Saturday, July 3, 2010

பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

மிகவும் நல்ல பதிவு ..... படித்து ரசித்ததை உங்களுக்க்காக ........ மறுபதிவு .... மறுக்க முடியாத உண்மை ......

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?
வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.
இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.
ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..
000
pichaiஇலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..
கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…
மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.
இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..
அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!
எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?
வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.
000
புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)
புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.
மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.
எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..
நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.
30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?
விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)
அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.
நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.
பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.
முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.
வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர...

அந்தக் கண்களும் சில காதல்களும்

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும்
இரு விழிகள்
0 0 0
சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல் பயணித்திருக்கும் நாயகியின் விழிகளும் அதன் மொழிகளும்தான். படம் நிகழ்வதென்னவோ எண்பதுகள் எனினும் அந்தக் கண்கள் மட்டும் என் கனவுகளில் தொன்னூறுகளை இழுத்து வந்து நிறைத்து விடுகின்றன. சட்டென விழிப்பு வருகையில் ஏமாற்றமுறுகின்றேன் நான். மீளவும் கனவுக்குள் நுழைதல் குறித்து அவாவுகிறது மனம்.
சட்டெனச் சந்தித்து விலகும் விழிகளின் மொழிகளில் ஒருபோதும் அச்சத்தையும் நாணத்தையும் மொழிபெயர்த்ததில்லை நான். ஆகக் குறைந்தது அவளது விழிகளில்.. முத்தங்களில் பரீச்சயம் அற்ற அந்தப் பதின்ம வயதுகளில் சட் சட் என உடலில் மின்சார அதிர்வுகளை நாட்தவறாது பார்வைகளால் மட்டுமே பரிசளித்துக் கொண்டிருந்தாள் அவள். எதிர்ப் பாலரிடம் தோன்றும் எந்த அதிர்வுகளும் உடல் இச்சையின் பிம்பங்கள் என்பதை அப்போதெல்லாம் நான் அறிந்து வைத்திருக்கவில்லை. “உனக்கு என்னை விடச்சிறந்த எவராவது கிடைக்கலாம். ஆனால் எனக்கு உன்னைத்தவிர இனியொருத்தி இல்லை” என ஒன்றிரண்டு வருடத்தில் நாலைந்து தடவைகளுக்கு மேல் சொல்கிற விளையாட்டின் முதல் படி அது.
பார்த்தால் சொல்லுடா என்பேன் நான். பக்கத்திலிருந்தவன் ஒருபோதும் என்னை ஏமாற்றியது கிடையாது.
பாக்கிறாளடா பாக்கிறாள் என்று அவன் காதுகளிடையே அலறும் பொழுதுகளில் சடாரெனத் திரும்பி அவள் விழிகளை களவு செய்து மொழி பெயர்க்க முயல்வதுண்டு. பென்சில் சீவும் சிறுவட்ட கட்டர் (cutter) ஒன்றின் பின்னிருக்கும் கண்ணாடியூடாக ஒருதடவை அவள் என்னை அவதானித்ததறிந்து மிதந்தேன்.
eyeநிறையப் பேசியும் எழுதியும் புரிந்து கொள்ள முடியாத இந்நாட்களைப் போல் அல்லாது அவளது விழிகளில் இருந்து விளங்கிக் கொண்டது அதிகம். ஏன் தாமதம் என்றதிலிருந்து இனி எப்போ சந்திக்கலாம் என்பது வரை அவள் ஒரு வார்த்தையும் பேசியதில்லை. ஆனால் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றிற்கான பதில்கள் என் கண்களில் இருந்ததா என்பதை அவள்தான் சொல்ல வேண்டும். பின்னாளில் பேசத் தொடங்கிய பிறகும் அவளது வார்த்தைகளை விடவும் பார்வைகளை அதிகம் விரும்பினேன்.
நீண்ட பெருங்காலத்தின் பின் அவளைச் சந்தித்து மதியம் தாண்டியவொரு பொழுதில் வாசலில் பிரிந்த போது அவள் பார்வையை மொழி பெயர்க்க முயன்றேன். எனக்கே எனக்கான எந்தச் செய்தியும் அதில் இல்லை. ஆனாலும் அதனை பத்திரப் படுத்திக் கொண்டேன்.
