொழியாய்த் திகழ்கின்ற மொழியே தமிழ். இலக்கியச் செழுமை, சொற்களில் வளமை, பிற மொழிகளுக்குத் தாய்மை, வழக்கில் பழமை, எப்போதும் விளங்குகின்ற எளிமை, புதியச் சூழலுக்கேற்ற புதுமை என பல்வேறு அடிப்படைக்கூறுகளை செம்மொழித் தகுதியாக, மொழியியல் அறிஞர்கள் வரையறை செய்கின்றனர். மொழியியலாளர்களால் வழங்கப்படும் சூத்திரத்திற்கு, முழுவதுமாய் உட்படுகின்ற, உலகின் ஒரே மொழியாகத் தமிழ் திகழ்கின்ற காரணத்தால்தான், அதனை உயர்தனிச் செம்மொழி என்று உரைக்கக் காண்கின்றோம். எல்லா உயிரையும் சமமாக மதித்து நடத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனை உலகில் வேறு எந்த மொழியிலும் காணக் கிடைக்கவில்லை. ஆனால், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் மொழியின் தொல் புலவன் வள்ளுவப் பேராசான் திருக்குறளின் வழியே இக்கருத்தை அழகாய் வெளிப்படுத்துகின்றார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஒப்பற்ற உலகியல் தத்துவத்தை கணியன் பூங்குன்றனார் விளக்கிய காலத்தில், நனி நாகரிகம் கண்ட இனமென்று உலகில் வேறு ஒன்றில்லை. மொழிக்கென்று தொல்காப்பியன் மூலமாக, தமிழ், தனக்கென இலக்கணம் படைத்த கி.மு.1000இல், பிற இனங்களெல்லாம் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்திருக்கின்றன என்பதும் வரலாறு.



ஆனால்..?

மொழிப்பெருமை, இனப்பெருமை கொண்டு வாழ்ந்த தமிழினம் இன்றைக்கு நாதியற்று, தனக்கென்று அரசாள நாடற்று, எவரும் காறியுமிழும் கேடுற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழக நிலப்பரப்பிற்கு சற்றே அருகில், வெறும் பதினெட்டே மைல் கல் தொலைவில், ஈழத் திருநாட்டில் நம் தொப்புள் கொடி உறவுகளெல்லாம் சதைகள் பிய்ந்து, இரத்தம் பீறிட, உறுப்புகள் தொங்கி, நரம்புகள் வெட்டுண்டு, எலும்புகள் நொறுங்க உயிருடன் வாழ்வதற்கே சிங்களப் படையினரோடு போராடிக் கொண்டிருந்த போது, தமிழகத் தொலைக்காட்சிகளில் 'மானாட... மயிலாட...' பார்த்துக் கொண்டே, கோலாவும், பெப்சியும் பருகிக் கொண்டிருந்தோம். 'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு' என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடலுக்குப் பொருளெங்கே போனது? போரை நிறுத்தச் சொல்லி வெறும் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை சாதனையாகப் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தமிழ் மண்ணில் தான், 'வடக்கிருந்து உயிர் துறத்தல்' என்ற உன்னதமான உயிர்த் தற்கொடையினை சங்க இலக்கியங்கள் மிகப் பெருமையோடு பாடியிருக்கின்றன. 1987இல் சொட்டுத் தண்ணீர் கூடப் பருகாமல், ஈழ மண்ணில் திலீபன் என்ற மாவீரன், இந்தியாவிடம் நீதி கேட்டுப் பன்னிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்ட கதையோடு, நான்கு மணி நேர உண்ணாநோன்பையும் பொருத்திப் பார்த்துக் கொள்க!

ஈழப்போரின் இறுதி நாட்களில் மட்டும் ஏறக்குறைய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் எந்தவித ஆதரவுமின்றி மண்ணோடு புதைந்து போயினர். வரலாற்றில் ஒரு போதும் மறைக்கவியலாத அந்தப் பேரவலத்தின் சோக நினைவுகள் இன்னமும் நம்மை விட்டு அகலாத நிலையில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' ஒன்றை கொங்குச் சீமையில் நடத்திக் காட்டியிருக்கிறார். வரவேற்பு வளைவுகளென்ன... அலங்கார ஊர்திகளென்ன... ஆர்ப்பாட்டமான அரங்குகளென்ன... கொங்குச் சீமை கோலாகலத்துடன் செம்மொழி மாநாட்டை கொண்டாடித் தீர்த்து விட்டது. தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது குடும்பத்தாருடன் சீரும் சிறப்புமாகக் கண்டு களித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் கருணாநிதியால் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழுக்கும், தமிழர்க்கும் என்ன செய்யப்போகிறது? இதனால் ஏற்படும் உலகளாவிய மாற்றங்கள் என்ன? அவற்றால் விளையும் தாக்கங்கள் எத்தகையதாய் இருக்கும்? என பல்வேறு கேள்விகள் நம்மைப் போட்டுக் குடைந்தாலும், அவற்றில் சிலவற்றிற்குக் விடை காண முற்பட்டபோது, மறுபடியும் கேள்விகளே வந்திறங்கின. அவற்றையும் இங்கு பகிர்ந்து கொள்வதே சிறப்பாக இருக்கும். உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தால் முடிவு செய்யப்படும் மாநாடு குறித்த அறிவிப்பு, தமிழக முதல்வர் கருணாநிதியால் ஏன் மேற்கொள்ளப்பட்டது? நெல்லை, குமரி போன்ற தமிழுக்குப் பெருமளவு தொண்டாற்றிய மாநகரங்கள் இருக்கும்போது, கோவை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அரசியல் பின்னணி யாது? 2011ஆம் ஆண்டில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்ற தமிழாராய்ச்சிக் கழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டே நடத்த வேண்டிய அவசரம் என்ன? இதற்கு முன்னர் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அப்பொதெல்லாம் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் அக்கறை கொள்ளாமல், ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு கருணாநிதி இரண்டகம் இழைத்துவிட்டார் என்று உலகத் தமிழர்களெல்லாம் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், தற்போது நடத்தப்படும் மாநாடு எதை மறைக்க?

தமிழ் இனத்தின் மேம்பாடு மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் இத்தனை ஆடம்பரங்கள் எதற்கு? தமிழுக்குத் தொண்டாற்றிய பல்வேறு அறிஞர்களையும், வறுமையில் வாடும் அவர்தம் குடும்பங்களையும் கண்டு கொள்ளாது, குறைந்தபட்சம் அவர்களுக்கு அழைப்பிதழ் கூட வழங்காது செம்மொழி மாநாட்டில் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதான் தமிழுக்கு ஆற்றுகின்ற தொண்டா? இப்படி எழுகின்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள், இதனைப் படிக்கின்ற வாசகர்களின் உள்ளக் குமுறலில்தான் புதைந்து கிடக்கின்றன.

