Sunday, August 22, 2010

அன்புடன் ஒரு குட்டி கடிதம் # 1










           இந்த உலகம் உண்மையிலேயே சிறியது தான் ... நான் பதிவு இட்ட சில மணித்துளிகளில் படித்து , உன்னால் முடியும் என உற்சாகமாய் பின்னோட்டம் (comments) அனுப்பிய என் நண்பன் சுப்புவிற்கு நன்றி . 

இந்த விபரித முயற்சி  தேவைதானா என மிகவும் யோசித்தேன் . ஏன் எனது அந்தரங்கங்களை மற்றவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டுமென யோசிக்கும் பொது , கிடைத்த பதில் . எனது வாழ்வின் சில விடயங்கள் நண்பர்கள்  சிலருக்கு தெரிந்திருக்கலாம் , சிலரிடம் நானே தூக்கம்  வராத இரவுகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் . ஆனால்மிகப் பல விடயங்கள் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகளாக இருந்து விட நான் விடக்கூடாதுஅந்த விடயங்கள் என்னுடன் முடிந்து போகக் கூடாது

அது ஒரு மின்னணு பொக்கிசமாக பாதுகாத்து கொள்ள எத்தனிக்கிறேன் . இந்த முயற்சிக்கு உந்துகோலாய் அமைந்த , எனது அறை நண்பன் ட்ரோஜன் (Trojan) க்கு நன்றி (அவனது வாழ்க்கை முக்கிய நிகழ்வுகளை ஒரு மின்னணு கோப்பாய் பாதுகாத்து வருகிறான் , படங்களுடன் ).

சரி , அதனை பதிவுகளாய் இட முயலும் பொது கண்டிப்பாய் சில வரைமுறைகளை வகுத்தாக வேண்டும்அல்லது தவறாக முடிந்து விடக்கூடும் , என நான் எண்ணுகிறேன்யாருடைய  நிகழ்கால வாழ்கையும் பாதித்து விட காரணமாய் அமைய விடக்கூடாதுஅதனால் , சில இடங்களில்  எனது நிகழ்வுகளில் இருந்து சிலவற்றை மறைக்க வேண்டும் , சிலரது பெயர்களை மாற்ற  கூட தேவைப்படும்.  அத்தகைய தருணங்களில் படிப்பவர்களுக்கும் தெரியாமல் பார்த்து கொண்டால் தான் ஒரு நல்ல எழுத்துக்களாய் முற்று பெரும் . 

சரி , எழுத்து நடை(Writing Style) எவ்வாறாக இருந்தால் நன்றாக அமையும் என யோசிக்கும் பொழுது ? அது கதை சொல்வதாக அமைந்தால்சுவை குன்றி விடலாம் எனவே ஒரு விடை தெரிந்த நாவலாக  கொண்டு செல்ல முயற்சிக்கிறேன் . அவ்வப்பொழுது சில கதா பாத்திரங்களுக்கு சில விடயங்களை சொல்ல அன்புடன் ஒரு குட்டிகடிதம் (..கு.எழுத ஆவலாக உள்ளேன்.அது ஒரு நன்றி மடலாக கூட அமைந்து விடலாம் , பார்க்கலாம் என்னுடைய இந்த முயற்சி எவ்வளவு தூரம் போகுமென ........ 

எப்பொழுது இதனை எழுதி உங்களுடைய பார்வைக்கு கொண்டு வரலாம் ? எழுத நேரம் கிடைக்கும் போதா ? இல்லை ஒரு குறிப்பிட்ட  நாளில் ஒரு இதழை போலா ? பார்க்கலாம் அது படித்து கொண்டிருக்கும் இந்த நண்பர்களின் வரவேற்ப்பை பொறுத்து இருப்பது நல்லது . 

மீண்டும்  என்னுடைய நன்றி ..... மற்றுமொரு பதிவில் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் ......................