0 0 0
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு இப்போதும் காதலில் (ok.. காமத்தில் நட்பில் அன்பில் . சோமி கவனிக்க – ) இந்தப் பார்வைக் குறிப்புக்கள் உள்ளதா எனத் தெரியவில்லை. நகர் சார் சூழலில் அதற்கான தேவையற்றுப் போய்விட்டது போலத்தான் தெரிகிறது. மொபைல் போன் உண்டு எஸ் எம் எஸ் இருக்கிறது ஈமெயில் உண்டு என்னத்த கண்ணால பேசுறது என்பது உண்மைதான். ஆனாலும் அது போல வருமா என்பது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும் இல்லையா..?
0 0 0
இன்றைக்கு யோசித்துப் பார்த்ததில் காதல் தொடர்பில் நான் நிறையப் பேருக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது. நேற்றும் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் தெலைபேசி வெள்ளையினப் பெண்ணைத் திருமணம் செய்து வீட்டில் பெற்றோருடன் வசிக்கலாமா என்றார்.
பாடசாலை நாட்களில் சேயோனுக்கு அவனை விட அதிகம் காலம் எடுத்து யோசித்துச் சொல்லியிருக்கிறேன். அவன் ரூட் விட்ட அதே பெண்ணை விரும்பிய இன்னுமொருவன் என்னிடம் ஆலோசனை கேட்ட போது அவனுக்கும் சொல்லியிருக்கிறேன். என்னமோ தெரியலைடா மற்ற பெண்களைப் பார்க்கும் போது உருவாவதை விட இவளை பார்க்கும் போது மட்டும் என்ன என புரிய முடியாத அவஸ்தை மிகு உணர்வு தோன்றுவதாக சேயோன் என்னிம் சொன்னதை அவன் மறந்திருக்கலாம். என்னால் முடியவில்லை.
காலம் இதைவிடக் கொடுமையான வேளைகளையெல்லாம் என்மேல் கவிழ்த்திருக்கிறது. காலையில் வாசலில் காத்திருந்து யாருக்காக நான் பின்தொடர்ந்தேனோ அவளையே காதலிப்பதாய் ஒருவன் இடியிறக்கி என்னையே கேட்டுச் சொல்லச் சொன்னான். ங்கொய்யால.. அவ்வளவு பெரிய தியாகியாக எல்லாம் என்னால் இருக்க முடியவில்லை.
மிகக் கடுமையாக ஸ்கெட்ச் போட்டு ஆலோசித்து திட்டங்களை வரைந்தது என்றால் அது சோமிதரன் விடயத்தில் தான். எத்தனை தூக்கம் தொலைத்த இரவுகள் ! நண்ப, நன்றி மறவாதிரும்
கோபிராஜ் விசயம் ரொம்பவும் வித்தியாசமானது. கேளடா கேளடா கேட்டுச் சொல்லடா என்றவருக்கு நான் தயக்கத்தையே பதிலாக்கினேன். அவளோடு பேச பயமாய் இருக்கென்றேன். அவர் சொல்கிறார். பயப்பிடாதே.. எனக்காக பேசு. பயம் வரும் பொழுதுகளில் நான் சொல்வதை மனதில் நினைத்துக் கொள். பயம் தெளிந்து துணிவு பிறக்கும். அவருக்காக அவளோடு பேசும் பொழுது எனக்குப் பயம் வந்தால் அவர் மனதில் நினைக்கச் சொன்ன மந்திரத்தைச் சொல்லவா.. ? அது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம். அடிங்கொய்யால.. $%&%$§/&%$
வரும் யூன் மாதத்திற்கிடையில் எனக்காக கேட்டுச் சொல்லடா என்ற நண்பர்கள் மார்ச் ஏப்ரல்களில் ” வேண்டாம்.. வேறை ஒண்டு ஓகேயாச்சு” என்ற கதைகள்..
எண்ணிப் பார்த்தால் (இது இரண்டு அர்த்தத்திலும் வரும்) நான் ஆலோசனை கொடுத்த எல்லோருக்கும் காதல் காதில் சங்கூதித்தான் சென்றது. அது என் தவறு அன்று. விடா முயற்சியும் தொழில் பக்தியும் அவர்களுக்கு இல்லாவிட்டால் நான் என்ன செய்வது? சேயோனுக்கு அந்தப் பெண்ணின் பெயரே மறந்து விட்டது. சோமிதரனின் பெயரும் மறக்கப் பட்டிருக்கும். ஆனாலும் எல்லோரும் இப்போது இயல்பாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் மகிழ்ச்சியுடன் என்றும் சொல்ல முடியும். எல்லோரும் புறக்கணிக்கப் பட்ட பொழுதுகளில் அழுதவர்கள் புலம்பியவர்கள் வாழ்வு முடிந்ததென வரிகள் எழுதியவர்கள்.
இதுவே இயல்பும் யதார்த்தமும். எதிர்ப்பால் ஈர்ப்பின் படபடப்பை அதிர்வை இன்னும் என்னென்னவோ ஆன எல்லாத்தையும் அனுபவிப்போம் அனுபவியுங்கள். அதன் புறக்கணிப்பையும் சஞ்சலத்தையும் கண்ணீரையும் அனுபவிப்போம் அனுபவியுங்கள். மீளவும் இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்வோம் இடம்பெயருங்கள். எப்போதாவது அதை நினைத்து கதையும் கவிதையும் எழுதுவோம் எழுதுங்கள். ஆனால் ஒரு விடயம். இலக்குகள் மாறுபடலாம். ஆனால் இலட்சியம் ஒன்றுதான். அதை நினைவில் நிறுத்துவோம். நிறுத்துங்கள்
இதற்கு மேலும் காதலைப் பற்றி எழுதினால் நடக்கிற கதையே வேறு என காதிற்குள் எச்சரிக்கை விடப்படுவதால் சில திருத்தங்களுடன் நிறுத்திக் கொள்கிறேன். காதல் கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும்.
-மீள்பதிவு 18.09.2008