ஒரு மொழியின் இருத்தல் என்பது, அந்த மொழியைப் பேசும் மக்களின் பொதுப்புழக்கத்தைத்தான் முழுவதுமாய் நம்பியிருக்கிறது. மக்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலும், நடை, உடை, பாவனைகளிலும், பேச்சு வழக்குகளிலும் தாய்மொழிக்கேயுரிய கூறுகள் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்பட வேண்டும். மொழி உணர்வுவயப்பட்ட மக்கள் இருந்தாலும், பொதுத் தளம் என்று வரும்போது, தங்களின் தாய்மொழிக்கு கொடுக்கின்ற முதன்மையில் தான் அந்த மொழியின் வாழ்வும், தாழ்வும் இருக்க முடியும் என்பது மொழி வல்லுநர்களின் வரையறை. ஆனால் தமிழ் மண்ணில் அப்படியொரு நிலை இருக்கிறதா என்பதை மனச்சான்றோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தொடக்க நிலையில் கல்வி பயில்கின்ற தமிழ்க் குழந்தைகள், தங்களின் பெற்றோரை அம்மா, அப்பா என்று அழகு தமிழில் அழைத்துவிட்டாலே மிகவும் வியப்பிற்குரிய விசயமாய் மாறிவிட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தை ஆங்கிலத்தில் பேச, எழுத, படிக்க வேண்டும் என்பதில் வெறி கொண்டு அலைகின்ற போக்கு இன்றைய தமிழகத்தின் இயல்பான நிலை. தொலைபேசி எண்களை தமிழில் விளக்கமாய்ச் சொன்னாலும் ஏறாத மண்டைகளில், அவ்வெண்களையே ஆங்கிலத்தில் சொல்லும்போது விரைவில் மூளைக்குள் பதியம் போட்டுக் கொள்கின்ற கூத்தை என்னவென்பது? ஒரு காலத்தில் மணிப்பிரவாள நடை என்றும், பண்டிதத் தமிழ் என்றும் கூறி வடமொழியை முன்னிறுத்தி தமிழ்மொழியை அழித்தொழிப்புச் செய்யும் பணிகள் நடைபெற்றபோது, தமிழறிஞர் மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் தோன்றி தனித்தமிழின் அருமையை மக்களுக்கு உணர்த்தினர். இதனால்தான் 'அபேட்சகர்' வேட்பாளரானார், 'அக்கிராசனார்' தலைவரானார், 'இராஷ்டிரபதி' குடியரசுத்தலைவரானார். இவையெல்லாம் தனித்தமிழ் இயக்கத்தின் தன்னலமற்ற பரப்புரையால் விளைந்த நன்மைகள். ஆனால், தூக்கியெறியப்பட்ட வடமொழியின் இடத்தில் இன்று ஆங்கிலம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இயல்பான வழக்கிலிருந்த பேருந்து 'பஸ்'ஆகவும், நேரம் 'டைம்'ஆகவும், வணக்கம் 'குட்மார்னிங்'ஆகவும், போய் வருகிறேன் 'டாட்டா, பை.. பை..'ஆகவும், ஆசிரியர் 'டீச்சர், சார்'ஆகவும் 'முன்னேற்றம்' கண்டுள்ளது. வடமொழிக்கலப்பு, தேசியக் கட்சிகளின் அல்லது மதவாத அமைப்புகளின் 'கொடை'யென்றால், ஆங்கிலக்கலப்பு, தமிழின் பெயரால் ஆட்சியமைத்த திராவிட இயக்கங்களின் 'திருப்பணி'யால் விளைந்ததாகும்.

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது வேறு; தாய்த்தமிழோடு பிற மொழியைக் கலந்து பேசுதல் என்பது வேறு. இவ்விரண்டு எதிர்நிலையையும் ஒன்றாய்ப்போட்டுக் குழப்பி, பிறமொழிக் கலப்பிற்கு எதிராய்ப் பேசுவோரை 'மொழிவெறியன்', 'தமிழ்த்தீவிரவாதி' என்று பகடி பேசுகின்ற நிலையும் இன்றைய தமிழகத்தின் இயல்பான போக்காய் உள்ளது. ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரிகின்றதோ, அத்தனை மனிதனுக்கு நிகரானவன் என்பது நிச்சயமான உண்மை. ஆனால், தமிழ்மொழியில் உரையாடும்போது, அந்த மொழியில் உரையாடுவதுதானே இயற்கை. கன்னடராகட்டும், தெலுங்கராகட்டும், மலையாளிகளாகட்டும், இந்தி மொழி பேசுகின்றவர்களாகட்டும் இவர்களில் எந்த இனத்தாரும் தங்கள் மொழியோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறார்களா அல்லது ஆங்கிலத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களா? சிந்தித்துப் பாருங்கள்! தமிழன் மட்டும் ஏன் இவ்வாறு மாறிப்போனான்? நம்மைச் சுற்றியுள்ள சூழல், ஊடகங்களின் நிலைப்பாடு, ஆட்சியாளர்களின் போக்கு. இவையே இந்த இழிநிலைக்கு முதன்மைக் காரணம்.

'மெல்லத் தமிழினிச் சாகும்!' என்று பாரதியும், 'தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ்தான் இல்லை' என்று புரட்சிக்கவிஞரும் மனம் நொந்து பாடிய நிலை இன்றைக்கும் தொடர்கிறது. அதனால் தான் வணிக நிறுவனங்கள், அங்காடிகளின் பெயர்ப்பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் அரசே வலியுறுத்துகின்ற நிலை. 'உலகமொழிகளுக்கெல்லாம் முதன்மையானது, பல்வேறு இலக்கியங்கள் எனது தாய்மொழியில் நிறைந்து கிடக்கின்றன, நான் பெருமை மிக்க தமிழினத்தில் பிறந்தவன்' என்ற இறுமாப்பும், செருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருக்குமானால் அல்லது நம்மை ஆண்ட அரசுகள் அப்படியொரு இன உணர்வுடன் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்குமானால் இப்படியெல்லாம் பேசுகின்ற, எழுதுகின்ற அவலநிலை தோன்றியிருக்குமா?

