Monday, August 16, 2010

இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?

உலகம் முழுவதும் பசியில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் இருக்குமென்று ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பின் (IFAD) 33வது ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் கனாயோ வீன்ஸ் கூறியுள்ளார். மேலும் இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிப்பதாகவும் (33 கோடிபேர்) குறிப்பிடப்படுகிறார். ஐக்கிய சபையின் செயலாளர் பான் கீ மூன் பசியால் உலகில் சுமார் 17,000 குழந்தைகள் தினமும் இறப்பதாகவும், சராசரியாக 6 விநாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்தியா உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் உள்ளதெனவும், 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு உள்ளனர் எனவும், இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பசி அட்டவணையில் 94வது இடத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு இந்தியாவில் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றதா என்றால் இல்லையென்பது தான் உண்மை. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 2009-10ஆம் ஆண்டில் 218.20 மில்லியன் டன். இது 2008-09ஆம் ஆண்டில் 237.47 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. அதேபோல் தென்மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 99.18 மில்லியன் டன்னாக இருந்தது 2010-11ல் 100 மில்லியன் டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சனை எங்கே?

இந்தியாவில் வறுமையும் பசியும் தொடர்கதையாய் இருப்பதற்கு மூலக்காரணம் திட்டமிட்ட பகிர்வு இல்லாமை; பகிர்வில் குளறுபடிகள் மற்றும் பிரச்சனையின் வீரியத்தை புரிந்து கொண்டு அதைத் தீர்த்திட முன்வராததேயாகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இந்தியாவில் 33 கோடிப் பேர் பசியால் வாடும் நிலையில் போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு ஒரு கோடியே 69 லட்சம் டன் உணவு தானியம் வீணாவதாக இந்திய உணவுக்கழகம் தெரிவிக்கிறது. சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளான பின்பும் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகளில்லை. இந்திய உணவுக்கழகத்தால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும் இக்கழகத்தின் சேமிப்பு வசதி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மட்டுமே. இதர உணவு தானியங்கள் ஆங்காங்கே திறந்தவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில் கெட்டுப் போகக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.

உணவின்றி ஒருபக்கம் மக்கள் வாடுகையில் உணவு பாதுகாப்பின்றி கெட்டுப்போகக் கூடிய நிலையும் உள்ளது. இதைத்தான் உச்சநீதிமன்றம் கடுமையாக்க் கண்டித்து உணவுப்பொருள் ஏதும் வீணாகக் கூடாது உடனடியாக இதனை பசியால் வாடுவோருக்கு வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீதிபதி வாத்வா கமிட்டி அறிக்கையின்படி பொது விநியோகத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் திருட்டுகள் நடைபெறுகின்றன. எனவே பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக கணிணிமயமாக்கிடல் வேண்டுமெனவும் குறிப்பிடுகிறது. அரசு வழங்கும் உணவுப்பொருட்களில் கால்பங்குதான் உரிய மக்களைச் சென்றடைகிறது என்றும், மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறையை மறுசீரமைத்திட வேண்டுமெனவும் நிதி அமைச்சரின் தலைமைப் பொருள்இயல் ஆலோசகர் Dr.கௌஷிக் பாசு குறிப்பிடுகிறார்.

உணவுப்பாதுகாப்பு மசோதா தயாரிப்புப் நிலையிலிருக்கக்கூடிய காலகட்டத்தில் பல்வேறு விசயங்களை கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் உணவு ஓர் பிரச்சனையல்ல. அதே நேரத்தில் பணமும் பிரச்சனையல்ல. ஆனால் யாருக்கு எவ்வளவு செலவு செய்வது என ஒதுக்கீடு செய்வதில் தான் பிரச்சனை. மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார், ‘இந்தியாவில் விமானத்தளம் அமைத்திட 10,000 கோடி ரூபாயும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக 60,000 கோடி ரூபாயும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் மான்யமாக 5,00,000 கோடி ரூபாயும் வழங்க முடிகிறது. ஆனால் பொது விநியோகத்திட்டத்திற்காக 84,399 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடியாதா’ என கேள்வி எழுப்புகிறார். ஏனெனில் இந்தியா முழுவதுமுள்ள அனைவருக்கும் கிலோ ரூ.3ல் பொது விநியோகத்திட்டத்தில் உணவு வழங்கிட அதுவே போதுமானதாகுமென பொருள்இயல் வல்லுநர்கள் பிரவின் ஜா மற்றும் N.ஆச்சார்யா ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

சுதந்திர இந்தியாவில் 1952ல் சமுதாய வளர்ச்சி வட்டாரங்கள் என துவங்கப்பட்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் வறுமையை ஒழிப்போம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு தனிநபர் பயனளிப்பு சார்ந்த திட்டங்கள் மூலம் வறுமையும். பசியும் குறைந்து வந்தது. ஆனால் இன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக தனிநபர் பயனளிப்புத்திட்டங்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டுவிட்டதும் கூட வறுமை உயரக்காரணமானது. அதேபோன்று இந்தியா ஓர் விவசாய நாடு. இதில் சிறுகுறு விவசாயிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததாலும், அவர்கள் விவசாயம் பொய்த்துப்போகும் காலகட்டத்தில் விவசாயிகள் என்ற நிலையிலிருந்து விவசாயக் கூலிகள் அல்லது கட்டிட கட்டுமானக் கூலிகள் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் இரசாயன உரங்கள் உபயோகத்தின் காரணமாக வளமான, நிரந்தர நீர்பாசன வசதி கொண்ட ஏறத்தாழ 20 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உற்பத்தித்திறனை இழந்துள்ளதென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோன்றே இந்திய கிராம விவசாயிகளுக்கு போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் 20 சதவீதம் முதல் 30 சதவீதமான உணவு தான்யங்களும். காய்கறிகளும் விளை நிலங்களிலிருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பே வீணாகிறது. இவை தடுக்கப்பட்டால் இந்தியாவின் உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னையும் தாண்டுமென ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே 50% மேல் விவசாய நிலங்களைக் கொண்ட கிராமங்களை ஒன்றிணைத்து விவசாயப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படல் வேண்டும். தங்க நாற்கரச் சாலைத்திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் அளித்து இக்கிராமங்களின் விவசாய நிலங்களில் முறையான சாலை வசதிகளை அளித்திடல் வேண்டும். இம்மண்டலத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு உற்பத்திக் கடன்கள் 4% வட்டியில் தாராளமாக வழங்கப்படல் வேண்டும். இம்மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து விளைபொருட்களையும் பாதுகாத்திடத் தேவையான பாதுகாப்பு கிட்டங்கிகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் மூலம் உற்பத்தி உயர்ந்து இந்தியாவின் விவசாய வருமானம் 4%லிருந்து உயருவதற்கு வழி வகுக்கும்.

