Saturday, June 2, 2012

அரசியல்

அரசியல்



வாயிலே
அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்;
கொப்பளித்துக்
கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்;
நீரே அழுக்கு
!              (சுப்பிரமணிய ராஜு)


என்ன ஒரு புதுக் கவிதை தற்கால அரசியல் நிலைமை இதுதான்.

அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், நாட்டு நலனில் நாட்ட முள்ளவர்களும், மாசற்ற தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில் அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தனர். 'தத்துவ ஞானிகளே தலைமையேற்று ஆளவேண்டும்!' என்று அறிவுறுத்தியவர் கிரேக்க அறிஞர் பிளேட்டோ. தனக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லாத மனிதர்களே தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவருடைய அழுத்தமான அபிப்ராயம்.

மனைவி, மக்கள், குடும்பம் என்று அன்றாடம் பாசத்தில் அலைக்கழிக்கப்படுபவர்கள் விரைவில் ஆசை வலையில் விழுந்து, தன் நிலை தாழ்ந்து, தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் இருந்து வெகுதூரம் விலகி,

காலநடையில் ஊழலின் உற்பத்தியாளர்களாக உருப்பெற்று விடுவார்கள் என்ற நியாயமான அச்சத்தினால்தான், நெருங்கிய உறவுகளை நெஞ்சத்தில் வளர்த்துக் கொள்ளாதவர்கள் மட்டுமே 'வையகத் தலைமை' கொள்ள வேண்டும் என்று இயேசு பிறப்பதற்கு முன்பே விதியன்று செய்தார் பிளேட்டோ.

தத்துவம் என்பது உண்மையின் உருவம். உண்மையைத் தேடும் யாரும் பொய்யின் நிழலில் இளைப்பாற விரும்ப மாட்டார்கள். அதனால்தான், அதிகார நாற்காலியில் தத்துவஞானிகள் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டார் அந்த ஆதிச் சிந்தனையாளர். மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் வல்லமை அன்று முதல் இன்று வரை அரசியலுக்கே உண்டு. அரசியல் சார்ந்த ஆட்சிக் கலையைத் 'தலைமை அறிவியல்' (Master Science) என்று அரிஸ்டாட்டில் வர்ணித்ததில் ஆழ்ந்த அர்த்தம் உண்டு. ஆனால், இன்று அனைத்தும் தலைகீழாக மாறித் தரம் தாழ்ந்துவிட்டன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமாக நேற்றிருந்த அரசியல் உலகம், இன்று சகல விதமான அயோக்கியர்களுக்கும் முதல் சரணாலயமாகிவிட்டது.

சந்திரமதி இல்லாமல் அரிச்சந்திரன் நாடகம் இல்லை. கள்ள மனிதர்கள் இல்லாமல் இன்று எந்த அரசியல் கட்சி யும் இல்லை.

சமூகத்தில் படிந்துவிட்ட சகல அழுக்குகளையும் அகற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே இன்று எளிதில் சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாக அழுக்கேறிக் கிடக்கிறது. துர்நாற்றம் வீசும் இந்த அரசியல் குட்டையைத் தூர்வார யாரும் இங்கே தயாராக இல்லை. அடித்தட்டு மக்களுக்கு இந்த நாற்றம் பழகிவிட்டது. மேல்தட்டு வர்க்கம் மூக்கை மூடியபடி முகத்தைத் திருப்பிக்கொண்டது. யார்தான் இந்த நாட்டு மக்களின் நிலை குறித்து யோசிப்பது? புழுத்துக்கிடக்கும் பொதுவாழ்வைப் புனிதமாக்க யாராவது சிலர் முன்வந்து சிலுவை சுமக்கத்தான் வேண்டும்.