'ஆள் இறங்குது' என்று பயணிகளை பேருந்திலிருந்து, நிறுத்தங்களில் இறக்கிய நடத்துநர், இப்போது 'ஹோல்ட் ஆன்' என்று பொருள் புரியாமல் இயந்திரத்தனமாய் கூச்சலிடுவது, யாருடைய பொறுப்பற்றத்தனம்? அரசு தனது எல்லைக்குட்பட்ட அதிகாரத் தளங்களில் கூட, தமிழ்மொழியை வளர்ப்பதற்கான முயற்சியை பெருமளவு முன்னெடுக்கவில்லையே. இந்திய ஆட்சிப்பணியின் பொருட்டு கர்நாடகத்தில் பணி செய்ய வரும் பிற மொழி பேசுவோர், அடுத்த ஆறு மாதங்களுக்குள் கன்னடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த மாநில அரசு சட்டமியற்றியுள்ளது. மொழிக்குக் கேடென்றால், ஒட்டு மொத்த கர்நாடகமும் பொங்கி எழுகிறது. ஆனால் தமிழகத்தில், தமிழுக்கு கேடு நேரிடுகிறதே என்று எவரேனும் குரலுயர்த்தினால், அவர் தேச இறையாண்மைக்கு எதிராய்ப் பேசினார் என்று சிறையிலடைக்கும் நிலையே உள்ளது. மராட்டியத்திலும், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில், தங்களின் பேருந்துகளுக்குக் கூட அந்தந்த மாநில மொழிக்குரிய எண்ணையே பயன்படுத்த வேண்டும் என்று அதன் அரசுகள், சட்டமியற்றி மொழியுணர்வுடன் செயல் புரிகின்றன. சிலவேளைகளில் மருந்து கசக்கும் என்றாலும் குழந்தையின் நலன் தானே முக்கியம். அப்படியொரு சிந்தனை தமிழக அரசுக்கு மட்டும் இல்லாமல் போனதேன்?

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி, மதுரையிலுள்ள வழக்குரைஞர்கள் ஆறு பேர் பன்னிரெண்டு நாட்களுக்கும் மேலாக உண்ணாநோன்பிருந்தனர். கோரிக்கையிலுள்ள நியாயத்தைக் கூட, உணர மறுத்த தமிழக அரசு, ஒரு நள்ளிரவில் வழக்குரைஞர்கள் அனைவரையும் குற்றவாளிகளைப் போன்று கைது செய்தது. பல ஆண்டுகளாக தமிழக வழக்குரைஞர்களால் எழுப்பப்பட்டு வரும் இக்கோரிக்கை இந்திய ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தை ஆண்ட கட்சிகள் இதற்கொரு நிலையான தீர்வைக் காண முனைப்புக் காட்டவில்லை. அதுமட்டுமல்ல, தமிழ்மொழி கொஞ்சம் கூடத் தெரியாமல் முனைவர் பட்டம் வரை தனது படிப்பை மேற்கொள்ளும் மோசமான கல்வி முறை, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இருக்கிறது. இந்நிலையை மாற்றுவதற்குரிய முயற்சியை அண்மையில்தான் தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.

மொழி மற்றும் இன உணர்வை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கி ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இப்போதும் கல்வியில் தமிழ் புறக்கணிக்கப்படும் நிலையுள்ளதை யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் 'இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்ற நிலைக்குத்தான் உயர்ந்துள்ளதே தவிர, வழிபாட்டிலும் தமிழுக்குரிய இடம் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. நீதிமன்றம், கல்விக்கூடம், கோவில்களில் தமிழ் மொழியின் நிலை தாழ்ந்த நிலையில் இருக்கும்போதுதான் தமிழக அரசு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, உலகத் தரம் வாய்ந்த நூலகம் என்ற ஒரு சில தீர்மானங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக செம்மொழி மாநாடு பெரிதும் கவனம் பெறவில்லை. மானிய விலையில் சோறு என்பதைத்தான் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மார்தட்டி, பீற்றிக் கொண்டது. மாநாட்டின் நினைவாக கோவை காந்திபுரத்தில் பாலம் அமைக்கவும், தமிழின் வளர்ச்சிக்காகவும் தலா ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழக முதல்வர், பாலம் கட்டுவதையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் ஒரே அளவுகோலில் நிறுத்திப் பார்த்திருக்கிறார். செம்மொழி தமிழுக்குப் புகழ் மகுடம் ஏற்றியாயிற்று; உலகத் தமிழறிஞர்களெல்லாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளும் வழங்கியாயிற்று; மாநாடும் பல்வேறு விதமான ஆரவாரங்களோடு முடிந்தாயிற்று.

வழக்கம்போல் 'மைனாரிட்டி', 'மெஜாரிட்டி', 'அத்தாரிட்டி' என்று தமிழக முதல்வரின் அறிக்கை வாயிலாகவும், 'சஸ்பெண்ட்', 'பார்லிமெண்ட்', 'அசெம்பிளி' என்று தமிழ் ஏடுகளும், 'வியூவர்ஸ்', 'ஐ லைக்', 'தேங்க்யூ' 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' என்று மின்னணு ஊடகங்களும், 'மேரேஜ்', 'காலேஜ்', 'டீன் ஏஜ்', 'ஆண்ட்டி', 'அங்கிள்', 'டாட்டர்', 'சன்', 'பிரதர்', 'சிஸ்டர்' என்று பொதுத்தளத்திலும் தமிழ்மொழி மேலும், மேலும் 'வளரத்' தொடங்கியிருக்கிறது. 'என் தாய்மொழி நாளை அழிந்துவிடும் என்றால் இன்றைக்கே நான் செத்துப்போவேன்' 'ஆவார்' என்ற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கவிஞர் ரசூல் கம்சத்தேவ் சொன்ன வரலாற்றுச் சிறப்பு மிக்க வரிகள் இவை. தமிழைக் காப்பாற்றும் வழியிருக்கிறது; வகையிருக்கிறது; பலமிருக்கிறது. ஆனால், தாய்த் தமிழக மக்களுக்கோ இப்போதும் மனமில்லை. ஆகையால், தமிழர்களே... வாருங்கள்! நாம் ஒவ்வொருவரும் இன்றிலிருந்து சாகத் தொடங்குவோம்!

- இரா.சிவக்குமார் ( rrsiva@yahoo.com)

ஆக்டோபஸ் ஆருடம் - அடகு போன ஆறறிவு

வாலு போயி கத்தி வந்தது டும் டும்; கத்தி போயி மாம்பழம் வந்தது டும் டும் அப்டீன்னு நம்ம கொழந்தைங்க ஒரு கதப்பாட்டு பாடுவாங்க. அத மாதிரி, கிளி சோசியம், வெள்ளெலி சோசியம், முயல் சோசியமெல்லாம் போயி, இப்போ ஆக்டோபஸ் சோசியம்னு புதுசா ஒன்னு மொளச்சிருக்கு.

வெளயாட்டுப் போட்டில இப்பல்லாம் வெளயாட்டுத்தனம் அதிகமாயிடுச்சி. பின்னே ஆக்டோபசெல்லாங்கூட தீர்ப்பு சொல்ல ஆரம்பிச்சிடுச்சே! உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2010 ஆட்டத்தோட நாட்டாமை திரு.பால் (ஆக்டோபஸ்) தான் இப்ப உலகக் கதாநாயகன். நடந்து முடிஞ்ச உலகக்கோப்பைக் கால்பந்து போட்டில எந்ந நாடு சாம்பியனாகும்னு ஜெர்மன் அருங்காட்சியகத்துல இருக்கிற அந்த ஆக்டோபஸ்தான் நம்மஊர் நாட்டாமை கணக்கா தீர்ப்பு சொல்லியிருக்காம். இந்தக் கோதாவுல சிங்கப்பூர் கிளியும் இறங்கிச்சி. ஆனா அந்தப்பச்சக் கிளி பாவம் பயங்கர ஆக்டோபஸ் கிட்ட தோத்திடுச்சி போலருக்கு.

