Sunday, June 13, 2010

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?


டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதிகளும் அந்த தகவல்களை சொல்லும்படி கூகுள் நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்கள். இப்போது டாக்ஸிக் ரைட்டரின் வலைப்பதிவு ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். வலைப்பதிவு அழிக்கபட்டது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் இதே போன்று ஒரு வழக்கு நடந்தது. ஒரு வலைப்பதிவர் தனது ஊர் முனசிபல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அந்த அரசியல்வாதிகள், சம்பந்தபட்ட வலைப்பதிவர் மீது தங்களது ஊர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்கள். இஸ்ரேல் நீதிமன்றம் அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனத்தார் தெரிவிக்க வேண்டுமென கேட்டது. கூகுள் நிறுவனம் சார்பாக ஆஜரான வக்கீல்கள் வலைப்பதிவர் சம்பந்தமான தகவல்களை கொடுப்பது கருத்துரிமைக்கு எதிரானது என முதலில் வாதிட்டார்கள். இஸ்ரேல் நீதிபதி இந்த பிரச்சனையில் கிரிமினல் நடத்தை இருப்பதாக சந்தேகபடுவதாக சொன்னவுடன் கூகுள் மறுபேச்சு பேசாமல் தன் வலைப்பதிவரின் IP நம்பரை கொடுத்தது மட்டுமல்ல, அந்த வலைப்பதிவினை அழித்தும் விட்டது. இப்போது அந்த வலைப்பதிவின் முகவரியில் வேறு யாரும் பதிவு தொடங்க முடியாது என கூகுள் அறிவித்து இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு மகாராஸ்டிரா அரசியல் தலைவர் பால் தாக்கரேயினை கொல்வதாக இணையத்தில் கருத்து சொன்ன ஓர் ஆர்குட் உறுப்பினரை கேரளாவில் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தார்கள். அதோடு பால் தாக்கரேக்கு எதிராக ஆர்குட்டில் ஏற்படுத்தபட்டு இருக்கும் குழுக்களில் உள்ள உறுப்பினர்களை கண்காணிக்கவும் காவல்துறையினரால் முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றன. கருத்தளவில் எனக்கு பால் தாக்கரேயின் மீது கோபம் இருந்து நான் என்றோ ஒரு நாள் பால் தாக்கரேயினை விமர்சிக்கும் குழுவில் உறுப்பினராகி பிறகு அதனை மறந்து விட்டால் கூட இன்று நான் காவல்துறையினரால் கைது செய்யபடும் ஆபத்து இருக்கிறது.
கடந்த ஆண்டு எகிப்தில் 22 வயது மாணவர் அப்துல் கரீம் தனது வலைப்பதிவில் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், எகிப்திய ஜனாதிபதியை பற்றி தவறான கருத்துகளை சொன்னதற்காகவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டார் என்பதை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். எகிப்தில் அப்துல் மோனம் மகமூத் என்கிற வலைப்பதிவரும் தன் வலைப்பதிவில் எழுதிய விஷயத்திற்காக 46 நாட்கள் சிறையில் இருந்தார். சீனாவில் அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதும் வலைப்பதிவர்களின் பக்கங்களை தடை செய்து விட்டார்கள் என கேள்விபட்டிருக்கிறோம். சவுதி அரேபியாவில் தனது உண்மையான பெயரை வெளிப்படையாக சொல்லி வலைப்பதிவு நடத்திய ஃபகுத் அல் ஃபர்கான் கடந்த ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் பத்தாம் நாள் கைது செய்யபட்டார்.
இங்கிலாந்தில் வாழும் 31 வயது பால் ரே என்பவர் லயன் ஹார்ட் என்னும் புனை பெயரில் வலைப்பதிவு எழுதி கொண்டு வந்தார். போதை பொருள் கள்ள வணிகம், இஸ்லாமிய அடிப்படைவாதம், காவல்துறை ஊழல் பற்றி அவரது வலைப்பதிவில் கருத்துகள் எழுதினார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இவரது எழுத்துகளினால் உண்டான பரபரப்பை அடுத்து இவருக்கு எதிராக இங்கிலாந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிருபிக்கபட்டால் அவருக்கு ஏழு வருடம் வரை தண்டனை கிடைக்கலாம். தற்போது அவர் அமெரிக்காவிற்கு குடி பெயர முடிவெடுத்திருக்கிறார்.