தீர்விற்கான வழி:

 பொது விநியோகத்திட்டத்தை விரிவுபடுத்தி உணவுப்பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி எந்தவித கட்டுப்பாட்டின்றி வழங்குவது

 ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தாலும் உணவுப்பொருள் வழங்குவது

 குடும்ப நபர் எண்ணிக்கைக்கு இணங்க அதன் மடங்குகளில் உணவுப்பொருள் வழங்குவது

 இந்தியா விவசாயிகள் அனைவருக்கும் 4 சதவீத வட்டியில் அனைத்து செயல்களுக்கும் (விதை, அறுவடை விற்பனை) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வங்கிக் கடன் வழங்குதல்

 போதுமான சேமிப்புக் கிட்டங்கிகளை ஏற்படுத்தி உணவுப்பொருட்கள் வீணாவதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்துவது

 உணவுப்பொருட்களை விவசாயிகளே உழவர் சந்தை போல் நேரடியாக விற்பனை செய்திட ஏற்பாடு செய்திடுதல்

 பொது விநியோகத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி அதனை முழுமையாகத் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிப்பது, அதில் ஊழல் செய்பவர், தடை ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது.

 விவசாயப் பொருட்களை மாற்றம் செய்யப்பட்ட- மதிப்பு கூட்டிய நிலையில் விற்பனை செய்திட விவசாயிகளுக்கு பயிற்சியளித்தல்

 இவை இந்திய விவசாய வளர்ச்சியை 4%லிருந்து 10% உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய 75% மக்களைக் கொண்ட இந்திய மக்களின் வறுமையையும் பசியையும் நீக்கும்.

- மதுரை சு.கிருஷ்ணன்

Friday, August 13, 2010

குழந்தைகளாக இருக்கவிடுங்கள்...! (ஒரு குறும்படத்தை முன்வைத்து)

குழந்தைகள் எப்போதுமே குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்களாக ஆக எப்போதும் விரும்புவதில்லை. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதைப்போல, குழந்தைகள் தாங்கள் விரும்பும்படி இருக்க விரும்பினாலும் நாம் அவர்களை அனுமதிப்பதில்லை. நாம் விரும்புகிற மாதிரியோ அல்லது நம்மை மாதிரியே அவர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதிலும் சின்ன வயதிலேயே குழந்தைகள் பெரியவர்களைப்போல ‘சமர்த்தாக’ (நாம் சமர்த்தாக இருக்கிறோமா அல்லது பலநேரங்களில் முட்டாள்களாகவே இருக்கிறோம் என்பது யோசிக்கத்தக்கது) இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சினிமாவில் வரும் குழந்தைகளைப் போல நமது பிள்ளைகளும், வயசுக்கு மீறிய விஷயங்களைப் பேசினால் 'அய்யோ... எம்புள்ள எப்புடி பேசுது பாரேன்...' என்று மற்றவர்களிடம் காட்டிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறோம். கள்ளங்கபடமற்ற குழந்தைமையை கொன்று சகல அழுக்குகளும் நிறைந்த பெரியவர்களாக அவர்களை மாற்றுவதில் அப்படி என்னதான் சந்தோஷமோ தெரியவில்லை.

ஆனால் இந்த கண்ணாமூச்சி விளையாட்டிலிருந்து குழந்தைகள் எப்போதும் எப்படியாவது தப்பித்துவிடுகிறார்கள். உனக்கும் பெப்பே... உங்கப்பனுக்கும் பெப்பே. . என்று அழகுகாட்டிவிட்டு ஒப்பற்ற தங்களின் மாய உலகத்திற்குள் நுழைந்துவிடுகிறார்கள். அந்த உலகில் போட்டி, பொறாமையில்லை; சூதுவாது இல்லை; வஞ்சகம் இல்லை. அடுத்தவனுடையதை தட்டிப் பறிக்கும் ஆவேசமில்லை. தனக்கு தனக்கு என்று ஒதுக்கி, பதுக்கி வைத்துக்கொள்ளும் களவாணித்தனம் இல்லை. அங்கு எல்லாமே திறந்த புத்தகம்தான். எந்தப் பக்கத்தையும் எவரும் வாசிக்கலாம்... எந்தப் பக்கத்திலும் எவரும் எழுதலாம். அவர்களின் விரிந்து கிடக்கும் வானத்தில் கொட்டிக்கிடக்கும் அழகிய வண்ணங்களை எவரும் எடுத்து பூசிக்கொள்ளலாம்; எவருக்கும் பூசிவிடலாம்; எல்லாமும் வெளிப்படையானது இந்த குழந்தைகளின் உலகத்தில். இங்கு மறைப்பதற்கென்றோ ஒளிப்பதற்கென்றோ எதுவுமில்லை.