Saturday, August 21, 2010

ஒரு புது முயற்சி



                             இந்த நடு ராத்திரியில் நான் ஏன் இப்படி யோசித்தேன் என தெரியவில்லை ... என் நண்பன் சுப்பு கூட ஒரு தடவை கேட்டான் ... உனக்கு எதற்கு இந்த வலைப்பூ ... நீ எதாவது எழுத வேண்டும்இப்படி படித்ததில் பிடித்தது என்று காப்பி அடித்து போட வேண்டிய அவசியமென்ன ? அவன் அப்படி கேட்டதில் தவறென்ன ? சரிதான் ... நான் ஏன் எனது கருத்துகளை மற்றவர்களிடம் திணிக்க வேண்டும் ? அது அவரவரது கருத்து சுதந்திரம் ...



                   எழுத்து துறையில் நானும் சாதிக்க வேண்டுமென்ன எண்ணியதுண்டு .... நான் ஒரு எழுத்தாளன் இல்லைதான் ( I am not a armature writer ) ... நான் எழுதினால் படிப்தற்கு யார் உண்டு என எண்ணியது கூட உண்டு ... எதையுமே செய்து பார்க்காமல் யோசிப்பது தவறு தான்... ஆனால் எதை எழுதி என் எழுத்துலக பயணத்தை அரம்பிப்பதென யோசித்தேன் ... ஒன்றும் வரவில்லை இந்த மரமண்டையில் , ஒரு நிண்ட பயணத்தில் ஆங்கில நாவலை (20 Still Virgin ? ? ?) படிக்கும் பொது உதித்த எண்ணம் , சொன்னால் சிரிக்க கூடாது . என் வாழ்கையோட்டதை ஏன் எழுத கூடாதென யோசித்தேன் .. ( சிரிக்க கூடாது .. என்ன சின்ன பிள்ளை தனமா இருக்கு ! . ! ). அந்த ஆங்கில நாவலின் கதை அப்படி தான் அமைந்தது .. எழுத்தாளன் வாழ்க்கையின் பின்னோக்கி பயணம் செய்கிறான் .... நானும் யோசித்தேன் .. என்னை வைத்து யாரும் படம் எடுக்க வாய்ப்பில்லைநானே என்னை வைத்து எடுத்தால் தான் ..... படிக்கும் நீங்கள் யோசிக்கலாம் ( எனக்கே தெரியும் இந்த வலைப்பூவை யாரும் படிக்க மாட்டார்கள் என ).. இவனை பற்றி எழுத இவன் என்ன அத்தனை  பெரிய சாதனையாய பண்ணி விட்டான் ?.. நான் எந்தவொரு சாதனையும் பண்ண வில்லை தான் , ஆனால் ஏன் ஒரு புது முயற்சியாய் என் வாழ்கையோட்டதை எழுத கூடாதென யோசித்ததன் விளைவு இந்த பதிவு . 

                     இது எனக்கு என் வாழ்கையை திரும்பி பார்க்க வைக்கும் .. நான் செய்த தவறுகள் மறுபடியும்  நிகழாமல் பார்த்து கொள்ள உதவும் என நம்புகிறேன்என் நினைவிலே மட்டும் வாழும் சில நிகழ்ச்சிகளின் மின்னணு  பதிவாக இருக்கும்இந்த நினைவுகள் சில நாள்களில் மறைந்து போகலாம்ஆனால் இந்த வலைப்பூ மூலமாக நிடித்து நிலைக்குமென நினைக்கிறன் .... படித்து கொண்டிருக்கும் நீங்கள் கூட இப்பொழுது யோசிக்கலாம் ... அப்படி என்ன தான் நடந்து விட்டது இவன் வாழ்கையில்

                        எனக்கே தெரியாமல் என் வாழ்க்கை ஒரு நிண்டபல திருப்பங்களை  கொண்ட ஒரு தொடர்கதையாக போய் கொண்டுதான் இருக்கிறது ....