ஒரேயரு இயேசு புறப் பட்டால், அதிகாரபீடம் எளி தாக அவரைச் சிலுவையில் அறைந்துவிடும். ஆயிரக்கணக்கில் சிலுவை சுமக்க வாக் காளர்கள் முன்வந்தால்... தவறு செய்பவர்கள் தலையில் சிரமமின்றி முள்மகுடம் சூட்டிவிடலாம். 'எது நடந்தால் நமக்கென்ன?' என்றா பகத்சிங்கின் பரிவாரம் பார்த்துக் கொண்டிருந்தது? 'எரிகிற வீட்டில் எடுத்த வரை ஆதாயம்...' என்ற நோக்கிலா காந்தியப்படை அன்று அகிம்சைப் போர் நடத்தியது? சமூகப் பொறுப்பு உணர்வு உள்ள வர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருத்தலாகாது.

அடிமை இந்தியாவில்கூட ஆயுதம் தேவைப்பட்டிருக் கலாம். சுதந்திர இந்தியாவில் அறவழி மூலம் அறப்போர் நடத்தியே ஆயிரம் மாற்றங்களை நாம் நினைத்தால் அரங்கேற்ற முடியும். முதல் மாற்றம் நம் விதியெழுதும் அரசியல் தளத்தில் நிகழ்வதற்கு வழிவகுக்க வேண்டும். 'தீமையின் வெற்றிக்குத் தேவையானது நல்லவர்கள் எதுவும் செய்யாதிருப்பதே' என்ற ஆங்கில அறிஞர் எட்மண்ட் பர்க் வாசகத்தை நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டும்.

அறத்தையும், அரசியலையும் நம் முன்னோர் கள் பிரித்துப் பார்த்ததில்லை. அரசியலறம் கூறுவதுதான் திருக்குறளின் பொருட்பால். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்கிறது சிலப்பதிகாரம். எந்த மனிதனும் ஆட்சித் தலைமையைத் தகுதியின்றி அலங்கரிக்க நம் மூதாதையர்கள் அனுமதித்ததில்லை. மகாபாரதம் சாந்தி பர்வத்தில் ஓர் ஆழ்ந்த அரசியல் செய்தி உண்டு. 'ஆள்வதற்காக அரசுக் கட்டிலில் அமர்ந் தவன் ஒரு தாயைப் போல் இருக்கவேண்டும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குரிய தர்மமே அரச தர்மம். தனக்கு விருப்பமான உணவைவிட, கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான உணவையே ஒரு தாய் ஏற்பாள். ஆட்சியாளனும் தனக்கு விருப்பமான செயல்களைச் செய்யாமல், மக்கள் நலனுக்கு உரிய காரியங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்' என்று அம்புப் படுக்கையில் மரணத்தின் மடியில் சாய்ந்து கிடக்கும் பீஷ்மர், தருமனுக்கு அரசியலறம் உரைக்கிறார்.

'இந்திரன் வேள்விப் பொருளைப் பெற்று உலகைக் காப்பது போல், ஆள்பவன் மக்களிடமிருந்து வரியைப் பெற்று அவர்களை வாழச் செய்ய வேண்டும். உயிர் வளர்க்கும் காற்றை வாயு வழங்குவது போல், ஆட்சித் தலைவன் தீமையை அழித்து நன்மையை வழங்க வேண்டும். இருளகற்றி ஆதவன் ஒளியைப் பரப்புவது போல், அதிகாரம் செய்பவன் மறமகற்றி, அறத்தை நிலைநிறுத்தவேண்டும். காவலன் காலனைப் போல் தீயவரைத் தண்டித்து, நெருப்பைப் போல் தூய்மை காத்து, மழையைப் போல் மண்ணை வளப்படுத்தி, நிலவைப்போல் மக்களை மகிழச் செய்ய வேண்டும்' என்கி றது சுக்கிர நீதி.