ஸ்பெயின்தான் 2010 கோப்பைய ஜெயிச்சிருக்கு. நெதர்லாந்து இரண்டாவது எடமும், ஜெர்மனி மூன்றாவது எடமும் பிடிச்சிருக்கு. கஷ்ட்டப்பட்டு வெளயாடி கோப்பைய வாங்குன ஸ்பெயின் நாட்டு வீரர்கள விட, கொடி இருந்த பொட்டிமேல கொஞ்சநேரம் (எதுக்கோ யாருக்குத் தெரியும்) ஒக்காந்து இருந்த ஆக்டோ பஸ்தான் இப்ப உலகக் கதாநாயகன். ஸ்பெயின் நாட்டு மக்களே நாட்டுக்குப் பெருமை சேத்த அவுங்க வீரர்கள விட்டுட்டு, ஜெர்மன் நாட்டு ஆக்டோபசைக் கொண்டாடிட்டு இருக்காங் கன்னா பாத்துக்கோங்க.

எல்லாத்தையும் விட ஒரு படி மேலேயே போயி, ஆக்டோபஸ் பாலுக்கு, ஸ்பெயின் அரசாங்கம் அந்த நாட்டோட கவுரவக் குடியுரிமை கொடுத்திருக்கு. ஸ்பெயினோட கார்போலினா நகர மேயர் கார்லோஸ் மொன்டீஸ், ஆக்டோபஸ் இருக்கிற ஜெர்மனியில இருக்கிற ஓபர் ஹாசன் அருங்காட்சயகத்துக்கே நேர்ல போயி அந்தக் குடியுரிமையைக் கொடுத்தாராம். ஆக்டோபசோட கையைப் பிடிச்சிக் குலுக்கி (எந்தக் கையன்னு புடிப்பாரு மனுசன்!) மரியாதையோட குடுத்தாரா இல்ல இதையும் கண்ணாடிப் பொட்டிக்குள்ள வச்சி தொட்டிக்குள்ள போட்டாரா?

அதவிடக் கொடுமை என்ன தெரியுமா, தலைநகர் தில்லியில கன்னார்ட் பிளேஸ்ங்கிற இடத்துல இருக்கிற, லிவ் பெட்ஸ் வேர்ல்ட் (செல்லப்பிராணிகள் கடை) அப்டீங்கற கடையோட உரிமையாளர் ராம் சரப் சொல்றது தான். ஆக்டோபச வீட்டுல செல்லப்பிராணியா வளக்க முடியுமான்னு கேட்டு நெறய தொலைபேசி அழைப்புகள் வருதாம். (நாய் கடிக்கே முழுசா மருந்து கண்டுபிடிக்கல, ஆக்டோபஸ் கடிச்சா...ஆத்தாடி...) அதுவும் உத்தியோகத்துல இருக்கிறவங்க கூட இப்படி கேக்குறாங்களாம். படிப்பு ரொம்ப முத்திப்போச்சி போல.

திறமை, முயற்சி, பயிற்சி - இந்த மூனு மட்டுமே ஆட்சி செஞ்சிட்டிருந்த வெளயாட்டுல, இப்ப இதுக்கெல்லாம் மதிப்பில்லாமப் போச்சி. மூடநம்பிக்கைள் அதிகமா இருக்கிறது இந்த வெளயாட்டுத் துறையிலதான். அஞ்சு வயசுல கட்டுன அறுணாக்கயிற கையில கட்டிக்கிறது, மைதானத்துக்குள்ள கால நொழைக்கிறதுக்கு முன்னாடி பேட்ட நொழைக்கிறது, சாமியார் எப்பவோ பூசையில் வச்சிக்குடுத்த அழுகிப்போன எலுமிச்சம்பழத்த எங்கவெளயாடப் போனாலும் கொண்டுபோறதுன்னு எக்கச்சக்கமா வெற்றிக் கான சூத்திரங்கள நம்ம வீரர்கள் வச்சிருக்கிறது நமக்குத் தெரியும். இதெல் லாம் சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிற மாதிரி அவுங்கள அவுங்களே அசிங்கப்படுத்திக்கிறது.

ஆனா இந்த ஆக்டோபஸ் ஜோசியம் அப்ப டியில்ல. உசுரக் குடுத்து வெளயாடுன 736 வீரர்கள, உத்து உத்துப் பாத்து பயிற்சி குடுத்த பயிற்சியாளர்கள ஒட்டு மொத்தமா அசிங்கப் படுத்திட்டாங்களே...சே. 32 நாடுகள், 736 வீரர்கள், ஒரே கோப்பை - வெல்லப்போவது யாருன்னு எட்டுக்கட்டையில கத்தி விளம்பரப்படுத்தி என்ன செய்ய, வாய் எது, கை எதுன்னே தெரியாத கடல் ஜந்து ஆக்டோபஸ், அதுகிட்ட எல்லாத்தையும் அடகுவச்சிட்டாங்களே!

ஒத்த கோல் அடிக்கிறதுக்குள்ள, ஒன்னுக் குப்போன மாதிரி, வேர்வையில கால்சட்டை நனைஞ்சிறுது பாவம் ஒவ்வொருத்தருக்கும். ஆனா,தேனெடுக்றவன் ஒருத்தன் பொறங்கைய நக்குறவன் இன்னொருத்தன்ற கணக்கா, உசுரக் குடுத்து கால்பந்தாட்ட வீரர்கள் வெளயாடி கோல்போட்டு ஜெயிச்சா, ஆக்டோபஸ் சொன்ன ஜோசியம் பலிச்சிடுச்சின்னு கோட்டு போட்டவன்ல இருந்து கோமணம் கட்டுனவன் வரைக்கும் கூத்தாடுறானுங்க. சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு...பரபரப்புக்கும், பப்ளிசிட் டிக்கும் ஆசப்பட்டு யாரோ சில பேரு அவுத்துவுட்ட சரடு. சரடு வுடறதும், வுட்டவன் யாருன்னு பாக்காமா, என்ன ஏதுன்னு ஆராயமா அப்படியே அதப்பிடிச்சிட்டுத் தொங்குறதுதான நம்மாளுங்க லட்சணம். அதனாலதான் அப்பப்ப இதுமாதிரி நெறய படங்காட்டுறாங்க.