ஆனால் இது உன்னுடையது, யாருக்கும் காட்டாதே... கொடுக்காதே. . என்று 'புத்திமதி' சொல்லிதான் நாம் நமது குழந்தைகளை வளர்த்தாலும், அவர்கள் தங்கள் போக்கிலேயேதான் இருப்பார்கள் என்பதை அழகாக சொல்கிறது 'அன்பு' (LOVE) என்ற குறும்படம். சசிக்குமார் என்பவர் இயக்கியுள்ள இப்படம் நான்கு நிமிடங்களே ஓடுகிறது. . YOU TUBE இணையதளத்தில் (http://www.youtube.com/watch?v=CGMY6BTQ2ys&feature=email) காணக்கிடைக்கிற இப்படத்தை இதுவரை பல்லாயிரம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விடுதி ஒன்றில் கதை நடக்கிறது. அங்குள்ள சிறுமி ஒருத்திக்கு ஒரு மிட்டாய் ( சாக்லெட்) கிடைக்கிறது. விடுதியின் காவலாளி, 'ஒரு சாக்லெட்தானே இருக்கிறது. உள்ளே போனால் எல்லாக் குழந்தைகளும் கேட்கும். அதனால் மறைவாக பின்புறமாக போய் சாப்பிடு' என்று அக்கறையுடனும், ஒரு நல்ல வழிகாட்டுதலை வழங்குகிறோம் என்ற பெருமிதத்துடனும்(!)... 'புத்திமதி' கூறுகிறார். சரி என்று அந்த சிறுமியும் பின்புறமாக செல்லுகிறாள். சற்று நேரத்தில் ஒவ்வொரு குழந்தையாக அங்கு சென்றுவிடுகிறார்கள். வகுப்பறை காலியாகயிருப்பதை பார்க்கும் ஆசிரியை காவலாளியிடம் விசாரிக்க அவரும் நடந்ததை சொல்கிறார். இருவரும் அங்கு சென்று பார்க்கின்றனர்.

தனக்கு கிடைத்த சாக்லெட்டை சூரியனுக்கு காட்டியபடி அந்த சிறுமி நிற்கிறாள். அவள் விரும்பியபடியே சூரியச் சூட்டில் சாக்லெட் உருகுகிறது. எல்லாக் குழந்தைகளும் அதை சுவைத்து சாப்பிடுகிறார்கள். ஆசிரியையும் காவலாளியும் தங்கள் ‘வழிகாட்டுதலை’ உணர்ந்தபடி சிரிப்பதுடன் படம் முடிவடைகிறது. படமென்னவோ குறும்படம்தான்... ஆனால் அது சொல்வதோ பேருண்மையை. அது குழந்தைகளை... குழந்தைகளாகவே இருக்கவிடுங்கள் என்பதுதான்

- எஸ்.கருணா ( skaruna63@gmail.com)

Thursday, August 12, 2010

பெரியாரை ஒழிப்பதில் முனைப்புடன் இயங்கும் வீரமணி

"பெரியார் சாதித்தது என்ன?" என்ற கேள்விக்கு நாம் சொல்கிற முதல் பதில், இன்றைக்கு உன் பெயருக்கும் என் பெயருக்கும் பின்னால் சாதி பட்டம் இல்லையே, அப்படி சாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது ஒரு இழிவான/வெட்ககேடான செயல் என்ற கருத்து தமிழர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதே, இதுதான் தந்தை பெரியாரின் முதன்மையான சாதனை என்றுதானே சொல்வோம்.


பார்ப்பனர்களும் பெரியார் எதிர்ப்பாளர்களும், பெரும்பாலும் பெரியாரை "ஈ.வெ.ராமசாமி நாயக்கர்" என்றே குறிப்பிடுவார்கள். சாதி ஒழிப்பே முதல் லட்சியமாக கொண்ட பெரியாரை சாதிப்பட்டத்துடன் அழைப்பதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம்.

அவர்களைப் போலவே பெரியாருக்கு "நாயக்கர்" பட்டம் கொடுத்து மகிழ்கிறார் வீரமணி.

பெரியார் என்ற கூர்வாளை அட்டைக்கத்திப்போல் சித்தரித்த "பெரியார்" திரைப்படம் இப்போது தெலுங்கிலே மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? "பெரியார் ராமசாமி நாயக்கரு"

"நாயக்கர்" என்று பெயரில் போட்டால் தெலுங்கர்கள் படம் பார்க்க வருவார்கள் என்று நினைத்திருக்கலாம் வீரமணி. அதற்காக பெரியாரின் அடிப்படை கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டு பணம் சம்பாதிக்கத் துடிப்பது அயோக்கியதனம்.

மானமிகு ஆசிரியரின் நேர்மையைப் பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். அவர் நடத்தும் கட்சி பத்திரிகைகளில் இந்த தெலுங்கு படம் குறித்த செய்திகள் எதிலும் படத்தின் தலைப்பு குறிப்பிடப்படவேயில்லை. தன்னுடைய இந்த அயோக்கியத்தனம் தன்னுடைய கட்சிகாரர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்ற அவரது அச்சம் நமக்கு புரிகிறது.

யாராவது இந்த தெலுங்கு படத்தினைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள் நண்பர்களே. குறிப்பாக படத்தில், பெயருக்கு பின்னால் சாதிபட்டம் போடுவதை நிறுத்தச் சொல்லி அறைகூவல் விடுக்கும் காட்சி ஒன்று தமிழில் இருந்தது. தெலுங்கில் இருக்கிறதா?

பெரியாரின் எழுத்துகளை தன்னைத்தவிர வேறுயார் பதிப்பித்தாலும், அவர்கள் பெரியாரின் கருத்துகளைத் திரித்துவிடுவார்கள் என்று உயர்நீதிமன்றம்வரை சென்று பெரியார் கருத்துகள் பரவுவதை தடுக்கத் துடித்தார் வீரமணி. ஆனால் பெரியாரைத் திரிப்பதில் முதல் ஆளாக நிற்பது வீரமணியே அன்றி வேறுயாரும் இல்லை.

ஆதாரம்: "தி ஹிந்து" ஆங்கில தினசரியின் செய்தி - http://hindu.com/2010/08/10/stories/2010081060640300.htm

- பிரபாகரன் ( anbunanban@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Thursday, August 5, 2010

ஆக, தமிழர்களே... சாகத் தொடங்குவோம்!