சாணக்யன் தனது அர்த்தசாஸ்திரத்தின் ஆறாம் அத்தியாயத்தில், 'மக்களை ஆள்பவன் முதலில் தன் மனத்தை ஆள வேண்டும். காமம் என்னும் உட்பகையை வெல்ல அவன் புலனடக்கம் பழக வேண்டும்' என்கிறான். 'கனவில் கூட காமவசப்படல் ஆகாது. ஆணவம், பொய், தீமை தரும் சூழ்ச்சிகளை விட்டு விலக வேண்டும். அறம், பொருள், இன்பம் மூன்றையும் சமநிலையில் அனுபவிக்க வேண்டும்' என்று அரசு நடத்துவோர்க்கு அவன் அறிவுறுத்துகிறான். திருக்குறளும், சிலம்பும், பாரதமும், சுக்கிரநீதியும், அர்த்தசாஸ்திரமும் காட்டிய வழியிலா நம் அரசியல்வாதிகள் நடக்கிறார்கள்? அப்படி நடக்கவேண்டும் என்று மக்களே இன்று எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியூட்டும் அவலம். ஊழல் பேர்வழிகள் அதிகாரத்தில் இருப்பதுதான் நம் சொந்த நலனுக்கு உகந்தது என்று ஒரு சமூகம் நினைக்கத் தொடங்கிவிட்டால்... அதன் சரிவை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?

மறைந்த சட்டமேதை நானி பல்கிவாலா, 'இந்தியாவின் இன்றைய தேவை அளவற்ற சுதந்திரமில்லை; அதிகமான ஒழுக்கம்' என்றார். கொசுக்களின் கூடாரமாக, நோய்களின் இருப்பிடமாக, சதுப்புநிலக் காடுகளின் உறைவிடமாக இருந்த சிங்கப்பூரைத் தென்கிழக்கு ஆசியாவின் சொர்க்கமாக லீ குவான் யூ மாற்ற முடிந்ததற்கு அடித்தளம், அவர் கையாண்ட கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமும், கட்டமைக்கப்பட்ட மானுட ஒழுக்கமும்தான். நம் நாட்டில் தவறான சுதந்திரத்துக்கு எல்லையில்லை; ஒழுங்கீனத்துக்கோ அளவேயில்லை. 'நாடாண்ட அரசர்கள் சுகங்களைத் துறந்து, காடேகி அறம் வளர்த்தார்கள். சொந்த சுகங்களை மறுதலித்த அந்தப் பண்பு, இன்று ஏன் அரசியல் உலகில் அற்றுப்போனது?' என்று மனம் நொந்த பல்கிவாலா, 'நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் முதல் தரமானது. ஆனால், அரசியல்வாதிகள் மூன்றாம் தரமானவர்கள்!' என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் சுதந்திரம் கண் விழித்து 62 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று உலகிலேயே அதிகமான ஏழைகள் உள்ள நாடு நம் இந்தியாதான். நாற்பது கோடி மக்கள் வறுமை இருட்டில் வாடுகின்றனர். இவர்களில் 75 சதவிகிதம் மக்கள் கிராமங்களில் வாழ்பவர்கள். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர் கல்வி வெளிச்சத்தை இன்று வரை காணவில்லை. உலகிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருப்பது இந்தப் புண்ணிய பூமியில்தான். மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் உலகின் 196 நாடுகளில் நமக்கு 127-வது இடம். இந்த லட்சணத்தில் நாம் விரைவில் வல்லரசாகப் போவதாக நம் அதிகார வர்க்கம் வாய்ஜாலம் காட்டுகிறது. வெறும் வார்த்தைகள், வரலாறு படைப்பதில்லை.