எந்த ஒரு விலங்கும், தான் இருக்கிற பகுதிக்குள்ள புதுசா ஏதாவது வந்துச்சின்னா, தற்காப்புக்காக அதுமேல பாய்ஞ்சி வளைக்கத்தானே செய்யும் ? அதத்தான் இந்த ஆக்டோபசும் செஞ்சிருக்கு. அதுலயும், அதுக்குப் பிடிச்ச உணவோட ஒரு கண்ணாடிப்பொட்டிய வச்சா அப்படியே லபக்குன்னு புடிச்சிக்கிடாதா? ஒரே நேரத்துல இரண்டு பொட்டில இருக்கிற இரையையும் எடுத்து சாப்பிட முடியாதுல்ல, அதான் ஒரு பொட்டிய தொறந்து தின்னுட்டு, கஷ்ட்டப்பட்டு பொட்டியத் தொறந்த களைப்புலயும், தின்ன மயக்கத்துலயும் அந்த பொட்டி மேலயே கொஞ்ச நேரம் அசந்து படுத்திருக்கும். அசதி தீந்து அடுத்து பொட்டிக்குள்ள வாய் வக்கிறதுக்குள்ள, என்னெ ன்ன கதகட்டி வுட்டாங்க பாத்திங்களா!

ஆக்டோபசுக்கு ஏற்பட்டிருக்குற மவுசப் பாத்து, சோதிட ரத்னாக்கள், சோதிட திலகங்கள், சிகரங்கள், மலைகள், மண்மேடுகள் எல்லாம்வேற பதட்டத்துல இருக்காங்க. பின்னே தொழில்ல போட்டி அதிகமாயிருச்சே!

அதோட வெளயாட்டுத்துறைக்கு ஒரு யோசன சொல்லாம்னு... எதுக்கு கோடிக்கணக்கா பணம் செலவு செஞ்சி, விளம்பரப்படுத்தி, வெளயாட்டு வீரர்களோட ஒடம்பயும் புண்ணாக்கி தேவையில்லாத வேலையயல்லாம் பாத்துக்கிட்டு, பேசாம ஓடுறதோ, நீந்துறதோ எதையாவது ஒன்ன புடிச்சி முடிவ அறிவிக்கச் சொல்லி, கோப்பையக் குடுத்துட்டா பணமும் மிச்சமாகும், புதுமை யாவும் இருக்கும்ல. என்ன நாஞ்சொல்றது? (வர்ற அக்டோபர்ல இந்தி யாவில காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்கப்போற நேரத்துல நல்ல யோசனையில்ல?)

ஆறறிவு, அஞ்சறி வுகிட்ட அடகு போனத நென‌ச்சா வேதனையா இருக்கு.

தனிமனித சுதந்திரம்கிறது மனுசனுக்கு மட்டுந்தானா? புளு கிராசு, அது இதுன்னு என்னென்னவோ அமைப்புகள் எல்லாம் இருக்குதே, பேசாம மிருகவதைச் தடுப்புச் சட்டத்துக்குக் கீழ இவங்களப் பிடிச்சி உள்ள தள்ளவேண்டியதுதான!

- இலக்கியா

Saturday, July 10, 2010

ஜனநாயக கடமையாற்றும் பத்திரிக்கை எது?


ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைத்துறை இன்று தன் கடமையை மறந்து முழுக்க முழுக்க வணிக நோக்கிலேயே செயல்படுகின்றன. நாட்டுக்கு நல்லது உரைத்திட வேண்டிய இந்தத்துறை திரைப்படங்களையும், அது சார்ந்த மக்களையுமே முன்னிறுத்தி செய்திகளை வெளியிடுகின்றன. அதிலும் குறிப்பாக குமுதம், குங்குமம் போன்ற வார இதழ்கள் 99.9999 % சினிமா பற்றிய செய்திகளையே வெளியிடுவதுடன் அதில் நடிப்பவர்களை ஏதோ உலகின் ஒட்டுமொத்த சாகச வீரர்களாக வெளிப்படுத்துவது கண்டனத்திற்குரியது.

தொடக்க காலத்தில் இருந்த பொலிவினை, மரியாதையினை இன்று குமுதம் முற்றிலுமாக இழந்துவிட்டது. ஆனந்த விகடன் ஏதோ தப்பி பிழைத்துக்கொண்டாலும் இன்னும் எத்தனை நாளுக்கு என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கின்றது. குங்குமம் ஒரு குப்பை என்பதனால் அதை ஆரம்பத்திலேயே ஒதுக்கிவிடலாம்.

மக்களிடத்தே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை செய்திகளாக வெளியிடும்போது நடுநிலையுடன் வெளியிடுவதும் பத்தரிக்கைத்துறையின் அடிப்படைத் தர்மம். இந்த அடிப்படைத் தர்மத்தைக்கூட பின்பற்றாதது ஜனநாயகத்தின் சாபக்கேடு.

          











கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தவறான உறவு, அழகிகள் கைது போன்றவற்றை மட்டுமே சூடான முக்கிய செய்திகளாக அன்றாடம் வெளியிட்டு வந்த தினத்தந்தியின் பாணியை இன்றைய எல்லா தினசரிகளும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது. அதிலும் குறிப்பாக சில தினசரிகள் தவறான உறவுமுறையை ஆதரிப்பது போலவும், ஊக்குவிப்பது போலவும் செய்திகளை வெளியிடுவது இந்திய கலாசாரத்திற்கும் தமிழக பண்பாட்டிற்கும் எதிரானது. இவர்கள் ஆபாச அட்டைப்படங்களை வெளியிட்டு பணம் சம்பாதிப்பது ஒருவகையில் அதுவும் விபச்சாரம் தான். இத்தகைய படுபாதக செயலை இவர்கள் எதை எதிர்பார்த்து செய்கிறார்கள்?

“லாரி டமால்; டிரைவர் பனால்” போன்ற மலிவான வாசகங்களை அமைத்து செய்திகளை வெளியிடும் நாளிதழ்களை என்னவென்று சொல்வது?

மக்களின் மனதில் மறைந்திருக்கும் கொடூர எண்ணங்களுக்கு தீனி போடும் விதமாக செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் இத்தகைய நாளிதழ்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டியவை.

ஒவ்வொரு தனிமனிதனையும் நேரடியாக சென்றடையும் சக்திவாய்ந்த ஊடகங்களான இவர்கள், நாட்டின் தலைவிதியையே மாற்றக் கூடிய இவர்கள் தம் கடமையை மறந்து செயல்படுவதை ஒருபோதும் ஏற்கலாகாது.

அரசின் கொள்கைகளில், செயல்பாட்டில், திட்டங்களில் இருக்கும் தவறுகளை, ஓட்டைகளை மக்களிடத்தே அம்பலப்படுத்தி அரசையும் மக்களையும் இணைக்கும் பாலமாக செயலாற்றுவது இன்றைய நிலையில் மிகச்சில பத்தரிக்கைகளே. தவறுகளை எடுத்துரைத்தும், இடித்துரைத்தும் செயலாற்றும் பத்தரிக்கையாக இன்றைய நிலையில் தினமணியைக் குறிப்பிடலாம். முக்கிய, தரமான செய்திகளை மட்டுமே வெளியிடுவதுடன் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவதிலும் குறிப்பிடும்படியாக செயல்படுகின்றனர்.