உலகத்து மொழிகளிலெல்லாம் உயர்தனிச் செம்மொழியாய்த் திகழ்கின்ற மொழியே தமிழ். இலக்கியச் செழுமை, சொற்களில் வளமை, பிற மொழிகளுக்குத் தாய்மை, வழக்கில் பழமை, எப்போதும் விளங்குகின்ற எளிமை, புதியச் சூழலுக்கேற்ற புதுமை என பல்வேறு அடிப்படைக்கூறுகளை செம்மொழித் தகுதியாக, மொழியியல் அறிஞர்கள் வரையறை செய்கின்றனர். மொழியியலாளர்களால் வழங்கப்படும் சூத்திரத்திற்கு, முழுவதுமாய் உட்படுகின்ற, உலகின் ஒரே மொழியாகத் தமிழ் திகழ்கின்ற காரணத்தால்தான், அதனை உயர்தனிச் செம்மொழி என்று உரைக்கக் காண்கின்றோம். எல்லா உயிரையும் சமமாக மதித்து நடத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனை உலகில் வேறு எந்த மொழியிலும் காணக் கிடைக்கவில்லை. ஆனால், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் மொழியின் தொல் புலவன் வள்ளுவப் பேராசான் திருக்குறளின் வழியே இக்கருத்தை அழகாய் வெளிப்படுத்துகின்றார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஒப்பற்ற உலகியல் தத்துவத்தை கணியன் பூங்குன்றனார் விளக்கிய காலத்தில், நனி நாகரிகம் கண்ட இனமென்று உலகில் வேறு ஒன்றில்லை. மொழிக்கென்று தொல்காப்பியன் மூலமாக, தமிழ், தனக்கென இலக்கணம் படைத்த கி.மு.1000இல், பிற இனங்களெல்லாம் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்திருக்கின்றன என்பதும் வரலாறு.



ஆனால்..?

மொழிப்பெருமை, இனப்பெருமை கொண்டு வாழ்ந்த தமிழினம் இன்றைக்கு நாதியற்று, தனக்கென்று அரசாள நாடற்று, எவரும் காறியுமிழும் கேடுற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழக நிலப்பரப்பிற்கு சற்றே அருகில், வெறும் பதினெட்டே மைல் கல் தொலைவில், ஈழத் திருநாட்டில் நம் தொப்புள் கொடி உறவுகளெல்லாம் சதைகள் பிய்ந்து, இரத்தம் பீறிட, உறுப்புகள் தொங்கி, நரம்புகள் வெட்டுண்டு, எலும்புகள் நொறுங்க உயிருடன் வாழ்வதற்கே சிங்களப் படையினரோடு போராடிக் கொண்டிருந்த போது, தமிழகத் தொலைக்காட்சிகளில் 'மானாட... மயிலாட...' பார்த்துக் கொண்டே, கோலாவும், பெப்சியும் பருகிக் கொண்டிருந்தோம். 'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு' என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடலுக்குப் பொருளெங்கே போனது? போரை நிறுத்தச் சொல்லி வெறும் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை சாதனையாகப் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தமிழ் மண்ணில் தான், 'வடக்கிருந்து உயிர் துறத்தல்' என்ற உன்னதமான உயிர்த் தற்கொடையினை சங்க இலக்கியங்கள் மிகப் பெருமையோடு பாடியிருக்கின்றன. 1987இல் சொட்டுத் தண்ணீர் கூடப் பருகாமல், ஈழ மண்ணில் திலீபன் என்ற மாவீரன், இந்தியாவிடம் நீதி கேட்டுப் பன்னிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்ட கதையோடு, நான்கு மணி நேர உண்ணாநோன்பையும் பொருத்திப் பார்த்துக் கொள்க!

ஈழப்போரின் இறுதி நாட்களில் மட்டும் ஏறக்குறைய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் எந்தவித ஆதரவுமின்றி மண்ணோடு புதைந்து போயினர். வரலாற்றில் ஒரு போதும் மறைக்கவியலாத அந்தப் பேரவலத்தின் சோக நினைவுகள் இன்னமும் நம்மை விட்டு அகலாத நிலையில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' ஒன்றை கொங்குச் சீமையில் நடத்திக் காட்டியிருக்கிறார். வரவேற்பு வளைவுகளென்ன... அலங்கார ஊர்திகளென்ன... ஆர்ப்பாட்டமான அரங்குகளென்ன... கொங்குச் சீமை கோலாகலத்துடன் செம்மொழி மாநாட்டை கொண்டாடித் தீர்த்து விட்டது. தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது குடும்பத்தாருடன் சீரும் சிறப்புமாகக் கண்டு களித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் கருணாநிதியால் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழுக்கும், தமிழர்க்கும் என்ன செய்யப்போகிறது? இதனால் ஏற்படும் உலகளாவிய மாற்றங்கள் என்ன? அவற்றால் விளையும் தாக்கங்கள் எத்தகையதாய் இருக்கும்? என பல்வேறு கேள்விகள் நம்மைப் போட்டுக் குடைந்தாலும், அவற்றில் சிலவற்றிற்குக் விடை காண முற்பட்டபோது, மறுபடியும் கேள்விகளே வந்திறங்கின. அவற்றையும் இங்கு பகிர்ந்து கொள்வதே சிறப்பாக இருக்கும். உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தால் முடிவு செய்யப்படும் மாநாடு குறித்த அறிவிப்பு, தமிழக முதல்வர் கருணாநிதியால் ஏன் மேற்கொள்ளப்பட்டது? நெல்லை, குமரி போன்ற தமிழுக்குப் பெருமளவு தொண்டாற்றிய மாநகரங்கள் இருக்கும்போது, கோவை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அரசியல் பின்னணி யாது? 2011ஆம் ஆண்டில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்ற தமிழாராய்ச்சிக் கழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டே நடத்த வேண்டிய அவசரம் என்ன? இதற்கு முன்னர் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அப்பொதெல்லாம் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் அக்கறை கொள்ளாமல், ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு கருணாநிதி இரண்டகம் இழைத்துவிட்டார் என்று உலகத் தமிழர்களெல்லாம் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், தற்போது நடத்தப்படும் மாநாடு எதை மறைக்க?