தங்கள் சொந்த சுகவாழ்வுக்காக மக்களைச் சுரண்டி, சுரண்டப்பட்டவர் களையே தொடர்ந்து தண்டிக்கும் நம் அரசியல்வாதிகள் எதற்காகவும் வெட்கப்படுவதில்லை. 'எந்த நெறிமுறைக்கு உட்பட்ட சட்டத்தையும் அரசியல் அரங்கில் நான் ஏற்பதில்லை. அரசியல் ஒரு விளையாட்டு. அதில் எல்லா விதமான தந்திரங்களும் அங்கீகரிக்கப்படும். அரசியல் விளையாட்டில் ஈடுபட்டவர்களின் வசதிக்கேற்ப சட்டங்கள் வளைக்கப்படும்!' என்றான் ஹிட்லர். அந்த ஹிட்லரின் வழித்தோன்றல்களுக்குத்தான் நாம் இங்கே வழிபாடு நடத்தி வருகிறோம்.

நேர்மையின் நிறம் மாறாமல், நெறிசார்ந்து அரசியல் நடத்த 110 கோடி மக்களின் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆறரை கோடித் தமிழரில் 234 சட்டமன்ற உறுப்பினர்களும் நமக்குக் கிடைக்கவில்லை என்றால், எங்கே போகிறோம் நாம்? 





மேற்க்கொண்டு தேடுவோம்...... எங்கே போகிறோம் நாம்? 

Monday, April 16, 2012

நீ தேவையில்லை எனக்கு.

பெண்ணே !!

நண்பன் வினவுகிறான் .. பிரிந்துவிட்டிர்களா ? (நக்கலான ஒரு வியப்புடன்)..

ஏன்? ஏதற்காக ? ஏப்படி ? யார் காரணம் ?

நானும் இந்த 3 வருட காலத்தில் யோசித்து பார்க்கிறேன்.

காரணம் நீயா ? நானா ? எனக்குள் விடை காணமுடியவில்லை.

இனி யோசித்தும் ஒன்றும் ஆக போவதில்லை. இந்த 3 வருடத்தில் இரு முறை நேரில் பார்த்துள்ளேன்.

நேரில் பார்த்தபொழுது நீ காண்பித்த முக பாவம், பயம் .. அப்பட்டமான பயம், எங்கே பேசி விடுவானோ என்று.

எனக்கே தெரியவில்லை, ஏன் ? எதற்கு ?

காதல் (அப்படி ஒன்று நமக்குள் இருந்ததாம், ஊர் சொல்கிறது) என்கிற விளையாட்டு நமக்குள் நடக்கும் பொழுது,

நான் எப்படி இருந்தேனோ அப்படியே ஏற்றுக் கொண்டாய் , நானும் உன்னை அப்படியே ஏற்றுக் கொண்டேன் !

இல்லை இல்லை, நீ எனக்கு தேவையென நீ, எனக்கு நீ தேவையென நான் சொன்ன பொழுது கூட, என் நண்பி எச்சரித்தாள்.

ஆனால், காலம், விதியால் நம் உறவு கல்லூரியின் கடைசிவருடத்தில் காதலாய்(!) மாறியது.

ஆனால், அதற்கு மேல் திருமணம் என்ற உறவிற்க்குள் நுழைய நீ மறுப்பாய் என நான் யோசித்தது கூட இல்லை.

நம் கல்லூரி நாட்களில், உனக்கு நான் சரி வரமாட்டேன், உன் தகுதிக்கேற்ப ஒருவன் உனக்கு கிடைப்பான் என

நான் சொன்ன பொழுது, நீ விட்ட கண்ணீர் இன்னும் என் மனக்கண்ணில் நிற்க்கிறது. அந்த ஈரம் கூட காயவில்லை என்னுள்.

கல்லூரி முடிந்ததும், விரிசல் விட ஆரம்பித்த நம் உறவு, ஏனோ வெகு வேகமாய் பிரிந்தது. நான்கூட, நாம் விட்டுக் கொண்ட

செல்ல சண்டைகளில் இதுவும் ஒன்று என்றெண்ணி, வேலை தேட..