                                   கண்டிப்பாக என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வாய்ப்பு இல்லை தான்ஒரு சுவாரசியமான பதிவுகளாக இதனை கொண்டு செல்ல முயற்சிக்கிறேன் நண்பர்களே . இது ஒரு தம்பட்டம் அடித்து கொள்ளும் கதையாக அமையாமல் பார்த்துக் கொள்கிறேன்

                      இது  என்னை போன்ற ஒத்த கருத்துள்ள பல நண்பர்களை இணைக்கும் பாலமாக அமைய வேண்டுமென நினைக்கிறன் . பல கடந்து போன நண்பர்களை திரும்பி மனக்கண்ணில் பார்க்கும் முயற்சி எனக்கு . 

இந்த முயற்சி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. 

உங்களது மேலான கருத்துகளை பின்னோட்டம் மூலம் எனக்கு தெரிய படுத்துங்கள் . அது என் எழுத்துக்களை மெருகுட்ட பயன்படும்.  

இந்த பதிவை எழுதி முடித்த பிறகும் கூடஇந்த முயற்சி தேவைதானா என யோசிக்கிறேன் ... தற்பொழுது உள்ள சில நண்பர்களிடம் கருத்துகளை கேட்டு,  என் வாழ்கையில் பின்னோக்கி பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன் ..... பார்க்கலாம் .



Monday, August 16, 2010

தஞ்சை பெரிய கோவில் – கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!

வரும் செப்டம்பர் 25, 26 தேதிகளில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், கலைஞர்கள், வாரிசுகள் அனைவருமாய் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர்.

இதன்படி தஞ்சை நகர் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் தெருவோர நிகழ்ச்சிகள், பெரிய கோவிலில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி, நூறு ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம், பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலையில் திலகர் திடலில் கருணாநிதி தலைமையில் அஞ்சல் தலை, நாணயம் வெளியிடுதல், பெரிய கோவிலின் வரலாற்றை நினைவு கூரும் கண்காட்சி, இந்த விழாவுக்காக தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் எல்லாம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இனி செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும். ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு அமைச்சர் தலைமையில் நியமிக்கப்படும் குழு அடிக்கடி கலந்து பேசி நடத்தும். தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளும் இனி இரண்டு மாதங்களாய் பெரிய கோவில் விழாவுக்கான வேலையை கவனிப்பார்கள். ஊடகங்களும் இது குறித்து சிறப்பு மலர் வெளியிட்டு கருணாநிதி சோழனது புகழ் பாடும். தொலைக்காட்சிகளில் இசையும், காட்சியும் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு ஓடும்.

இந்தக் குத்தாட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசு இன்னும் சொல்லவில்லை. இதிலிருந்து அவர்களது பட்ஜெட் இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. மக்களும் தமது வாழ்வியல் பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு இனி இரண்டு மாதங்களாக இந்த கிளாடியேடட்ர் ஷோவை இரசிப்பார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை நினைவுகூரும் வண்ணம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அன்றைய நிலைமையில் இருந்த நிலவுடைமை சமூகத்தின் மிகவும் குறைவான உபரி உற்பத்தி இந்தக் கோவிலுக்காக பயன்பட்டிருக்கிறது. அதன் பொருள் மிகவும் வறிய நிலையில் பசியும் பட்டினியுமாகவே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள். பாறையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கற்கோவில்கள் ஏராளமிருக்கின்றன. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்ததால் நமது கட்டிடக் கலையின் மகத்துவத்தை விட மக்கள் பட்ட துன்பங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

ராஜராஜ சோழன் காலத்து மக்கள் வாழ்க்கை நிலையிலிருந்து இன்றும் நமது மக்களின் நிலைமை பெரிதும் மாறவிடவில்லை. ஒரு ரூபாய் அரிசிக்கும், குடிசை வீட்டின் பத்து ரூபாய் மின்கட்டணத்திற்கும், வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணத்திற்கும்தான் நமது மக்கள் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனில் இந்த ஆயிரம் வருட நிறைவின் பொருள் என்ன?