‘தலையங்கம்’ பகுதியில் நாளும் வெளியிடப்படும் தினமணியின் குரலில் 100 % உண்மையும், நியாயமும் ஓங்கி ஒலிக்கின்றது. சேற்றில் முளைத்த செந்தாமரை .....
வாழ்க தினமணி!!!

Friday, July 9, 2010

இலங்கைத் தமிழர்களும் தமிழக மக்களும்

சூரியன் நிரந்தரமாக இவ்வுலகத்தைவிட்டு மறைந்துவிட்டதோ என்ற உணர்வுடனும், கனத்த இதயத்துடனும் இதனை எழுதுகிறேன்.
முப்பது ஆண்டுகால கடும்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணிலடங்கா உயிர்களை பறிகொடுத்துள்ள இந்தப் போர் தமிழரின் போர். இலங்கையின் பூர்வகுடிமக்களான தமிழ் மக்கள், தம் அடிமைத்தனத்தை உடைத்தெறிக்க மேற்கொண்ட சுதந்திரப் போர். இனமான உணர்வுகொண்ட மக்கள் வெகுண்டெழுந்து, தம் உரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட உரிமைப் போர். பல இலட்சக்கணக்கான உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்த நம் தமிழ்மக்களின் எண்ணற்ற சகோதரிகளின் மானத்தை சூறையாண்ட சிங்களவர்களுக்கு எதிராக மேற்கொண்ட தியாகப் போர். ஆம், அத்தகைய போர்தான் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஒரு நாள் நாடு திரும்புவோம் என்ற எண்ணத்தில் நாட்களை கடத்திவந்த புலம்பெயர் தமிழர்களின் எண்ணம் முடிவுக்கு வந்துள்ளது. நாமெல்லோரும் பேசும் மொழியால், இனத்தால் தமிழர் என்ற எண்ணமும் முடிவுக்கு வந்துள்ளது. ஏன் முடிவுக்கு வந்தது?
இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றியதான பார்வை தமிழத்தில் பெருவாரியான மக்களுக்கு கிடையாது. நம் தொப்புள்கொடி உறவுகள் அங்கே நாளும் செத்து மடிகிறார்கள் என்று எல்லாகட்டங்களிலும் வலியுறுத்தி வரும் தன்னலமற்ற தலைவர் வைகோ அவர்களின் வார்த்தைகள் கடைசிவரை வெறும் வார்த்தைகளாகவே இருந்துவிட்டன. அங்கே கஷ்டப்படுவது நம் இனம், நம் உறவு, நம் இரத்தம் என்கின்ற எண்ணம் உளப்பூர்வமாக தமிழக மக்களுக்கு இல்லாததுதான் இன்றைய திமுக-காங்கிரசு கூட்டணியின் வெற்றிக்கு உண்மையான காரணம். சுமார் 15% மக்களுக்கு மட்டுமே முன்கூறிய எண்ணமிருந்ததே தவிர, மீதமுள்ள 85% மக்களுக்கு தினையளவு கூட கிடையாது. என்னதான், அரசியல் கட்சிகள் இலங்கைத்தமிழர் பிரச்சினையை பூதாகாரமாக்கி கொண்டு சென்றும் தமிழக மக்களிடத்தே அது எடுபடாததற்கு காரணம், அவர்களிடத்தே தேசியப்பார்வையும், உணர்வும் இல்லாததுதான்.

இலங்கைத்தமிழர் மானம் காப்பாற்ற புறப்பட்ட விடுதலைபுலிகளை தீவிரவாத இயக்கம் என பொய்பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரசிடம் இந்த மக்கள் பலியாகிவிட்டனர். உண்மைநிலையை கண்டறியும், அதனை பிரித்துப்பார்க்கும் பகுத்தறிவில்லாத இவர்கள் பொய் இங்கே உண்மை என்ற மாறுவேடம் பூண்டு நம்மை ஏமாற்றுகிறது என்பதை இன்றுவரை அறிந்திலர். சுயநலத்தின் ஊற்றுகளாக மாறிவிட்ட இவர்கள் தன் குடும்பம், தன் சாதி என்ற மிகச்சிறிய வட்டத்துக்குள் தம்மை கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டனர், விலங்குகளைப்போல. மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட நம் தமிழ்மக்கள் அங்கே நாளும் இரத்தவெள்ளத்தில் மடிகின்றனர் என்ற செய்தியை கேட்டும், பார்த்தும் எந்தவிதமான எதிர்விளைவுகளையும் காட்டாத கற்களாகிவிட்டனர் இவர்கள். பணத்திற்காக உடலை விற்கும் வேசியரைப்போல, பணத்திற்காக ஓட்டுக்களை விற்கும் இவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும்?
தன் மக்கள் படும் கஷ்டத்தை எப்படித் தாய் சகித்துக்கொள்ள மாட்டாளோ, பொறுத்துக்கொள்ள மாட்டாளோ அதைப்போல, தீயிலிட்டப் புழு எப்படி துடிதுடிக்கிறதோ அதைப்போல இலங்கைத்தமிழர் கொன்றொழிக்கப்படுவதை கண்டு துடித்த வைகோ அவர்களை, இலங்கைத்தமிழர் பிரச்சனைக்காக தம் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்ட அவரை, பணத்திற்கு பலியாகி ஓட்டுக்களை சாத்தானுக்கு விற்றுவிட்ட அம்மக்கள் தோற்கடித்துவிட்டனர். காரணம், இங்கே உறவுகளை தீர்மானிப்பது பணம்தானே தவிர, இன உணர்வோ, மொழியுணர்வோ கிடையாது. இவையிரண்டும் கூட தேவையில்லை. மனிதாபிமானம் இருந்தால் கூட போதும், சகமனிதன் கஷ்டப்படுவதை தாங்காது அவனுக்கு ஓடோடிச்சென்று உதவும் மனிதாபிமானம் இன்று தமிழகத்திலே எங்குமில்லை. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறிய வள்ளலார் பிறந்த தமிழகமா இது? “தனியொருவனுக்கு உணவில்லையெனில் (வெறும் உணவில்லையென்றாலெ கூட) ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கூறிய பாரதி பிறந்த தமிழகமா இது? சுதந்திரத்திற்கு முன் இருந்த தேசியப்பார்வையும், இன உணர்வும் இன்று தமிழகத்திலே இல்லையென்பதுதான் அப்பட்டமான உண்மை.
உலகில் இதுவரை எங்குமே நடந்தேயிராத மாபெரும் இனப்படுகொலையை தொடர்ந்து அரங்கேற்றிவரும் இலங்கை சிங்கள இராணுவ அரசிற்கு, இந்தியா அனைத்து உதவிகளையும் செய்துவருவதை தமிழகத்திலுள்ள வெகுஜன மக்கள் எதிர்க்காதது ஏன்? அங்கே நடக்கும் கொடுந்துயரங்களை இவர்கள் அறிந்திருந்தும் வாய்மூடி மெளனம் காப்பதோடு, மத்தியில் ஆளும் பாசிச காங்கிரசு அரசிற்கு துணைபோகும் கபடநாட சூத்திரதாரி கருணாநிதியை ஆதரிப்பதேன்? தன்னைப்பிடிக்க பெருங்குழியொன்று தோண்டப்பட்டிருப்பதை அறிந்திராத யானை, அக்குழியின் மேற்பரப்பில் போடப்பட்டிருக்கும் இலைகளை உண்ணவருவதைப் போன்றதான அறிவிலிச் செயல்களை இந்ததேர்தலிலும் தொடர்ந்துவிட்டனரே இவர்கள்!. ஐயகோ! என் தமிழ்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படப்போவது எப்போது? இலங்கைத்தமிழர் பிரச்சனை தம்மிலிருந்து விலகியதான ஒரு பிரச்சனை என்று எண்ணிகொண்டிருக்கும் இவர்களை திருத்த இன்னும் எத்தனை வைகோக்களை எதிர்பார்க்கின்றனர்? (அரசியல் காரணங்களுக்காக வைகோ அவர்கள் எடுத்த முடிவுகளில் சிலவற்றுள் எனக்கும் மாற்றுக்கருத்துண்டு. ஆனால், இலங்கைத்தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட தான் எத்தகைய துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கத் தயார் என்று சூளூரைத்து எத்தகைய சூழ்நிலையிலும் அதனிலிருந்து பிறழாது, தொடர்ந்து ஆதரித்துவரும் ஒரேத் தலைவர் என்பதனால் அவரை இங்கே முன்மொழிகின்றேன்.)
“பெரும்பான்மை என்கிற எண்ணிக்கைதான் ஜனநாயகத்தை ஆளுகிறது” என்பர். சரியென்பதையும், தவறென்பதையும் தீர்மானிப்பது இந்த ‘பெரும்பான்மை’ தான். அத்தகைய ‘பெரும்பான்மை’ இலங்கைத்தமிழர் பிரச்சனையை கையிலெடுக்காதவரை தற்போதுள்ள சூழ்நிலையில் அங்கு தீர்வு ஏற்பட வழியில்லை. ஆம், தமிழகமே ஒன்றுகூடி, வெகுண்டெழுந்து போராடினால் மட்டுமே அங்குள்ள எம்மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும். இந்தியாவையே ஸ்தம்பிக்கச் செய்யும் வரலாற்றுப்போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழகமும் தீவிரமாக மேற்கொண்டால் மட்டுமே அங்குள்ள எம்மக்களின் வாழ்வு மலரும்.
 என் சகோதரனே! மரணத்தின் வாயிலில் சிக்கி செத்துக்கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்று! என்னைக் காப்பாற்று!!