இப்போது எழும் கேளவி இது தான்? அரசியல்வாதிகளையோ பெரும் நிறுவனங்களையோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு பாதுகாப்பு உண்டா? நம்மூர் பெருந்தலைகளுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் கிடையாது என்பதை பத்திரிக்கையாளர்கள் அறிவார்கள். அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட அமைச்சரை பற்றி, அவரது லஞ்ச லாவண்யத்தை பற்றி தக்க ஆதாரங்களுடன் ஒரு தமிழ் பதிவர் தனது வலைப்பதிவில் எழுதினார் என்றால் அவருக்கு பாதுகாப்பு உண்டா என்பது ஒரு பெரும் கேள்விக்குறி. கூகுள் போன்ற பெரும் இணைய நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கங்களிடம் மோதி தங்களது வியாபார வளத்தை கெடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.
தமிழகத்தில் வலைப்பதிவர்களை கைது செய்வதும் அல்லது அவர்கள் மீது மானநஷ்ட வழக்குகளை போடுவதும் வருங்காலத்தில் நடப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும். தீவிரவாதிகள் என்னும் முத்திரை விழுந்து விட்டால் கேள்விகளே கேட்க முடியாது. முக்கியமாக விடுதலை புலிகள், நக்ஸ்லைட்கள், சிமி இயக்கத்தை பற்றி தொட்டும் தொடாமல் எழுதினாலே வலைப்பதிவர் மீது வட்டம் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நீதி மன்றத்தில் நின்று ஜெயிப்பதல்ல விஷயம். காவல் நிலையம், நீதிமன்றம் என்று இழுத்தடிக்க படுவதே தண்டனை தான்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தாங்கள் எழுதுவது குறித்து முதலில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடும் விமர்சனங்களை எழுதுபவர்கள் ஆதாரபூர்வமாய் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க யாராவது முனையும் பட்சத்தில் அதனை எப்படி எதிர்கொள்வது என தயாராய் இருக்க வேண்டும்.
மான நஷ்ட ஈடு வழக்கு
பேசப்படும் வார்த்தைகள், எழுதபடும் வார்த்தைகள், சைகையால் பரிமாறப்பட்ட தகவல் அல்லது தெளிவாய் புலப்படும் கருத்து பரிமாற்றம் – இவற்றின் மூலம் ஒரு நபருக்கு பாதிப்பு உண்டாக்கும் என தெரிந்தும் அவரது பெயருக்கு மாசு உண்டாக்குவது மான நஷ்ட ஈடு வழக்கிற்கு கீழ் வரும். எனினும் இதில் விதிவிலக்கு உண்டு.
  • பொது நன்மைக்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
  • அரசு ஊழியர் தனது கடமையில் இருந்து தவறியதை பற்றிய உண்மைகளை வெளியிடுவது.
  • பொதுவில் விவாதிக்கபடும் விஷயத்திற்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
  • நீதிமன்றத்தால் ஊர்ஜிதமாக்கபட்ட விஷயங்களை வெளியிடுவது.
  • பொது மக்களின் கருத்துகளை பெறுவதற்காக செய்யபடும் பொது காரியங்களை பற்றிய கருத்துகள்.
  • சட்டப்படி ஒருவரது நடத்தை விமர்சிக்கும் உரிமை இருக்கும் பட்சத்தில் தவறில்லை.
  • தனது பாதுகாப்பிற்கோ அல்லது நலனிற்காக மற்றொருவரின் உண்மைகளை வெளியிடுவது.
  • ஆபத்தினை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க செய்யபடும் சமூக நலனுக்கான காரியம்.
நான் வழக்கறிஞரோ சட்ட நிபுணரோ அல்ல. மேற்கோள் காட்டபட்டிருப்பது எனது புரிதலினால் எழுதியிருக்கும் சிறு விளக்கமே தவிர இந்த சட்டத்தை பற்றி முழுமையான விளக்கம் அல்ல. ஒருவரின் பெயருக்கு களங்கம் கற்பித்தது நிருபிக்கபட்டால் இரண்டு வருட சிறைதண்டனை கூட கிடைக்கலாம்.
தமிழ் வலைப்பதிவர்கள் மீது வழக்குகள், நடவடிக்கைகள் எடுக்கபட்டு பிறகு வலைப்பதிவுகளிலும் ஊடகங்களிலும் கண்டன குரல்களும் எழுந்து, அவற்றிற்கு பிறகு அரசு அதிகார வட்டங்களில் வலைப்பதிவருக்கான கருத்துரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வரை காத்திருந்தால், அதற்குள் சிலரது தலைகள் உருண்டிருக்கும். வருவதற்கு முன்பே தேவை விழிப்புணர்வு.
நன்றி:
கருத்து படம்: http://najialali.hanaa.net/
படம்: கைது செய்யபட்ட எகிப்து மாணவர் அப்துல் கரீம்