தமிழ் இனத்தின் மேம்பாடு மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் இத்தனை ஆடம்பரங்கள் எதற்கு? தமிழுக்குத் தொண்டாற்றிய பல்வேறு அறிஞர்களையும், வறுமையில் வாடும் அவர்தம் குடும்பங்களையும் கண்டு கொள்ளாது, குறைந்தபட்சம் அவர்களுக்கு அழைப்பிதழ் கூட வழங்காது செம்மொழி மாநாட்டில் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதான் தமிழுக்கு ஆற்றுகின்ற தொண்டா? இப்படி எழுகின்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள், இதனைப் படிக்கின்ற வாசகர்களின் உள்ளக் குமுறலில்தான் புதைந்து கிடக்கின்றன.

ஒரு மொழியின் இருத்தல் என்பது, அந்த மொழியைப் பேசும் மக்களின் பொதுப்புழக்கத்தைத்தான் முழுவதுமாய் நம்பியிருக்கிறது. மக்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலும், நடை, உடை, பாவனைகளிலும், பேச்சு வழக்குகளிலும் தாய்மொழிக்கேயுரிய கூறுகள் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்பட வேண்டும். மொழி உணர்வுவயப்பட்ட மக்கள் இருந்தாலும், பொதுத் தளம் என்று வரும்போது, தங்களின் தாய்மொழிக்கு கொடுக்கின்ற முதன்மையில் தான் அந்த மொழியின் வாழ்வும், தாழ்வும் இருக்க முடியும் என்பது மொழி வல்லுநர்களின் வரையறை. ஆனால் தமிழ் மண்ணில் அப்படியொரு நிலை இருக்கிறதா என்பதை மனச்சான்றோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தொடக்க நிலையில் கல்வி பயில்கின்ற தமிழ்க் குழந்தைகள், தங்களின் பெற்றோரை அம்மா, அப்பா என்று அழகு தமிழில் அழைத்துவிட்டாலே மிகவும் வியப்பிற்குரிய விசயமாய் மாறிவிட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தை ஆங்கிலத்தில் பேச, எழுத, படிக்க வேண்டும் என்பதில் வெறி கொண்டு அலைகின்ற போக்கு இன்றைய தமிழகத்தின் இயல்பான நிலை. தொலைபேசி எண்களை தமிழில் விளக்கமாய்ச் சொன்னாலும் ஏறாத மண்டைகளில், அவ்வெண்களையே ஆங்கிலத்தில் சொல்லும்போது விரைவில் மூளைக்குள் பதியம் போட்டுக் கொள்கின்ற கூத்தை என்னவென்பது? ஒரு காலத்தில் மணிப்பிரவாள நடை என்றும், பண்டிதத் தமிழ் என்றும் கூறி வடமொழியை முன்னிறுத்தி தமிழ்மொழியை அழித்தொழிப்புச் செய்யும் பணிகள் நடைபெற்றபோது, தமிழறிஞர் மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் தோன்றி தனித்தமிழின் அருமையை மக்களுக்கு உணர்த்தினர். இதனால்தான் 'அபேட்சகர்' வேட்பாளரானார், 'அக்கிராசனார்' தலைவரானார், 'இராஷ்டிரபதி' குடியரசுத்தலைவரானார். இவையெல்லாம் தனித்தமிழ் இயக்கத்தின் தன்னலமற்ற பரப்புரையால் விளைந்த நன்மைகள். ஆனால், தூக்கியெறியப்பட்ட வடமொழியின் இடத்தில் இன்று ஆங்கிலம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இயல்பான வழக்கிலிருந்த பேருந்து 'பஸ்'ஆகவும், நேரம் 'டைம்'ஆகவும், வணக்கம் 'குட்மார்னிங்'ஆகவும், போய் வருகிறேன் 'டாட்டா, பை.. பை..'ஆகவும், ஆசிரியர் 'டீச்சர், சார்'ஆகவும் 'முன்னேற்றம்' கண்டுள்ளது. வடமொழிக்கலப்பு, தேசியக் கட்சிகளின் அல்லது மதவாத அமைப்புகளின் 'கொடை'யென்றால், ஆங்கிலக்கலப்பு, தமிழின் பெயரால் ஆட்சியமைத்த திராவிட இயக்கங்களின் 'திருப்பணி'யால் விளைந்ததாகும்.

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது வேறு; தாய்த்தமிழோடு பிற மொழியைக் கலந்து பேசுதல் என்பது வேறு. இவ்விரண்டு எதிர்நிலையையும் ஒன்றாய்ப்போட்டுக் குழப்பி, பிறமொழிக் கலப்பிற்கு எதிராய்ப் பேசுவோரை 'மொழிவெறியன்', 'தமிழ்த்தீவிரவாதி' என்று பகடி பேசுகின்ற நிலையும் இன்றைய தமிழகத்தின் இயல்பான போக்காய் உள்ளது. ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரிகின்றதோ, அத்தனை மனிதனுக்கு நிகரானவன் என்பது நிச்சயமான உண்மை. ஆனால், தமிழ்மொழியில் உரையாடும்போது, அந்த மொழியில் உரையாடுவதுதானே இயற்கை. கன்னடராகட்டும், தெலுங்கராகட்டும், மலையாளிகளாகட்டும், இந்தி மொழி பேசுகின்றவர்களாகட்டும் இவர்களில் எந்த இனத்தாரும் தங்கள் மொழியோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறார்களா அல்லது ஆங்கிலத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களா? சிந்தித்துப் பாருங்கள்! தமிழன் மட்டும் ஏன் இவ்வாறு மாறிப்போனான்? நம்மைச் சுற்றியுள்ள சூழல், ஊடகங்களின் நிலைப்பாடு, ஆட்சியாளர்களின் போக்கு. இவையே இந்த இழிநிலைக்கு முதன்மைக் காரணம்.