Thursday, July 8, 2010

அங்காடித் தெரு

சங்கத் தமிழில் பெயரைத் தாங்கிச் சமூக அவலத்தைப் பேச வந்துள்ள படம் அங்காடித் தெரு. ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற வெயில் திரைப்படத்தின் இயக்குனர் ஜி.வசந்தபாலனின் மூன்றாவது படம் இது.
angadi_theru_247சென்னை, தியாகராயநகரிலுள்ள ரங்கநாதன் தெருவிற்குச் செல்லாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. பெரும் அளவிலான மக்கள் கூட்டம் வந்து செல்லும் பகுதி; கோடிகளில் புரளும் வியாபார நிறுவனங்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்ற பகுதி. அங்கே மனிதர்களுக்கு மதிப்பில்லை. விற்கின்ற பொருளுக்கும், வாங்குகின்ற பணத்திற்கும் மட்டும்தான் மதிப்பு. அப்படிப்பட்ட ரங்கநாதன் தெருதான் படத்தின் களம். அங்குள்ள பெரியபெரிய கடைகளில், விற்பனையாளர்களாகப் பணிபுரியும் தொழிளார்களும், அதே தெருவின் நடைபாதை ஓரங்களில் கடைபோட்டுப் பிழைப்பை ஓட்டும் ஏழை வியாபாரிகளும் இந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள். பெருமுதலாளிகளின் உழைப்புச் சுரண்டலும், சட்ட மீறல்களும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளும், இந்த ஆக்டோபஸ் கரங்களில் சிக்கிச் சீரழியும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்தான் அங்காடித்தெருவின் கதை.
சுதந்திரப் போராட்டத்தைச் சித்தரிக்கின்ற படங்களில், போராட்டக்காரர்களைக் கொடுமைப்படுத்துகின்ற சிறைச்சாலைகளைப் பார்த்திருப்போம். அதற்கு சற்றும் குறைந்ததல்ல, இந்தத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களும், அவர்களுக்கான உணவுச்சாலையும். அது நாட்டுவிடுதலைக்கான போராட்டம். இது நாட்டிலுள்ள வறுமைக்கெதிரான போராட்டம்.
வறட்சியான தேரிக்காட்டுப் பூமிகளிலிருந்து பிழைப்புத் தேடிப் பெருநகரங்களுக்கு வருபவர்கள், வறுமையை விரட்டுகின்ற போராட்டத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவன்தான் நமது கதாநாயகன் ஜோதி லிங்கம். 12 ஆம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றும் மேல் படிப்பு கனவாகிப்போகிறது தந்தையின் எதிர்பாராத மரணத்தால். தங்கைகளின் எதிர்காலம், குடும்பத்தின் வறுமைச் சூழல் - வேலைதேடியவனைச் சென்னை செந்தில் முருகன் ஸ்டோரில் கொண்டு வந்து அடைத்துவிடுகிறது.
“ஆம்பளப்பிள்ளைனா மூட்டை தூக்கியாச்சும் கடைசிக் காலத்துல ஒரு வாய் கஞ்சி ஊத்துவான். பொட்டப்புள்ள செய்யுமா?” என்ற பேச்சை இப்போதும் பரவலாகக் கேட்கலாம். அது ஆணாதிக்கத்தின் அகராதி வரி அவ்வளவுதான்.
குடும்ப வறுமைக்காக வேலைக்குப் போகின்ற இடத்தில், ஆண்பிள்ளைகளுக்கு அடிஉதையோடு போய்விடுகிறது. அடி உதைகளோடு, கருங்காலி போன்ற அண்ணாச்சிகளின் பாலியல் தொல்லைகளையும் பெண்பிள்ளைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“என் மாரப் பிடிச்சிக் கசக்கினான். நான் பேசாம இருந்தேன்” என்று தன்னை வேலையை விட்டுத் தூக்காமல் விட்டதற்குக் காரணம் சொல்லும் கதாநாயகி கனியின் கண்ணீர் திராவகமாக நம் நெஞ்சை எரிக்கிறது. இத்தனையையும் அந்தப் பெண்கள் குடும்பத்திற்காகத் தானே சகித்துக் கொள்கின்றனர்.
வேலைக்கு ஆட்கள் எடுக்குமிடத்தில், “அப்பன் இல்லாதவனா, சோத்துக்கு வழியில்லாதவனாப் பாத்து எடு. அப்பத்தான் நாம சொல்றதக் கேட்டு ஒழுங்கா வேல செய்வான்” என்று ஒருவன் சொல்லுவான். அந்த மக்களின் வறுமை, முதலாளிகளின் முதலீடுகளின் ஒரு பகுதியாகிவிட்டதைப் பார்க்க முடிகிறது.
vasanthabalanதலைநகரில் கால்வைத்ததும் அந்தக் கிராமத்துப் பிள்ளைகளின் முகங்களில் தோன்றிய மகிழ்ச்சியும் சிரிப்பும், செந்தில் முருகன் ஸ்டோருக்குள் நுழைந்தபிறகு காணாமல் போய்விடுகிறது. சீருடையும், அடையாள அட்டையும் அணிந்துள்ள நவீன அடிமைகளாக ஆகிவிடுகின்றனர். உணவுக்கான இடைவேளை முடிந்து ஒரு நிமிடம் தாமதாக வந்தாலும் ஐந்து ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்துவிடுவோம் என்று சொன்னதை நினைத்து அவசர அவசரமாகச் சோற்றை விழுங்கி விட்டு ஓடி வந்து வருகையைப் பதிவு செய்தபிறகு அந்த உழைப்பாளிகள் விடுகின்ற பெருமூச்சு சமூகத்தின் பேரவலம். ஒரு வேளை உணவுக்காகத் தான் இந்தப்பாடு. ஆனால் அதைக்கூட ஆற அமர உண்ண முடியாமல் ஓட வேண்டிய அவலத்தை என்னவென்று சொல்வது.