ஒரு கோடி ரூபாய் நூலகம்!

“ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அரசுப்பள்ளியில், அதன் முன்னாள் மாணவர்கள் நூலகம் அமைத்திருக்கிறார்கள்!” என்று நாம் கேள்விப்பட்ட செய்தியே ஆச்சரியமளித்தது. ‘அவ்வளவு பணத்தில் எவ்வளவோ செய்யலாமே, ஏன் குறிப்பாக நூலகம்?’ என்ற கேள்வியோடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்குள் நுழைந்தோம்.


பேரூராட்சி நிர்வாகத்திலிருக்கும் ஊத்தங்கரையின் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தால் ஒரு போர்டு வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வூரின் இளைஞர்கள் சிலர் இணைந்து ‘ஊத்தங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை’ ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஊர்வளர்ச்சிக்கு அரசையே எதிர்பாராமல், நாமாகவே நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம், வாருங்கள் என்று மக்களை அழைக்கிறது அந்த போர்டு. வேறு சில தெருமுனைகளிலும் இதே போர்டை திரும்ப, திரும்ப பார்க்க முடிகிறது.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி விசாலமான, தூய்மையான வளாகத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தூய்மையான பள்ளி என்று சான்றளிக்கப்பட்டு, யூனிசெஃப் அமைப்பின் தங்க மெடலை வென்றிருக்கிறது. 1957ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய பொன்விழாவை நிறைவுசெய்திருக்கிறது.

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுவருவதால் அக்கம், பக்கம் ஊர்களில் இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதனால் மாணவர் எண்ணிக்கை அதிகமாகி மேனிலை வகுப்புகளில் ஒருவகுப்புக்கு தலா நூறு பேர் படிக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

நாற்பத்தி ஒன்பது ஆசிரியர்கள் தேவைப்படும் இப்பள்ளியில், ஆசிரியர் பணிக்கு ஐந்து காலியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால் ஆங்கிலம், தமிழ் மொழி வகுப்புகளுக்கு இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து நடத்த வேண்டியிருக்கிறது. முன்னூறு மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் வகுப்பெடுப்பது என்பது கொஞ்சம் சோதனையான விஷயம்தான்.

ஆனாலும், சிறப்பான கற்பித்தலின் மூலமாக கடந்தாண்டு பத்தாம் வகுப்பில் எண்பத்தியெட்டு சதவிகிதமும், பண்ணிரண்டாம் வகுப்பில் எண்பத்தியிரண்டு சதவிகித தேர்ச்சியையும் எட்டியிருக்கிறோம் என்று பெருமிதப்படுகிறார் தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி.

இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் இதுவரை நான்கு முறை நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார்கள். இங்கே படித்த முன்னாள் மாணவர்களில் ஒருவர் அமெரிக்காவின் ஹார்வர்டு யுனிவர்சிட்டியிலும், இன்னொரு மாணவர் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும் விஞ்ஞானிகளாகப் பணிபுரிகிறார்கள் என்று கூறி பெருமைப்படுகிறார்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இங்கே செயல்படும் இக்கழகம் மாவட்டத்தில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்றிருக்கிறது. கற்பித்தலில் ஆசிரியர்களும், கற்றுக்கொள்வதில் மாணவர்களும் சிறப்பாக செயல்படுவதால் பெருமைக்கு மேல் பெருமையாக வந்து சேர்கிறது ஊத்தங்கரை அரசுப் பள்ளிக்கு.

விளையாட்டிலும் மாணவர்கள் கில்லி. மாநில அளவிலான சிறப்பான பங்கேற்பு இருக்கிறது. நான்கு பேர் தேசிய அளவில் மாநிலத்துக்காக கோ-கோ விளையாடுகிறார்கள். கோ-கோவில் தமிழக அணிக்கு கேப்டனாக இருக்கும் ரஞ்சித்குமார், இப்பள்ளியில் +1 படிக்கிறார். இந்திய அளவில் முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்னர் கோ-கோவில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்திருப்பது இவரது தலைமையில்தான்.

இதுபோல ஏகப்பட்ட சிறப்புகள் அமைந்திருந்தாலும், சிறப்புக்கெல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் சுழல்வடிவ மின்னணு நூலகம் ஒன்றினை, ஒரு கோடி ரூபாய் செலவில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள். அனேகமாக இந்தியாவில் எந்த அரசுப்பள்ளியிலும் இவ்வளவு நவீன நூலகம் இருக்குமா என்பது சந்தேகமே.

பள்ளியின் பொன்விழாக் காலத்தின் போது ஒரு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளிக்கு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது, இந்த மின்னணு நூலகம் அமைப்பது குறித்த யோசனைகள் வந்திருக்கிறது.

ஊத்தங்கரை பகுதியிலிருந்து ஏராளமான பொறியியலாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் உருவாகி வருகிறார்கள். ஆனால் ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ்-கள் உருவாவதில்லை என்ற குறை இப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக இருக்கிறது.

ஏராளமான நூல்களும், தங்குதடையில்லா இணையவசதியும் கொண்ட நவீன நூலகம் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நிறைய மாணவர்களை இங்கிருந்து தயார் செய்யமுடியும் என்ற ஒரே காரணத்துக்காக செலவினைப் பற்றி கவலைப்படாமல் இந்நூல் நிலையத்தை உருவாக்க முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டார்கள்.

அரசுப்பள்ளிகளை வசதிபடைத்தவர்கள் தத்தெடுத்துக் கொண்டு, வேண்டிய வசதிகளை செய்துத்தரலாம் என்று ஏற்கனவே அரசு சொல்லியிருக்கிறது. இவ்வகையில் ஊத்தங்கரைப் பள்ளியை தத்தெடுத்திருப்பவர், அங்கிருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளர் வே.சந்திரசேகர். அவரது தலைமையின் கீழ் நூலகப் பணிகள் தொடங்கப்பட்டது. சந்திரசேகரும் தன் பங்காக முப்பது லட்சரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். ஊத்தங்கரையில் நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் இவரது பங்கு நிச்சயமுண்டு என்பதை ஊர்க்காரர்களிடம் பேசினால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பதால் ஊரே சேர்ந்து, அவரவர் பங்களிப்பை மனமுவந்து தந்து இந்நூலகத்தை கட்டியிருக்கிறது.