'மெல்லத் தமிழினிச் சாகும்!' என்று பாரதியும், 'தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ்தான் இல்லை' என்று புரட்சிக்கவிஞரும் மனம் நொந்து பாடிய நிலை இன்றைக்கும் தொடர்கிறது. அதனால் தான் வணிக நிறுவனங்கள், அங்காடிகளின் பெயர்ப்பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் அரசே வலியுறுத்துகின்ற நிலை. 'உலகமொழிகளுக்கெல்லாம் முதன்மையானது, பல்வேறு இலக்கியங்கள் எனது தாய்மொழியில் நிறைந்து கிடக்கின்றன, நான் பெருமை மிக்க தமிழினத்தில் பிறந்தவன்' என்ற இறுமாப்பும், செருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருக்குமானால் அல்லது நம்மை ஆண்ட அரசுகள் அப்படியொரு இன உணர்வுடன் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்குமானால் இப்படியெல்லாம் பேசுகின்ற, எழுதுகின்ற அவலநிலை தோன்றியிருக்குமா?

'ஆள் இறங்குது' என்று பயணிகளை பேருந்திலிருந்து, நிறுத்தங்களில் இறக்கிய நடத்துநர், இப்போது 'ஹோல்ட் ஆன்' என்று பொருள் புரியாமல் இயந்திரத்தனமாய் கூச்சலிடுவது, யாருடைய பொறுப்பற்றத்தனம்? அரசு தனது எல்லைக்குட்பட்ட அதிகாரத் தளங்களில் கூட, தமிழ்மொழியை வளர்ப்பதற்கான முயற்சியை பெருமளவு முன்னெடுக்கவில்லையே. இந்திய ஆட்சிப்பணியின் பொருட்டு கர்நாடகத்தில் பணி செய்ய வரும் பிற மொழி பேசுவோர், அடுத்த ஆறு மாதங்களுக்குள் கன்னடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த மாநில அரசு சட்டமியற்றியுள்ளது. மொழிக்குக் கேடென்றால், ஒட்டு மொத்த கர்நாடகமும் பொங்கி எழுகிறது. ஆனால் தமிழகத்தில், தமிழுக்கு கேடு நேரிடுகிறதே என்று எவரேனும் குரலுயர்த்தினால், அவர் தேச இறையாண்மைக்கு எதிராய்ப் பேசினார் என்று சிறையிலடைக்கும் நிலையே உள்ளது. மராட்டியத்திலும், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில், தங்களின் பேருந்துகளுக்குக் கூட அந்தந்த மாநில மொழிக்குரிய எண்ணையே பயன்படுத்த வேண்டும் என்று அதன் அரசுகள், சட்டமியற்றி மொழியுணர்வுடன் செயல் புரிகின்றன. சிலவேளைகளில் மருந்து கசக்கும் என்றாலும் குழந்தையின் நலன் தானே முக்கியம். அப்படியொரு சிந்தனை தமிழக அரசுக்கு மட்டும் இல்லாமல் போனதேன்?

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி, மதுரையிலுள்ள வழக்குரைஞர்கள் ஆறு பேர் பன்னிரெண்டு நாட்களுக்கும் மேலாக உண்ணாநோன்பிருந்தனர். கோரிக்கையிலுள்ள நியாயத்தைக் கூட, உணர மறுத்த தமிழக அரசு, ஒரு நள்ளிரவில் வழக்குரைஞர்கள் அனைவரையும் குற்றவாளிகளைப் போன்று கைது செய்தது. பல ஆண்டுகளாக தமிழக வழக்குரைஞர்களால் எழுப்பப்பட்டு வரும் இக்கோரிக்கை இந்திய ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தை ஆண்ட கட்சிகள் இதற்கொரு நிலையான தீர்வைக் காண முனைப்புக் காட்டவில்லை. அதுமட்டுமல்ல, தமிழ்மொழி கொஞ்சம் கூடத் தெரியாமல் முனைவர் பட்டம் வரை தனது படிப்பை மேற்கொள்ளும் மோசமான கல்வி முறை, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இருக்கிறது. இந்நிலையை மாற்றுவதற்குரிய முயற்சியை அண்மையில்தான் தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.

மொழி மற்றும் இன உணர்வை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கி ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இப்போதும் கல்வியில் தமிழ் புறக்கணிக்கப்படும் நிலையுள்ளதை யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் 'இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்ற நிலைக்குத்தான் உயர்ந்துள்ளதே தவிர, வழிபாட்டிலும் தமிழுக்குரிய இடம் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. நீதிமன்றம், கல்விக்கூடம், கோவில்களில் தமிழ் மொழியின் நிலை தாழ்ந்த நிலையில் இருக்கும்போதுதான் தமிழக அரசு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, உலகத் தரம் வாய்ந்த நூலகம் என்ற ஒரு சில தீர்மானங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக செம்மொழி மாநாடு பெரிதும் கவனம் பெறவில்லை. மானிய விலையில் சோறு என்பதைத்தான் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மார்தட்டி, பீற்றிக் கொண்டது. மாநாட்டின் நினைவாக கோவை காந்திபுரத்தில் பாலம் அமைக்கவும், தமிழின் வளர்ச்சிக்காகவும் தலா ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழக முதல்வர், பாலம் கட்டுவதையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் ஒரே அளவுகோலில் நிறுத்திப் பார்த்திருக்கிறார். செம்மொழி தமிழுக்குப் புகழ் மகுடம் ஏற்றியாயிற்று; உலகத் தமிழறிஞர்களெல்லாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளும் வழங்கியாயிற்று; மாநாடும் பல்வேறு விதமான ஆரவாரங்களோடு முடிந்தாயிற்று.