வேலை கிடைத்தால், உன்னை உன் விட்டில் இருந்து தூக்கி வந்து விடலாம் என்ற உத்வேகத்தில்

வேலை தேடினேன், வேலை கிடைத்ததை உனக்கு குறுஞ்செய்தி அனுப்பி, பதிலிலாமல் நான் உன்னை மறக்கவும் முடியாமல்,

6 மாதங்கள் பைத்தியமாய் இரவு துக்கம் தொலைத்ததை நீ அறிவாயா ? இல்லை இந்த ஊர் அறியுமா ?

உன்னை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயன்றபொழுது, பதில்மொழி இல்லாமல் கல் நெஞ்சாய் இருக்க எப்பொழுது, யாரிடம்

கற்றுக் கொண்டாய், யாருடைய தொடர்பும் இல்லாது வடகிழக்கில் காலம் தள்ள நான் கற்றுக்கொண்டேன்.

நீ மேற்க்கொண்டு படிக்கிறாய் என்று கேள்விப்பட்டு, உன்னை கல்லூரியில் பார்த்துவிடலாம் என எண்ணி,

அடுத்த நாளே, விமானம் பிடித்து வந்து கல்லூரியில் காலைமுதல் அலைந்து, மாலையில் உன்னை கண்ட பொழுது,

ஓரே வரி பேசி, அதனால் கல்லூரியில் நான் கேள்விகளால் துளைக்கப்பட்டது உனக்கு தெரியுமா ?

ஏனோ நேரில் 2 வருடம்கழித்து, பார்க்கும் போது ” நன்றாக இருக்கிறாயா ?” என ஒரு வரிக்குக் கூட ம்ம்ம்ம் எனப் பதில்

சொன்ன உனக்கு, அதை கூட திரும்பி கேட்க மனமில்லை !

இப்பொழுது நண்பன் ஒருவன் விளையாட்டாய் சொல்கிறான், தூக்கிறாலாமா ? இவர் உயிர் கொடுத்தாவது (!) உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று.

என்னால் எப்படி சொல்லமுடியும். நீ வேண்டுமென்று.!

எனக்கு நீ தேவையில்லை. எனது காதலி (!), எனது மனைவி என்னுடன் இருக்கிறாள் !

உன்னுடன் நான் கொண்ட உறவு, கல்லூரி முடிய என நீ முடித்துவிட்டாய் ! என்னால் முடியவில்லை என் கண்ணே !

எப்பொழுதும், நீயும் உன் நினைவுகளும் என்னுடனே உள்ளது, என்னவளை நான் கந்தர்வ மணம் முடித்துள்ளேன்.

நீ தேவையில்லை எனக்கு.

Sunday, January 1, 2012

2012 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

Indigo Boy





போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.



எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.



பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?



ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !



இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.



திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.



தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.



தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.



இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.



தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.



லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.



லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.



இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.



உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.



இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.



உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.



மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.



செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.



செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.



பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.



செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.



விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.



உதாரணமாக,



விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.



இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !



ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.



இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.

Tuesday, November 22, 2011

Out Of Box Thinking

கணித மேதைகள் மூன்று பேர்+ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்களாம். அந்த புதிரின் விடையின் படி அந்த சிறைக்கதவின் பூட்டை செட் செய்தால் அது திறந்து கொள்ளுமாம். கணித மேதைகள் மூன்று பேரும் மணிக்கணக்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு புதிரை விடுவிக்க மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அந்த சாதாரண  ஆள் கூலாக உட்கார்ந்திருந்தானாம்.
பின்னர் மெதுவாக நடந்து சென்று கதவைத் தள்ள அது திறந்து கொண்டதாம். அதாவது கதவு பூட்டப்படவே இல்லை.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் இன்னொரு விஷயம் என்ன என்றால் Before working on the solutions, make sure the problem really exists! இதுதான் OUT OF BOX சிந்தனை

அன்பு பரிசு

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்பரிசு..”ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.
மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.
“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!
G+ ல்  ஈரோடு தங்கதுரை பகிர்ந்தது...