கண்ணை கவரும் சுழல்வடிவ கட்டிடம். எட்டுலட்ச ரூபாய்க்கு பதிமூன்றாயிரம் புத்தகங்களை வாங்கி வரிசையாக அடுக்கியிருக்கிறார்கள். முப்பது கணினிகள் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வசதியோடு பொருத்தப்பட்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஊத்தங்கரை பொதுமக்களும் இந்நூலகத்தை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும் இலவசமாகவே நூல்களை மட்டுமன்றி இணையத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘UPSC - முயலகம்’ என்று தனியாக ஒரு அறையே உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சிவில் சர்வீஸுக்கு தயார் செய்யும் மாணவர்கள், எந்த தொந்தரவுமின்றி இங்கே படிக்கலாம். நூலகத்தில் சிவில் சர்வீஸுக்கு தயார் செய்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நூல்களும் தனி அடுக்கில் அடுக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் அறை நீளமாக, வசதியாக இருக்கிறது.

பாடுபட்டு உருவாக்கிய நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டாமா? அதற்காக பத்துலட்ச ரூபாய் மதிப்பில் வைப்புநிதி ஒன்றினையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு நூலகரை பணிக்கு அமர்த்தி இந்நிதியிலிருந்தே சம்பளமும் எடுத்துக் கொடுக்கிறார்கள்.

“எங்களை உருவாக்கிய பள்ளிக்கு நாங்கள் தந்த பொன்விழாப் பரிசு இந்த நூலகம்!” என்கிறார் முன்னாள் மாணவரான வி.செல்வராஜ். பெங்களூர் தொழிலதிபரான இவர் மட்டுமே நூலகம் அமைக்க இருபது லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார்.

தங்கள் ஊரில் இருந்து ஐ.ஏ.எஸ். / ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாக வேண்டும் என்ற கனவோடு ஊர்கூடி தேர் இழுக்கிறது. உன்னதமான முயற்சிகள் எதுவும் தோற்றதில்லை என்பது வரலாறு. கனவு நனவாக ஊத்தங்கரையை வாழ்த்துவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

செம்மொழி போட்டோ டூன்ஸ்

















எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு கப் காபி சாப்பிடலாமா?



‘தி கேப்’ என்று அழைக்கப்படும் அந்த மலைமுகடு ஆஸ்திரேலியாவில் ரொம்ப ஃபேமஸ். தற்கொலை செய்துக்கொள்ளும் மகாஜனங்கள் கடைசியாக தரிசிக்கும் புண்ணியஸ்தலம். கிட்டத்தட்ட நம்மூர் ‘சூசைட் பாயிண்ட்’ மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்.

புன்னகை மன்னன் கமல் சாடையில் ஒரு இளைஞன் கண்களில் கண்ணீரோடு குதிக்கத் தயாராகிறான். இளைஞன் என்பதால் தற்கொலைக்கான காரணம் காதல் தோல்வியாக தானிருக்கும். குதிக்க தயக்கம். பெற்றோர்களின் நினைவு காரணமாக இருக்கலாம். இருப்பினும் சோகம் மனதை அப்ப நீச்சல் வீரனின் பாணியில் கைகளை பின்னுக்கு இழுத்து கால்களைத் தூக்க முயற்சிக்க...

“எக்ஸ்க்யூஸ் மீ! என்னோடு ஒரு கப் காபி சாப்பிடமுடியுமா?” ஒரு வயதான குரல் கேட்கிறது.

ஏதோ சினிமாவில் வரும் இறுதிக்காட்சி இதுவென்று நினைத்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக சிட்னி துறைமுகத்தின் நுழைவாயிலான ‘தி கேப்’ பகுதியில் இக்காட்சி சகஜம். சராசரியாக வாரத்துக்கு ஒருவர் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். காப்பி சாப்பிட அழைக்கும் பெரியவரின் பெயர் டான் ரிட்சீ. இப்போது 84 வயதாகிறது. அந்த ஊர் எல்.ஐ.சி.யில் வேலை பார்த்தவராம். எனவேதான் உயிரின் அருமை அவருக்கு தெரிந்திருக்கிறது. அந்த தற்கொலை முகடுக்கு அருகிலேயே ரிட்சீயின் வீடு அமைந்திருக்கிறது.

“அவருடைய சிரிப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. புன்னகையோடு அவர் பேசிய கனிவான மொழிதான் இன்னும் என்னை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் கெவின் ஹைன்ஸ். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சித்து ரிட்சீயால் காப்பாற்றப்பட்டவர்.