வழக்கம்போல் 'மைனாரிட்டி', 'மெஜாரிட்டி', 'அத்தாரிட்டி' என்று தமிழக முதல்வரின் அறிக்கை வாயிலாகவும், 'சஸ்பெண்ட்', 'பார்லிமெண்ட்', 'அசெம்பிளி' என்று தமிழ் ஏடுகளும், 'வியூவர்ஸ்', 'ஐ லைக்', 'தேங்க்யூ' 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' என்று மின்னணு ஊடகங்களும், 'மேரேஜ்', 'காலேஜ்', 'டீன் ஏஜ்', 'ஆண்ட்டி', 'அங்கிள்', 'டாட்டர்', 'சன்', 'பிரதர்', 'சிஸ்டர்' என்று பொதுத்தளத்திலும் தமிழ்மொழி மேலும், மேலும் 'வளரத்' தொடங்கியிருக்கிறது. 'என் தாய்மொழி நாளை அழிந்துவிடும் என்றால் இன்றைக்கே நான் செத்துப்போவேன்' 'ஆவார்' என்ற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கவிஞர் ரசூல் கம்சத்தேவ் சொன்ன வரலாற்றுச் சிறப்பு மிக்க வரிகள் இவை. தமிழைக் காப்பாற்றும் வழியிருக்கிறது; வகையிருக்கிறது; பலமிருக்கிறது. ஆனால், தாய்த் தமிழக மக்களுக்கோ இப்போதும் மனமில்லை. ஆகையால், தமிழர்களே... வாருங்கள்! நாம் ஒவ்வொருவரும் இன்றிலிருந்து சாகத் தொடங்குவோம்!

- இரா.சிவக்குமார் ( rrsiva@yahoo.com)

ஆக்டோபஸ் ஆருடம் - அடகு போன ஆறறிவு

வாலு போயி கத்தி வந்தது டும் டும்; கத்தி போயி மாம்பழம் வந்தது டும் டும் அப்டீன்னு நம்ம கொழந்தைங்க ஒரு கதப்பாட்டு பாடுவாங்க. அத மாதிரி, கிளி சோசியம், வெள்ளெலி சோசியம், முயல் சோசியமெல்லாம் போயி, இப்போ ஆக்டோபஸ் சோசியம்னு புதுசா ஒன்னு மொளச்சிருக்கு.

வெளயாட்டுப் போட்டில இப்பல்லாம் வெளயாட்டுத்தனம் அதிகமாயிடுச்சி. பின்னே ஆக்டோபசெல்லாங்கூட தீர்ப்பு சொல்ல ஆரம்பிச்சிடுச்சே! உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2010 ஆட்டத்தோட நாட்டாமை திரு.பால் (ஆக்டோபஸ்) தான் இப்ப உலகக் கதாநாயகன். நடந்து முடிஞ்ச உலகக்கோப்பைக் கால்பந்து போட்டில எந்ந நாடு சாம்பியனாகும்னு ஜெர்மன் அருங்காட்சியகத்துல இருக்கிற அந்த ஆக்டோபஸ்தான் நம்மஊர் நாட்டாமை கணக்கா தீர்ப்பு சொல்லியிருக்காம். இந்தக் கோதாவுல சிங்கப்பூர் கிளியும் இறங்கிச்சி. ஆனா அந்தப்பச்சக் கிளி பாவம் பயங்கர ஆக்டோபஸ் கிட்ட தோத்திடுச்சி போலருக்கு.

ஸ்பெயின்தான் 2010 கோப்பைய ஜெயிச்சிருக்கு. நெதர்லாந்து இரண்டாவது எடமும், ஜெர்மனி மூன்றாவது எடமும் பிடிச்சிருக்கு. கஷ்ட்டப்பட்டு வெளயாடி கோப்பைய வாங்குன ஸ்பெயின் நாட்டு வீரர்கள விட, கொடி இருந்த பொட்டிமேல கொஞ்சநேரம் (எதுக்கோ யாருக்குத் தெரியும்) ஒக்காந்து இருந்த ஆக்டோ பஸ்தான் இப்ப உலகக் கதாநாயகன். ஸ்பெயின் நாட்டு மக்களே நாட்டுக்குப் பெருமை சேத்த அவுங்க வீரர்கள விட்டுட்டு, ஜெர்மன் நாட்டு ஆக்டோபசைக் கொண்டாடிட்டு இருக்காங் கன்னா பாத்துக்கோங்க.

எல்லாத்தையும் விட ஒரு படி மேலேயே போயி, ஆக்டோபஸ் பாலுக்கு, ஸ்பெயின் அரசாங்கம் அந்த நாட்டோட கவுரவக் குடியுரிமை கொடுத்திருக்கு. ஸ்பெயினோட கார்போலினா நகர மேயர் கார்லோஸ் மொன்டீஸ், ஆக்டோபஸ் இருக்கிற ஜெர்மனியில இருக்கிற ஓபர் ஹாசன் அருங்காட்சயகத்துக்கே நேர்ல போயி அந்தக் குடியுரிமையைக் கொடுத்தாராம். ஆக்டோபசோட கையைப் பிடிச்சிக் குலுக்கி (எந்தக் கையன்னு புடிப்பாரு மனுசன்!) மரியாதையோட குடுத்தாரா இல்ல இதையும் கண்ணாடிப் பொட்டிக்குள்ள வச்சி தொட்டிக்குள்ள போட்டாரா?

அதவிடக் கொடுமை என்ன தெரியுமா, தலைநகர் தில்லியில கன்னார்ட் பிளேஸ்ங்கிற இடத்துல இருக்கிற, லிவ் பெட்ஸ் வேர்ல்ட் (செல்லப்பிராணிகள் கடை) அப்டீங்கற கடையோட உரிமையாளர் ராம் சரப் சொல்றது தான். ஆக்டோபச வீட்டுல செல்லப்பிராணியா வளக்க முடியுமான்னு கேட்டு நெறய தொலைபேசி அழைப்புகள் வருதாம். (நாய் கடிக்கே முழுசா மருந்து கண்டுபிடிக்கல, ஆக்டோபஸ் கடிச்சா...ஆத்தாடி...) அதுவும் உத்தியோகத்துல இருக்கிறவங்க கூட இப்படி கேக்குறாங்களாம். படிப்பு ரொம்ப முத்திப்போச்சி போல.