நன்றி : சாய் ராம் 

மென்பொருளாளர்களுக்கு ஊதியம் அதிகம் ஏன்?

அதிகப்படியான விவாதத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் செய்திகளுள் மிக முக்கியமான ஒன்று தான் இதுவும். புருவத்தை உயர்த்த வைக்கும் சம்பளத்தை இவர்களுக்கு மட்டும் அள்ளி வழங்குவது ஏன்? அரசு ஊழியர் ஒருவர் 60 - ஆண்டுகள் உழைத்து சம்பாதித்தாலும் பெறமுடியாத தொகையை வெறும் 5 ஆண்டுகளிலேயே (இன்னும் குறைவான ஆண்டுகளில் கூட) இவர்கள் சம்பாதித்து விடுகின்றனரே எப்படி? கலை படிப்புகளான இலக்கியம், வரலாறு போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் சூழ்நிலையில் கணிப்பொறியியல் படித்தவர்கள் இலட்சங்களிலும், கோடிகளிலும் சம்பளம் பெறுவது எதைக் காட்டுகிறது? ஏன் இந்த வேறுபாடு? அப்படி இவர்கள் என்னதான் செய்கின்றனர்? 

சமீபத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் கூட மென்பொருளாளர்களை ஒருதலைப்பட்சமாக சாடியிருந்தனர். வெகுஜன மக்கள் மத்தியிலும் கூட இக்கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் நானும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவன் என்ற முறையில் தன்னிலை விளக்கம் அளிக்க விரும்புகிறேன் இக்கட்டுரை வாயிலாக.

ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு விதமான தகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. எதிர்பாக்கப்படுகின்றன. அவற்றை பூர்த்தி செய்பவர்களை நிறுவனத்தினர் பணியில் அமர்த்திக் கொள்கின்றனர். வங்கிப்பணி எனில் கணக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆசிரியப்பணி எனில் கற்றல், கற்பித்தல் திறன் அமைந்திருக்க வேண்டும். மருத்துவப் பணி எனில், பொறுமையும், நோயாளியின் உடல்நிலையை/மனநிலையை அறிந்து சிகிச்சையளிக்கும் மற்றும் செயல்படும் தன்மை அமையப் பெற்றிருக்க வேண்டும். சட்டப்பணி எனில் நல்ல பேச்சாற்றலும். வழக்கற்றாலும் இருக்கப்பெற வேண்டும். இந்திய ஆட்சிப் பணி எனில் தலைமைப்பண்பும், சமயோகித அறிவும், விரைந்து செயல்படும் தன்மையும், உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை தெரிந்து வைத்திருப்பதும், நடுநிலையுடன் செயல்படுவதும் வேண்டும். என்பனவாக தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. ஒரு பணிக்கு எதிர்பார்க்கப்படும் தகுதி மற்றொரு பணிக்கு எதிர்பார்க்கப்படுவதில்லை. உதாரணமாக, வங்கி பணியாளரிடத்தில் கணக்கு அறிவு பரிசோதிக்கப்படுகிறதே தவிர. அவரிடத்தில் கற்றல், கற்பித்தல் அறிவு எதிர்பார்க்கப்படுவில்லை.