ரிட்சீ கணக்கில் கொஞ்சம் வீக். எனவே எவ்வளவு பேரை காப்பாற்றியிருக்கிறார் என்று துல்லியமான கணக்கெடுப்பு எதுவும் அவரிடம் இல்லை. 160க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் இம்மாதிரியாக மறுஜென்மம் எடுக்க வைத்திருக்கிறார் என்று அக்கம் பக்கத்தவர்கள் சொல்கிறார்கள்.

காப்பி சாப்பிடும் அந்த மூன்று நிமிட அவகாசம் போதும். எத்தகைய சோகமும் நீரில் உப்பு கொட்டியதைப் போல கரைந்துவிடும். தனது மன அழுத்தங்களை சூடான காபி அருந்தியபடியே, முழுமையான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரியவரிடம் கொட்டினால் மனம் லேசாகிவிடாதா என்ன? – இதுதான் டான் ரிட்சீயின் டெக்னிக்.

“தற்கொலை எண்ணத்தோடு வருபவர்களிடம் மிகக்கவனமாக பேசவேண்டும். குதிக்காதே என்று கத்தினால் உடனே குதித்துவிடுவார்கள். சிலர் தத்துவங்கள் பேசுவார்கள். சிலர் நம்மை திட்டக்கூட செய்வார்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் நிதானமாகப் பேசுவதின் மூலம், அவர்களது தற்கொலை உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். சிலர் நீண்டநேரமாக விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் ஜன்னலில் இருந்து எங்களை பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவி, போலிசாருக்கு போன் செய்துவிடுவாள். போலிஸை பார்க்கும் யாரும் குதித்து விடுவதில்லை” என்கிறார் ரிட்சீ. இவரது மனைவி மோயாவும் இந்த தற்கொலை தடுப்புப் பணியில் இவருக்கு பெரும் உதவியாக இருக்கிறார்.

“இவ்வளவு உயிர்களை காக்கக்கூடிய இந்த அருமையான வாழ்வு எல்லோருக்கும் கிடைப்பது அரிதில்லையா?” என்று கேட்கிறது இந்த ஜோடி.

இப்பணியில் ஆபத்தும் இல்லாமல் இல்லை. ஒருமுறை இதுபோல ஒரு இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தபோது, திடீரென அவள் இவரையும் கட்டிக்கொண்டு குதிக்க முயற்சித்திருக்கிறாள். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரிட்சீ உயிர் தப்பினார்.

சோகம் என்னவென்றால் டான் ரிட்சீ இப்போது கேன்சரோடு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். “என்னுடைய மனநிலையோடு ஒருவன் கூடவா இந்த உலகில் இல்லாமல் போவான்? என் காலத்துக்குப் பிறகு அவன் வந்து இந்த தற்கொலைத் தடுப்புப் பணியை திறம்பட செய்வான்!” என்று நம்பிக்கையோடு இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த 84 வயது இளைஞர்

படித்து ரசித்தது ..... luckylookonline.com

கவிதைகள்


எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
எப்போதும் நான் சிந்தித்ததில்லை
ஆனால்
கவிதைகள் எனக்கு பிடிக்காமல்
போனபோது கொஞ்சம்
யோசித்துப்பார்த்தேன்
கவிதைகளை எனக்கு
மிகவும் பிடித்திருந்தது
அப்போது நான்
கவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லை
கவிதைகள் என்றால்
புல்லரிக்கும் எனக்கு
அப்போதெனக்கு
கவிதைகள் புரிவதேயில்லை.
கவிதைகள் புரியத்தொடங்கியபோது
கவிதையே வாழ்க்கையானது
கவிதைகளை நான்
கிறுக்கத் தொடங்கிய போதுதான்
கவிதைகள் கொஞ்சம்
உதைக்கத் தொடங்கியது
கவிதைகளை நான்
யோசித்தபோது
கவிதைகள் எனக்கு
வெறுக்கத் தொடங்கியது
கவிதைகள் எனக்குள்
தானாய் வந்தபோது
கவிதைகள் எனக்கு
சுத்தமாய் பிடிக்காமல் போனது.
ஏனென்றால் கவிதைகள்
உண்மைகளை சொல்லிவிடுகின்றன
எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
நான் சிந்திப்பதேயில்லை

வைரமுத்து கவிதைகள்

வைரமுத்துவின் கவிதைகள் தமிழில் ............... படித்து ரசிக்க..........

http://www.scribd.com/search?cat=redesign&q=Vairamuthu&x=0&y=0