அன்று ராஜராஜ சோழன் தனது சாம்ராஜ்ஜியத்தின் வலிமையினை பறைசாற்றும் வண்ணம் இந்தக் கோவிலை கட்டினான். இன்று அதே கோவிலின் ஆயிரமாண்டு நிறைவை கருணாநிதி சோழன் தனது கட்சி, குடும்ப சாம்ராஜ்ஜியத்திற்காக கொண்டாடுகிறார். ஆக சோழர்களின் சர்வாதிகார ஆட்சி இன்னும் நீடிக்கிறது. அன்று பட்டினியுடன் கோவிலுக்கான கற்களைச் சுமந்த மக்கள் இன்று பசியுடன் அந்த கோவில் கொண்டாட்டத்தினை கண்டு களிக்கிறார்கள். ஆக அன்றைக்கு மேட்டுக்குடிக்கு மட்டும் இருந்த பொழுது போக்கு இன்று எல்லோருக்கும் இருக்கிறது என்பதுதான் இந்த ஆயிரமாண்டு இடைவெளியின் முன்னேற்றமா?

சரி, கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்ட திருவிழா எதுவோ, நினைத்தாலே கிலியாக இருக்கிறது!

இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?

உலகம் முழுவதும் பசியில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் இருக்குமென்று ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பின் (IFAD) 33வது ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் கனாயோ வீன்ஸ் கூறியுள்ளார். மேலும் இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிப்பதாகவும் (33 கோடிபேர்) குறிப்பிடப்படுகிறார். ஐக்கிய சபையின் செயலாளர் பான் கீ மூன் பசியால் உலகில் சுமார் 17,000 குழந்தைகள் தினமும் இறப்பதாகவும், சராசரியாக 6 விநாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்தியா உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் உள்ளதெனவும், 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு உள்ளனர் எனவும், இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பசி அட்டவணையில் 94வது இடத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு இந்தியாவில் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றதா என்றால் இல்லையென்பது தான் உண்மை. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 2009-10ஆம் ஆண்டில் 218.20 மில்லியன் டன். இது 2008-09ஆம் ஆண்டில் 237.47 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. அதேபோல் தென்மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 99.18 மில்லியன் டன்னாக இருந்தது 2010-11ல் 100 மில்லியன் டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சனை எங்கே?

இந்தியாவில் வறுமையும் பசியும் தொடர்கதையாய் இருப்பதற்கு மூலக்காரணம் திட்டமிட்ட பகிர்வு இல்லாமை; பகிர்வில் குளறுபடிகள் மற்றும் பிரச்சனையின் வீரியத்தை புரிந்து கொண்டு அதைத் தீர்த்திட முன்வராததேயாகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இந்தியாவில் 33 கோடிப் பேர் பசியால் வாடும் நிலையில் போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு ஒரு கோடியே 69 லட்சம் டன் உணவு தானியம் வீணாவதாக இந்திய உணவுக்கழகம் தெரிவிக்கிறது. சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளான பின்பும் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகளில்லை. இந்திய உணவுக்கழகத்தால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும் இக்கழகத்தின் சேமிப்பு வசதி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மட்டுமே. இதர உணவு தானியங்கள் ஆங்காங்கே திறந்தவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில் கெட்டுப் போகக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.

உணவின்றி ஒருபக்கம் மக்கள் வாடுகையில் உணவு பாதுகாப்பின்றி கெட்டுப்போகக் கூடிய நிலையும் உள்ளது. இதைத்தான் உச்சநீதிமன்றம் கடுமையாக்க் கண்டித்து உணவுப்பொருள் ஏதும் வீணாகக் கூடாது உடனடியாக இதனை பசியால் வாடுவோருக்கு வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீதிபதி வாத்வா கமிட்டி அறிக்கையின்படி பொது விநியோகத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் திருட்டுகள் நடைபெறுகின்றன. எனவே பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக கணிணிமயமாக்கிடல் வேண்டுமெனவும் குறிப்பிடுகிறது. அரசு வழங்கும் உணவுப்பொருட்களில் கால்பங்குதான் உரிய மக்களைச் சென்றடைகிறது என்றும், மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறையை மறுசீரமைத்திட வேண்டுமெனவும் நிதி அமைச்சரின் தலைமைப் பொருள்இயல் ஆலோசகர் Dr.கௌஷிக் பாசு குறிப்பிடுகிறார்.