சட்டப்பணியாளரிடத்தில் எதிர்பார்க்கப்படும் தகுதிகள், மருத்துவப்பணியாளரிடத்தில் எதிர்பார்க்கப்படுவதிலலை. காரணம், இருவரின் பணிகளும் வெவ்வேறானவை. இங்கே தலைமைப்பண்போ, நடுநிலைத்தன்மையோ, கணக்கு அறிவோ பரிசோதிக்கப்படுவதில்லை. அவை தேவையில்லாதவையும் கூட, ஆனால் ஒரு மென்பொறியாளர் பணிக்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து திறன்களும் அதன் தன்மைகளும் தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

1. கணித அறிவு
2. ஆங்கில அறிவு
3. தலைமைப்பண்பு
4. பேச்சாற்றல்
5. கற்றல் - கற்பித்தல்
6. குழுவுடன் பணியாற்றுதல் / நடுநிலைத் தன்மை
7. சமயோகித அறிவு
8. நாட்டு நடப்பு / உலக அறிவு

இப்படி எல்லாத் தகுதிகளும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை இன்றைய தினசரிகளில் வேலைவாய்ப்பு பக்கத்தில் பார்த்ததில்லையா? அதற்கு கணினி அறிவியல் படித்த மற்றும் படிக்கும் மாணவர்கள் தம்மை தயார் செய்துகொள்வதை கண்டதில்லையா?

கணினி பணி என்பது, முழுக்க முழுக்க மூளையை கசக்கும் பணியே அன்றி, உடல் உழைப்பு அன்று. இவன் ஒரு பிரம்மாவைப் போல நாளும் சிருஷ்டித்துக் கொண்டே இருக்க வேண்டும். வங்கிப்பணியாளரோ, ஆசிரியரோ, வழக்கறிஞரோ ஒரே விதமான பணியைத் தான் திரும்பத் திரும்ப செய்கின்றனர். இவர்களின் பணியில் எவ்வித கண்டுபிடிப்பும் மாற்றமும், புதுமையும் அதிகப்படியாக இருப்பதில்லை. ஆனால் ஒரு மென்பொறியாளனின் பணி அப்படியல்ல. அவன், எப்பொழுதும் கற்றுக்கொள்வதற்கும், உடன் பணியாற்றுபவர்களுக்கு கற்பிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

குழுவுடன் பணியாற்றும் தன்மை இங்கே மிக முக்கியமாக கருதப்படுகிறது. மேலும், அக்குழுவை வழிநடத்திச்செல்ல தேவையான தலைமைப்பண்பை நாளடைவில் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

‘வாடிக்கையாளர் திருப்தி’ (Customer Satisfaction ) முதன்மையான ஒன்றாக இருப்பதினால் மருத்துவருக்கு தேவையான பொறுமையும், சரியான அணுகுமுறையும் இவனிடத்தேயும் இருந்தால்தான் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று செழித்தோங்க முடியும். சிறந்த பேச்சாற்றலும் சொல்வன்மையும் இருந்தால் தான் வாடிக்கையாளரிடம் திறமையாக பேசமுடியும். புதுப்புது திட்டப்பணிகளை (Project) பெறமுடியும். முக்கியத் தருணங்களில் விரைந்து செயல்படும் மற்றும் முடிவெடுக்கும் திறன் அமையப்பெற்றிருந்தால் தான் இக்கட்டான சூழ்நிலையைலிருந்து நிறுவனத்தை காப்பாற்ற முடியும். நாளும் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் புதுப்புது தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே, இங்கே ஊதிய உயர்வு, மற்றும் பணி நிரந்தரம். இல்லையேனில் சில வருடங்களிலேயே நீங்கள் தூக்கியெறியப்பட்டுவிடுவீர்கள். ஆக, அவன் எப்பொழுதும் கற்றுக்கொண்டே இருக்கிறான். கற்றதை கற்பித்துக்கொண்டும் இருக்கிறான். ஒரே மாதிரியான பணி என்பது இவனுக்கு ஒரு நாளும் கிடையாது. ஒரு குயவனைப்போல, புதுப்புது பாண்டங்களை வித்தியாசமாக, முற்றிலும் மாறுபட்டதாக, முற்றிலும் வேறுபட்டதாக நாளும் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆக பத்தாம் பசலித்தனமாக மென்பொருள் அறிஞர்களுக்கு பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது என்று கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. 