அவ்வப்போது தன்மானம் தலைகாட்டினாலும், ஒன்னாந்தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தங்களுடைய குடும்பங்களை நினைத்து அடிகளையும், வசவுகளையும் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலை.
வாடிக்கையாளர் சேவையில் சிறந்தது தங்களுடைய நிறுவனம்தான் என்னும் விளம்பரத்திற்காகத் தன்னுடைய தொழிலாளர்களை மனிதாபிமானமே இல்லாமல் நடத்துகின்றன சில நிர்வாகங்கள். வாடிக்கையாளர் கேட்கின்ற வண்ணத்தில் புடவைகளை எடுத்துவரும்படி லிங்கத்தை நான்கைந்து மாடிகள், ஐந்தாறு முறை ஏறி இறங்க வைக்கும் கருங்காலியின் கருணையற்ற செயலின் மூலம் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அத்தனை வேதனைகளுக்கு மத்தியிலும் அந்தத் தொழிலாளர்களின் மனம் ஆறுதல் அடைகின்ற ஒரே இடமாக அவர்களுக்கிடையே மலர்கின்ற காதல் இருக்கின்றது. உயிரியற்கையான காதல் உழைக்கின்ற ஏழைகளைத் தீண்டாதா; அப்படித் தீண்டினால் அது குற்றமா? ஆமாம் குற்றம் தான் என்கிறது அண்ணாச்சிகளின் அகராதி. பொட்டக் கழுதைக்கு என்னடி காதல் வேண்டிக்கிடக்கு என்று கத்துகின்ற அண்ணாச்சிக்கு, அவளுடைய உழைப்பு மட்டும் வேண்டும். ஆனாலும் காதலை வறுமை சில நேரங்களில் வென்றுவிடுகிறது என்பதைக் காதலித்ததை மறைக்கும், காதலை மறுக்கும் செளந்திரபாண்டியனின் இயலாத நிலை காட்டுகிறது.
காதலில் உறுதியாக நின்று, சுதந்திரப்பறவைகளாகச் சிறகடித்துப் பறக்கத் தொடங்கும் வேளையில், கால் இரண்டையும் விபத்தில் இழக்கிறாள் கனி. அந்த நிலையிலும் நாம் நாளைக்கே திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லும் உறுதியைத் தருகிறது லிங்கத்தின் காதல்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு செய்தியைச் சொல்கிறது. குள்ள மனிதனைத் திருமணம் செய்து கொள்ளும் பெண், தன் கணவனைப் போலத்தான் தனக்குக் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதற்குச் சொல்லும் காரணம், கற்பு என்னும் கற்பிதத்தை இந்தச் சமூகம் எவ்வளவு உறுதியாக மக்களின் மனத்தில் பதிய வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
சென்னை போன்ற பெரு நகரங்களைப் பொறுத்தவரையில், நேர்மையாக உழைத்து வாழ்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை, கட்டணக் கழிவறை நடத்தும் இளைஞன் உணர்த்துகிறான்.
‘பொருளை விற்கத் தெரிந்தவனே வாழத்தெரிந்தவன்’ என்று பார்வையில்லாத அந்தப் பெரியவர் சொல்லும் போது பொருளாதாரத்தின் தாக்கம் தெரிகிறது.
அந்தத் தெருவுக்குச் செல்பவர்கள் வாடிக்கையாளர்களாகவும், நுகர்வோர்களாகவும் மட்டுமே இருக்கின்றனர். யாரும் மனிதர்களாகச் செல்லவில்லை. அங்கிருப்பவர்களையும் மனிதர்களாகப் பார்ப்பதில்லை. இந்தப் படம் அப்படிப்பட்டவர்களிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.
பாடல்கள் அனைத்தும் இனிமை. கள்ளிச்செடியின் பின்புலத்தில் ஸ்ட்ரா பெர்ரியை காட்டிய காட்சி, வர்க்க அரசியலைப் பேசாமல் பேசுகிறது. அழகிய கவிதையாகத் தொடங்குகின்ற லிங்கம் - கனி இருவரின் வாழ்க்கையைத் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பளபளப்பான விளம்பர உலகத்திற்குப் பின்னால் இருக்கின்ற தொழிலாளர்களின் இருண்ட வாழ்க்கையைச் சற்றும் மிகைப்படுத்தாமல் காட்சிப்படுத்தியிருக்கின்ற இயக்குனர் ஜி.வசந்தபாலன் பாராட்டுக்குரியவர். இந்தப் படம் வெளிவந்த பிறகு, ரங்கநாதன் தெருவில் தொழிலாளர் நலத்துறையினர் சோதனையிட்ட செய்திகள் நாளேடுகளில் வெளிவந்தன. இது இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றி என்றால் மிகையில்லை.
முதலாளிகளின் மூர்க்கத்தனமான பணவேட்டைக்குப் பலியிடப்படும் தொழிலாளர்களின் பரிதாபமான நிலையை இதைவிடத் துணிச்சலாக, இதைவிடச் சரியாக யாரும் சொல்லிவிடமுடியாது.