உணவுப்பாதுகாப்பு மசோதா தயாரிப்புப் நிலையிலிருக்கக்கூடிய காலகட்டத்தில் பல்வேறு விசயங்களை கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் உணவு ஓர் பிரச்சனையல்ல. அதே நேரத்தில் பணமும் பிரச்சனையல்ல. ஆனால் யாருக்கு எவ்வளவு செலவு செய்வது என ஒதுக்கீடு செய்வதில் தான் பிரச்சனை. மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார், ‘இந்தியாவில் விமானத்தளம் அமைத்திட 10,000 கோடி ரூபாயும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக 60,000 கோடி ரூபாயும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் மான்யமாக 5,00,000 கோடி ரூபாயும் வழங்க முடிகிறது. ஆனால் பொது விநியோகத்திட்டத்திற்காக 84,399 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடியாதா’ என கேள்வி எழுப்புகிறார். ஏனெனில் இந்தியா முழுவதுமுள்ள அனைவருக்கும் கிலோ ரூ.3ல் பொது விநியோகத்திட்டத்தில் உணவு வழங்கிட அதுவே போதுமானதாகுமென பொருள்இயல் வல்லுநர்கள் பிரவின் ஜா மற்றும் N.ஆச்சார்யா ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

சுதந்திர இந்தியாவில் 1952ல் சமுதாய வளர்ச்சி வட்டாரங்கள் என துவங்கப்பட்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் வறுமையை ஒழிப்போம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு தனிநபர் பயனளிப்பு சார்ந்த திட்டங்கள் மூலம் வறுமையும். பசியும் குறைந்து வந்தது. ஆனால் இன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக தனிநபர் பயனளிப்புத்திட்டங்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டுவிட்டதும் கூட வறுமை உயரக்காரணமானது. அதேபோன்று இந்தியா ஓர் விவசாய நாடு. இதில் சிறுகுறு விவசாயிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததாலும், அவர்கள் விவசாயம் பொய்த்துப்போகும் காலகட்டத்தில் விவசாயிகள் என்ற நிலையிலிருந்து விவசாயக் கூலிகள் அல்லது கட்டிட கட்டுமானக் கூலிகள் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் இரசாயன உரங்கள் உபயோகத்தின் காரணமாக வளமான, நிரந்தர நீர்பாசன வசதி கொண்ட ஏறத்தாழ 20 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உற்பத்தித்திறனை இழந்துள்ளதென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோன்றே இந்திய கிராம விவசாயிகளுக்கு போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் 20 சதவீதம் முதல் 30 சதவீதமான உணவு தான்யங்களும். காய்கறிகளும் விளை நிலங்களிலிருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பே வீணாகிறது. இவை தடுக்கப்பட்டால் இந்தியாவின் உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னையும் தாண்டுமென ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே 50% மேல் விவசாய நிலங்களைக் கொண்ட கிராமங்களை ஒன்றிணைத்து விவசாயப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படல் வேண்டும். தங்க நாற்கரச் சாலைத்திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் அளித்து இக்கிராமங்களின் விவசாய நிலங்களில் முறையான சாலை வசதிகளை அளித்திடல் வேண்டும். இம்மண்டலத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு உற்பத்திக் கடன்கள் 4% வட்டியில் தாராளமாக வழங்கப்படல் வேண்டும். இம்மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து விளைபொருட்களையும் பாதுகாத்திடத் தேவையான பாதுகாப்பு கிட்டங்கிகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் மூலம் உற்பத்தி உயர்ந்து இந்தியாவின் விவசாய வருமானம் 4%லிருந்து உயருவதற்கு வழி வகுக்கும்.