50- ஆண்டுகளுக்கு முன் கற்ற இலக்கியத்தைத்தான் இன்னும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர், இவர்கள் புதிதாக கற்றுக் கொள்வதும் இல்லை. கற்றுக்கொள்வதற்கான அவசியமும் இல்லை. ஆனால், மென்பொருள் துறை அப்படியல்ல. 5-மாதங்களுக்கு முன் கற்றுக்கொண்ட தொழில் நுட்பம், இன்று காலாவாதியாகிவிடுகின்றனது. அல்லது, புது தொழில் நுட்பம் வெளிவந்துவிடுகின்றது. இன்றைய கணினி உலகில், வங்கிப்பணியாளாருக்குக்கூட அவ்வளவாக கணக்கு அறிவு தேவைப்படுவதில்லை. ஓரளவிற்கு பொது அறிவு (Common Sense) இருந்தால் கூட போதுமானது. கணினியே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறது. இப்படி, மருத்துவம், அறிவியல் என்று எல்லாத்துறைகளிலும் கணினி வந்த பிறகு, அவற்றின் மூளையாக இருந்து செயல்படும் மென்பொறியாளார்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் + மருத்துவர் + வங்கி ஊழியர் + வழக்கறிஞர் இவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தையும் அளிக்க வேண்டிய சூழ்நிலையில், அவனுக்கு சொற்ப சம்பளமே அளிக்கப்படுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட இறைவனைப்போல, கணினியும் இருப்பதினால் அதனை ஆட்டுவிக்கும் மென்பொறியாளனுக்கு அதிக சம்பளம் கொடுப்பதுதானே நியாயம்? இதனை கேள்வி கேட்பது அறியாமை என்று கூட சொல்லலாம்.

உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு நல்ல முகவரியையும், அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொடுத்து வரும் இந்தக் கணினித்துறைதான் நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகிறது. 8-9% நாட்டின் வளர்ச்சியில் கணினியினால் ஏற்படக்கூடிய வளர்ச்சி சுமார் 3% என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் மென்பொருளாளர்களின் பங்கீட்டினை. மற்ற எல்லாத்துறைகளும் சேர்ந்துதான் மீதமிருக்கும் 5-6% விழுக்காட்டினை பூர்த்தி செய்கின்றன.

உடல் உழைப்புக்கு ஆயிரம் மனிதர்கள் கிடைப்பார்கள். ஆனால், மூளை உழைப்புக்கு அவ்வளவு சீக்கிரம் மனிதர்கள் கிடைப்பதில்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இலக்கியம், வரலாறு படித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைப்பதில்லை என்பதில் என்போன்ற மென்பொருளாளர்களுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கையான ”திறமையான உயிர்களே தப்பிப்பிழைக்கும் என்பதையும், காலத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் உயிர்கள் மட்டுமே இவ்வுலகில் நீடித்து நிற்கும்” என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

விலையேற்றத்திற்கும், ஏழை பணக்காரன் வித்தியாசம் நாளும் அதிகரித்து வருவதற்கும் பொத்தாம் பொதுவாக மென்பொருளாளர்களை குற்றம் சுமத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒருதலைப்பட்சமாக மென்பொருளாளர்களை சாடுவதை விடுத்து, இத்தகைய வேறுபாட்டிற்கான காரணத்தை கண்டறிவதுதான் புத்திசாலித்தனம். அரசின் கொள்கைகளில் இருக்கும் முட்டாள்தனங்களை களைவதை விடுத்து, எங்களை கைகாட்டுவது பேடித்தனம். கணிப்பொறி அல்லாத பாடங்களை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய அரசு, தன் பொறுப்பை தட்டிக்கழிப்பதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முக்கிய, மூல காரணம். எனவே அரசு தன் குறைகளை களைந்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வது தான் சரியான தீர்வு. 