திறமை, முயற்சி, பயிற்சி - இந்த மூனு மட்டுமே ஆட்சி செஞ்சிட்டிருந்த வெளயாட்டுல, இப்ப இதுக்கெல்லாம் மதிப்பில்லாமப் போச்சி. மூடநம்பிக்கைள் அதிகமா இருக்கிறது இந்த வெளயாட்டுத் துறையிலதான். அஞ்சு வயசுல கட்டுன அறுணாக்கயிற கையில கட்டிக்கிறது, மைதானத்துக்குள்ள கால நொழைக்கிறதுக்கு முன்னாடி பேட்ட நொழைக்கிறது, சாமியார் எப்பவோ பூசையில் வச்சிக்குடுத்த அழுகிப்போன எலுமிச்சம்பழத்த எங்கவெளயாடப் போனாலும் கொண்டுபோறதுன்னு எக்கச்சக்கமா வெற்றிக் கான சூத்திரங்கள நம்ம வீரர்கள் வச்சிருக்கிறது நமக்குத் தெரியும். இதெல் லாம் சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிற மாதிரி அவுங்கள அவுங்களே அசிங்கப்படுத்திக்கிறது.

ஆனா இந்த ஆக்டோபஸ் ஜோசியம் அப்ப டியில்ல. உசுரக் குடுத்து வெளயாடுன 736 வீரர்கள, உத்து உத்துப் பாத்து பயிற்சி குடுத்த பயிற்சியாளர்கள ஒட்டு மொத்தமா அசிங்கப் படுத்திட்டாங்களே...சே. 32 நாடுகள், 736 வீரர்கள், ஒரே கோப்பை - வெல்லப்போவது யாருன்னு எட்டுக்கட்டையில கத்தி விளம்பரப்படுத்தி என்ன செய்ய, வாய் எது, கை எதுன்னே தெரியாத கடல் ஜந்து ஆக்டோபஸ், அதுகிட்ட எல்லாத்தையும் அடகுவச்சிட்டாங்களே!

ஒத்த கோல் அடிக்கிறதுக்குள்ள, ஒன்னுக் குப்போன மாதிரி, வேர்வையில கால்சட்டை நனைஞ்சிறுது பாவம் ஒவ்வொருத்தருக்கும். ஆனா,தேனெடுக்றவன் ஒருத்தன் பொறங்கைய நக்குறவன் இன்னொருத்தன்ற கணக்கா, உசுரக் குடுத்து கால்பந்தாட்ட வீரர்கள் வெளயாடி கோல்போட்டு ஜெயிச்சா, ஆக்டோபஸ் சொன்ன ஜோசியம் பலிச்சிடுச்சின்னு கோட்டு போட்டவன்ல இருந்து கோமணம் கட்டுனவன் வரைக்கும் கூத்தாடுறானுங்க. சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு...பரபரப்புக்கும், பப்ளிசிட் டிக்கும் ஆசப்பட்டு யாரோ சில பேரு அவுத்துவுட்ட சரடு. சரடு வுடறதும், வுட்டவன் யாருன்னு பாக்காமா, என்ன ஏதுன்னு ஆராயமா அப்படியே அதப்பிடிச்சிட்டுத் தொங்குறதுதான நம்மாளுங்க லட்சணம். அதனாலதான் அப்பப்ப இதுமாதிரி நெறய படங்காட்டுறாங்க.

எந்த ஒரு விலங்கும், தான் இருக்கிற பகுதிக்குள்ள புதுசா ஏதாவது வந்துச்சின்னா, தற்காப்புக்காக அதுமேல பாய்ஞ்சி வளைக்கத்தானே செய்யும் ? அதத்தான் இந்த ஆக்டோபசும் செஞ்சிருக்கு. அதுலயும், அதுக்குப் பிடிச்ச உணவோட ஒரு கண்ணாடிப்பொட்டிய வச்சா அப்படியே லபக்குன்னு புடிச்சிக்கிடாதா? ஒரே நேரத்துல இரண்டு பொட்டில இருக்கிற இரையையும் எடுத்து சாப்பிட முடியாதுல்ல, அதான் ஒரு பொட்டிய தொறந்து தின்னுட்டு, கஷ்ட்டப்பட்டு பொட்டியத் தொறந்த களைப்புலயும், தின்ன மயக்கத்துலயும் அந்த பொட்டி மேலயே கொஞ்ச நேரம் அசந்து படுத்திருக்கும். அசதி தீந்து அடுத்து பொட்டிக்குள்ள வாய் வக்கிறதுக்குள்ள, என்னெ ன்ன கதகட்டி வுட்டாங்க பாத்திங்களா!

ஆக்டோபசுக்கு ஏற்பட்டிருக்குற மவுசப் பாத்து, சோதிட ரத்னாக்கள், சோதிட திலகங்கள், சிகரங்கள், மலைகள், மண்மேடுகள் எல்லாம்வேற பதட்டத்துல இருக்காங்க. பின்னே தொழில்ல போட்டி அதிகமாயிருச்சே!

அதோட வெளயாட்டுத்துறைக்கு ஒரு யோசன சொல்லாம்னு... எதுக்கு கோடிக்கணக்கா பணம் செலவு செஞ்சி, விளம்பரப்படுத்தி, வெளயாட்டு வீரர்களோட ஒடம்பயும் புண்ணாக்கி தேவையில்லாத வேலையயல்லாம் பாத்துக்கிட்டு, பேசாம ஓடுறதோ, நீந்துறதோ எதையாவது ஒன்ன புடிச்சி முடிவ அறிவிக்கச் சொல்லி, கோப்பையக் குடுத்துட்டா பணமும் மிச்சமாகும், புதுமை யாவும் இருக்கும்ல. என்ன நாஞ்சொல்றது? (வர்ற அக்டோபர்ல இந்தி யாவில காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்கப்போற நேரத்துல நல்ல யோசனையில்ல?)

ஆறறிவு, அஞ்சறி வுகிட்ட அடகு போனத நென‌ச்சா வேதனையா இருக்கு.

தனிமனித சுதந்திரம்கிறது மனுசனுக்கு மட்டுந்தானா? புளு கிராசு, அது இதுன்னு என்னென்னவோ அமைப்புகள் எல்லாம் இருக்குதே, பேசாம மிருகவதைச் தடுப்புச் சட்டத்துக்குக் கீழ இவங்களப் பிடிச்சி உள்ள தள்ளவேண்டியதுதான!

- இலக்கியா