தீர்விற்கான வழி:

 பொது விநியோகத்திட்டத்தை விரிவுபடுத்தி உணவுப்பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி எந்தவித கட்டுப்பாட்டின்றி வழங்குவது

 ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தாலும் உணவுப்பொருள் வழங்குவது

 குடும்ப நபர் எண்ணிக்கைக்கு இணங்க அதன் மடங்குகளில் உணவுப்பொருள் வழங்குவது

 இந்தியா விவசாயிகள் அனைவருக்கும் 4 சதவீத வட்டியில் அனைத்து செயல்களுக்கும் (விதை, அறுவடை விற்பனை) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வங்கிக் கடன் வழங்குதல்

 போதுமான சேமிப்புக் கிட்டங்கிகளை ஏற்படுத்தி உணவுப்பொருட்கள் வீணாவதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்துவது

 உணவுப்பொருட்களை விவசாயிகளே உழவர் சந்தை போல் நேரடியாக விற்பனை செய்திட ஏற்பாடு செய்திடுதல்

 பொது விநியோகத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி அதனை முழுமையாகத் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிப்பது, அதில் ஊழல் செய்பவர், தடை ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது.

 விவசாயப் பொருட்களை மாற்றம் செய்யப்பட்ட- மதிப்பு கூட்டிய நிலையில் விற்பனை செய்திட விவசாயிகளுக்கு பயிற்சியளித்தல்

 இவை இந்திய விவசாய வளர்ச்சியை 4%லிருந்து 10% உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய 75% மக்களைக் கொண்ட இந்திய மக்களின் வறுமையையும் பசியையும் நீக்கும்.

- மதுரை சு.கிருஷ்ணன்

Friday, August 13, 2010

குழந்தைகளாக இருக்கவிடுங்கள்...! (ஒரு குறும்படத்தை முன்வைத்து)

குழந்தைகள் எப்போதுமே குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்களாக ஆக எப்போதும் விரும்புவதில்லை. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதைப்போல, குழந்தைகள் தாங்கள் விரும்பும்படி இருக்க விரும்பினாலும் நாம் அவர்களை அனுமதிப்பதில்லை. நாம் விரும்புகிற மாதிரியோ அல்லது நம்மை மாதிரியே அவர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதிலும் சின்ன வயதிலேயே குழந்தைகள் பெரியவர்களைப்போல ‘சமர்த்தாக’ (நாம் சமர்த்தாக இருக்கிறோமா அல்லது பலநேரங்களில் முட்டாள்களாகவே இருக்கிறோம் என்பது யோசிக்கத்தக்கது) இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சினிமாவில் வரும் குழந்தைகளைப் போல நமது பிள்ளைகளும், வயசுக்கு மீறிய விஷயங்களைப் பேசினால் 'அய்யோ... எம்புள்ள எப்புடி பேசுது பாரேன்...' என்று மற்றவர்களிடம் காட்டிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறோம். கள்ளங்கபடமற்ற குழந்தைமையை கொன்று சகல அழுக்குகளும் நிறைந்த பெரியவர்களாக அவர்களை மாற்றுவதில் அப்படி என்னதான் சந்தோஷமோ தெரியவில்லை.