நன்றி : தமிழ் கபே 

மலிவு விலையில் மனித உயிர்கள், மரண வியாபாரத்தில் இந்தியா!

"முதலாளி தன் லாபத்தில் தொழிலாளிக்குப் பங்கு கொடுக்கத் தேவையில்லை, ஆனால் தொழிலாளி எப்பொழுதும் தன்னை தன்னுள் இழந்துகொண்டிருக்கிறான்" என்றார் கார்ல் மார்க்ஸ். ஜனநாயக ஆட்சி என்ற போர்வையில் முதலாலிகளுக்காக ஆட்சி நடந்துகொண்டிருக்கும் இந்த தேசத்தில், ஏழைகளின் நிலை மார்க்ஸ் கண்ட தொழிலாளர் வர்க்கங்களைவிட மோசமாக இருக்கிறது. இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் இங்குள்ள ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக்கப்படுகிறார்கள். இந்த நாட்டின் வளர்ச்சியில் தன்னையிழக்கும் ஏழைகள், தங்கள் நாட்டின் வளர்ச்சியால் தாங்கள் உயரவில்லை என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதுதான் சாபக்கேடு. மார்க்ஸ் சொன்னதுபோல் "தொழிலாளர்கள் புரட்சியாளனாக இருக்க வேண்டும், இல்லையேல் இல்லாமல் போகவேண்டும்".
தன் நாட்டு பத்திரிக்கையாளன் தாலிபன்களால் கடத்தப்பட்டதற்காக பல மில்லியன் டாலர் செலவுசெய்கிறது அமெரிக்க அரசு. இந்தியாவோ, அமெரிக்கக் கம்பெனியால் கொல்ல‌ப்பட்ட 15 ஆயிரம் மனித உயிர்களுக்காக நீதியையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. போபாலில் 1984, டிசம்பர் 2 நள்ளிரவில் யூனியன் கார்பைடு இன்டியா லிமிட்ட‌ட் கம்பெனியிலிருந்து கசிந்த மீத்தைல் ஐசோ சயனேட் நச்சினால் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 15 ஆயிரம் உயிர்கள் காற்றில் கரைந்து போயின. இந்த வழக்கில் 26 ஆண்டிற்குப் பிறகு தீர்ப்பளித்த போபால் நீதிமன்றம் எட்டு நபர்களுக்கு மட்டுமே இரண்டு ஆண்டு சிறைதண்டனை கொடுத்துவிட்டு, அவர்களையும் அன்று மாலையே பிணையில் வெளியிட்டுவிட்ட அநீதி உலகில் வேறு எங்கும் நிகழாத மாபெரும் மனித உரிமை மீறல். இதுபோன்ற பேரழிவிற்குப் பிறகும், மேலைநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மானியத்தோடு அனுமதியளித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்திய அரசு ஏழை எளிய மக்களைத் தன்னுடைய குடிமக்களாக ஒருபோதும் கருதியது இல்லை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேறேது?
உணவு, உறைவிடம், உடை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதி என மனிதனுக்குரிய எந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்ய விரும்பாத நாடாக இந்தியா இன்றும் இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்பும் கூட குடிநீருக்காகவும், மருத்துவமனைக்காகவும் இந்திய மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. இந் நிலையில் அணுஆயுத வல்ல‌ரசு என்று தன்னை வெட்கப்படாமல் அறிவித்துக்கொள்கிறது இந்தியா. ஏழை, எளிய மக்களை ஒரு பொருளாகக் காட்டி உலக வங்கியில் குறைந்த வட்டியில் அதிக அளவு கடன் பெற்று, இந்த நாட்டின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முதலாளிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்கிறதே தவிர, ஏழ்மையைப் போக்க, பட்டினி சாவைக் குறைக்க எந்த நடவடிக்கையும் தீவிரமாக இங்கு மேற்கொள்ளவில்லை.
கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு விமான விபத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 158 பயணிகள் உயிரிழந்தார்கள். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட‌ துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதே மாநிலத்தில் அடுத்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பேருந்தில் பயணித்த 30 பயணிக‌ள் கொல்ல‌ப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் மரணத்திற்கு மாநில அரசு ரூ 2 லட்சம் மட்டுமே இழப்பீடாக அறிவித்தது. இதாவது பரவாயில்லை சாதிய வன்கொடுமையில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 1.5 லட்சம் மட்டுமே இழப்பீடு கொடுக்கப்படுகிறது. அதுவும் அந்தப் படுகொலைக்கு முறையாக வழக்கு பதிவு செய்தபின்புதான் இந்த இழப்பீட்டைக் கூட கொடுக்க அரசு சம்மதிக்கிறது. என்ன ஓரு பாகுபாடு பாருங்கள்! தன் குடிமக்களின் மரணத்தில் கூட ஏழை, பணக்காரன் என தரம் பிரித்து இழப்பீடு வழங்கும் இந்த அரசை மக்கள் அரசு எனறால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? மக்கள் அனைவரும் சமம், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கும் சம மதிப்புடையது என்ற மக்களாட்சி தத்துவத்தையே மழுங்கடிக்கும் இந்த தேசத்தின் அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள், பெரு முதலாளிகளைவிடக் கொடுமையானவர்கள்.
இயற்கை பேரிடர்களான வெள்ளம், புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றில் உயிரிழந்தவர்கள் மற்றும் உடமையிழந்தவர்களுக்கு எந்த ஒரு குறிபிட்ட தொகையையுமே இழப்பீடாக "பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005" இல் மத்திய அரசு நிர்ண‌யிக்கவில்லை. மாறாக உடனடி நிவாரண‌மாக சில ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத ஆளும் கட்சிக்காரர்களுக்கு மாநில அரசு கொடுத்தபின்பு, பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு செய்தபின்பே மத்திய அரசு நிவாரண‌த் தொகை அனுப்புகிறது. அப்படி தரும் நிவாரண‌ம் கூட முழுமையாக மக்களுக்குக் கிடைப்பதில்லை. 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆண்டுகள் முடிந்தபின்பும் வீடுகள் கட்டித்தரப்படாத அவல நிலை நீடிப்பதைக் காணமுடிகிறது.
நிவாரண‌ம் வழங்குவதில் தமிழக அரசு யாருக்கும் குறைவைப்பதில்லை. எல்.சி.டி டிவி வைத்திருப்பவனுக்குக் கூட இலவச டிவி கொடுப்பதுபோல், வெள்ளம் வந்துவிட்டால் மூன்றாவது மாடியில் குடியிருப்போர்களுக்கும் கூட இரண்டாயிரம் ரூபாய் நிவாரண‌த் தொகை கிடைக்கிறது. வாக்கிற்கு ஐநூறு என்ற கணக்கு போலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரண‌ம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது, உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? அதுமட்டுமல்லாமல் குடிசையை இழந்து தவிப்பவன் இரண்டாயிரம் ரூபாயில் மச்சிவீடா கட்டமுடியும்?சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டிசேலை தருவ‌தாகச் சொல்லி பலபேர் நெரிசலில் சிக்கி இறந்த கதையும் உண்டு.
இவைமட்டுமின்றி மரணங்கள் பல்வேறுவகையில் நம் மக்களைத் தழுவுகிறது. சிறைச்சாலைகள் மற்றும் போலிஸ் கஸ்ட‌டியில் ஆண்டிற்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சாலை விபத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பதாக மனித உரிமை ஆர்வல‌ர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் விபத்தில் ஆண்டிற்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ மானுட உயிர்கள் சாலையில் மடிந்துபோகின்றன. இதைத்தவிர‌ இரயில் விபத்து, விமான விபத்து, குடும்ப வன்முறை, சாதி மத மோதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல், எல்லைப் பிரச்சனை, வெடிகுண்டு, இயற்கை மற்றும் செயற்கை பேரிடர், காலரா, காசநோய், பட்டினிச் சாவு, சிசுக் கொலை, பிர‌சவ இறப்பு, உயிர்க்கொல்லி மற்றும் தொற்று நோய்கள் என ஆண்டிற்கு பல லட்சம் உயிர்களை நம் அரசு கவன‌க்குறைவு மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் பலிகொடுக்கிறது. வன விலங்குகளைக் கூட மின்வேலி அமைத்துப் பாதுகாக்கும் அரசு, மனிதர்களை மரணத்திலிருந்து பாதுகாக்க ஏன் தயங்குகிறது? முறையான போக்குவரத்து விதி, சாலை பராமரிப்பு, வாகன தணிக்கை, கட்டாய தலைக்கவசம், சாலையோர மருத்துவமனை மற்றும் சாலை விபத்துகள் பற்றிய விழிப்புண‌ர்வு போன்ற செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டாலே ஆண்டிற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களையாவது சாலை விபத்திலிருந்து காக்க முடியும்.
இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் ஏழை எளிய மக்களின் சமூக பாதுகாப்பின்மை மட்டுமல்ல, சாதி மாதங்கள் கடந்து ஏழை எளியமக்கள் ஒன்று படாதது, மேலும் நாட்டின் 60 சதவிகித வருமானத்தை ஈட்டித்தரும் சுமார் 93 சதமுள்ள முறைசார தொழிலார்களின் நலன் புறக்கணிப்பு, அரசியல் மற்றும் அதிகார வர்க்க தலையீடு, முறையற்ற நிதி மற்றும் நீதி நிர்வாகம், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை, சாதி மத மற்றும் தீண்டாமை பிரச்சனை என காரணம் நீண்டுகொன்டே போகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் போண்ற வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு இலவச ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா குறைந்த அளவு சமூக பாதுகாப்பையாவது தன் குடிமக்களுக்கு கொடுக்க முன்வரவேண்டும். ஒரு முழுநேர அரசு ஊழியருக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் 12 ஆயிரம் கொடுக்கும் அரசு, வயதுவந்தோர்க்கு ஓய்வூதியமாக மாதம் ஐநூறு மட்டுமே அளிப்பது எந்தவிதத்தில் நியாயம்?
இந்திய ஜனநாயகம் சாதி மத சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதால், ஏழைகள் மீண்டும் மீண்டும் கூறுபோடப்பட்டு முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே பாடுபடும்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் பணிக்கப்படுகிறார்கள். "சமூக விடுதலையை நீங்கள் வென்றெடுக்காத வரையில், சட்டம் அளித்த விடுதலை உங்களுக்குப் பயன்படப் போவதில்லை" என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனை இன்றும் நமக்குப் பொருந்துவதாக உள்ளது. சட்ட திட்டங்களால் உயராத நம் வாழ்க்கை, சகோதரத்துவத்தால் உயரும் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்? கைவிரலில் மை வைக்க காத்துக் கிடக்கும் கூட்டமாக நாம் இருக்கும் வரை, முதலாளிகளை மட்டுமே ஈன்றெடுக்கும் இந்திய ஜனநாயகம் என்பதை நம் புரிந்துகொண்டால் ம்ட்டுமே மக்களுக்கு சேவைசெய்யும் மக்களாட்சி மலரும். இல்லையேல் இந்திய மக்களாட்சி எப்பொழுதும் போல் முதலாளிகளாலே வழிநடத்தப்படும்.


நன்றி : கீற்று 

Trying to become a Blogger

Hi All.,

I am trying to become a blogger. So that I can Share my thoughts to you people easily. I will improve my Blog & will post frequently (Trying).. -:)