ஆனால் இந்த கண்ணாமூச்சி விளையாட்டிலிருந்து குழந்தைகள் எப்போதும் எப்படியாவது தப்பித்துவிடுகிறார்கள். உனக்கும் பெப்பே... உங்கப்பனுக்கும் பெப்பே. . என்று அழகுகாட்டிவிட்டு ஒப்பற்ற தங்களின் மாய உலகத்திற்குள் நுழைந்துவிடுகிறார்கள். அந்த உலகில் போட்டி, பொறாமையில்லை; சூதுவாது இல்லை; வஞ்சகம் இல்லை. அடுத்தவனுடையதை தட்டிப் பறிக்கும் ஆவேசமில்லை. தனக்கு தனக்கு என்று ஒதுக்கி, பதுக்கி வைத்துக்கொள்ளும் களவாணித்தனம் இல்லை. அங்கு எல்லாமே திறந்த புத்தகம்தான். எந்தப் பக்கத்தையும் எவரும் வாசிக்கலாம்... எந்தப் பக்கத்திலும் எவரும் எழுதலாம். அவர்களின் விரிந்து கிடக்கும் வானத்தில் கொட்டிக்கிடக்கும் அழகிய வண்ணங்களை எவரும் எடுத்து பூசிக்கொள்ளலாம்; எவருக்கும் பூசிவிடலாம்; எல்லாமும் வெளிப்படையானது இந்த குழந்தைகளின் உலகத்தில். இங்கு மறைப்பதற்கென்றோ ஒளிப்பதற்கென்றோ எதுவுமில்லை.

ஆனால் இது உன்னுடையது, யாருக்கும் காட்டாதே... கொடுக்காதே. . என்று 'புத்திமதி' சொல்லிதான் நாம் நமது குழந்தைகளை வளர்த்தாலும், அவர்கள் தங்கள் போக்கிலேயேதான் இருப்பார்கள் என்பதை அழகாக சொல்கிறது 'அன்பு' (LOVE) என்ற குறும்படம். சசிக்குமார் என்பவர் இயக்கியுள்ள இப்படம் நான்கு நிமிடங்களே ஓடுகிறது. . YOU TUBE இணையதளத்தில் (http://www.youtube.com/watch?v=CGMY6BTQ2ys&feature=email) காணக்கிடைக்கிற இப்படத்தை இதுவரை பல்லாயிரம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விடுதி ஒன்றில் கதை நடக்கிறது. அங்குள்ள சிறுமி ஒருத்திக்கு ஒரு மிட்டாய் ( சாக்லெட்) கிடைக்கிறது. விடுதியின் காவலாளி, 'ஒரு சாக்லெட்தானே இருக்கிறது. உள்ளே போனால் எல்லாக் குழந்தைகளும் கேட்கும். அதனால் மறைவாக பின்புறமாக போய் சாப்பிடு' என்று அக்கறையுடனும், ஒரு நல்ல வழிகாட்டுதலை வழங்குகிறோம் என்ற பெருமிதத்துடனும்(!)... 'புத்திமதி' கூறுகிறார். சரி என்று அந்த சிறுமியும் பின்புறமாக செல்லுகிறாள். சற்று நேரத்தில் ஒவ்வொரு குழந்தையாக அங்கு சென்றுவிடுகிறார்கள். வகுப்பறை காலியாகயிருப்பதை பார்க்கும் ஆசிரியை காவலாளியிடம் விசாரிக்க அவரும் நடந்ததை சொல்கிறார். இருவரும் அங்கு சென்று பார்க்கின்றனர்.

தனக்கு கிடைத்த சாக்லெட்டை சூரியனுக்கு காட்டியபடி அந்த சிறுமி நிற்கிறாள். அவள் விரும்பியபடியே சூரியச் சூட்டில் சாக்லெட் உருகுகிறது. எல்லாக் குழந்தைகளும் அதை சுவைத்து சாப்பிடுகிறார்கள். ஆசிரியையும் காவலாளியும் தங்கள் ‘வழிகாட்டுதலை’ உணர்ந்தபடி சிரிப்பதுடன் படம் முடிவடைகிறது. படமென்னவோ குறும்படம்தான்... ஆனால் அது சொல்வதோ பேருண்மையை. அது குழந்தைகளை... குழந்தைகளாகவே இருக்கவிடுங்கள் என்பதுதான்

- எஸ்.கருணா ( skaruna63@gmail.com)