Wednesday, July 7, 2010

கவிதைகள்

பழைய மனிதன்
எல்லா இடங்களிலும்
ஏதோ ஒரு பைத்தியம்
கழுத்து பிளாஸ்டிக் மணியைத்
தொட்டுக்காட்டி
சிதைவுண்டு போன பற்களை
வெளிப்படுத்தி
அதிர்ச்சியூட்டும் சிரிப்புடன்
காசு வாங்கிச் செல்கிறது
தன்னைக் கண்டு பயப்படும்
மனிதனைக் கண்டு அருவருக்கும்
பைத்தியத்தின் உடலில் முன்பு
மனிதனாயிருந்த தன்
அடையாளங்கள்
நிறையவே உள்ளன.
உயிர்
நான்கு நாட்களாக
கிழிபடாமலிருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ்
தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின்
வழி கீழிறங்கி படரும்
தன் வாழ்விடத்தின் வாசலை
பின்னத் தொடங்குகிறது
அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின்மீது.

புத்தரும் வள்ளுவரும் மடமையை ஒழித்த இரு பெரியார்கள்

தந்தை பெரியாரின் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்தக் கூட்டம் ஓர் ஆண்டு விழாவுக்காக கூட்டப்பட்டதாகும் அதுவும் வள்ளுவர் படிப்பக ஆண்டுவிழா. இதற்கு அழைக்கப்பட்டு இருப்பதினால் வள்ளுவரைப்பற்றி ஏதோ சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். பிறகு பொதுவிஷயங்கள் பற்றிய பேசுகின்றேன்.
நண்பர் வீரமணி அவர்கள் சொன்னதுபோல, முதலாவதாக நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் உலகத்திலேயே நாம் மட்டும்தான் காட்டுமிராண்டிகளாக இருந்து வருகின்றோம். இந்த நாட்டில் குடிபுகுந்த பார்ப்பான் எப்படியோ மக்களை மடையர்களாகவும், காட்டு மிராண்டிகளாகவும் ஆக்கிவிட்டார்கள். இவைகளை ஒழித்து மக்கள் சமுதாயத்தை விழிப்புறச் செய்ய நாட்டில் எவருமே தோன்றவில்லை. தோன்றியவர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு இருக்கின்றனர்.
முன்காலத்தில் நமது அரசர்கள் எனப்படும் இரண்யன், சூரபத்மன், இராவணன் முதலானவர்கள் முயற்சி செய்து இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் தந்திரமாகவே ஒழிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இப்படி பார்ப்பனர்களின் வண்டவாளங்களையும், பித்தலாட்டங்களையும் கண்டித்து மக்களுக்கு அறிவுக்கண் திறக்கும்படி பாடுபட்டவர்களில் இரண்டு பேர்களை நாம் தெளிவாக உணர வாய்ப்பு உள்ளது.
2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் என்பவர் தோன்றி, பார்ப்பான் கற்பித்த கடவுள் மோட்சம், நரகம் முதலிய பித்தலாட்டங்களை எல்லாம் கண்டித்து மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி உண்டாக்கப் பாடுபட்டார். இப்படிப் பாடுபட்ட அவரும், அவரது மார்க்கமும் பார்ப்பனர்களால் தந்திரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
அடுத்து வள்ளுவர் தோன்றினார். அறிவு சம்பந்தமான கருத்துகளை எல்லாம் குறளாகப் பாடினார். இவரது குறளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் குப்பையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் வண்ணம் செய்துவிட்டார்கள். இந்த நாட்டில் இராமாயணத்திற்கும், கதைக்கும் இருக்கின்ற பெருமை இப்படிப்பட்ட அறிவு சம்பந்தமான குறளுக்கு நாட்டில் மதிப்பு இல்லை. இந்த புராணக் கதைகளை மக்கள் தெரிந்து இருக்கும் அளவு குறளை தெரிந்து இருக்கமாட்டார்கள்.
இவர்களுக்குப் பிறகு எவருமே தோன்றவே இல்லை; தோன்றிய ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவதாரப் புருஷர்கள் என்பவர்கள் எல்லாம் நம்மை என்றென்றைக்கும் மடையர்களாகவும், பார்ப்பானுடைய கடவுளுக்கு அடிமையாகவும் ஆக்கவே பாடுபட்டார்கள். அதன் காரணமாகவே, பார்ப்பானால் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று சுத்த அடிமுட்டாள்கள், காலிகள் எல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அடுத்து, ஏதோ சித்தர்கள் என்று பல பேர்கள் இருந்து இருக்கின்றார்கள். இவர்களும் சந்திலே பொந்திலே இருந்து கொண்டு ஏதோ இரண்டொரு வார்த்தைகள் கூறி இருப்பார்கள். மற்றபடி எவனும் வெளிவந்து எவனும் பாடுபட முன்வரவே இல்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம்.
மற்றபடி எந்த அரசியல் கட்சிக்காரர்களும் இதில் ஈடுபடமாட்டார்கள். எங்களைவிட படித்தவர்கள், புலவர்கள் மேதாவிகள் ஆக இருக்கலாம். இவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குப் படித்தவர்கள் ஆவார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் சொன்னால் ஓட்டுக் கிடைக்காதே என்று கூறமாட்டார்கள்.
தோழர்களே! நான் முன்பு குறிப்பிட்டதுபோல புத்தரும், வள்ளுவரும்தான் இப்படி பார்ப்பனர்களை எதிர்த்து அறிவுப் பிரச்சாரம் செய்து இருக்கின்றனர்.
பவுத்தர்கள் எல்லாம் புத்தரையும் புத்த மார்க்கத்தையும், தெய்வத்தன்மை பொருந்தியவர், அவர் கோட்பாடுகள் எல்லாம் முடிந்த முடிவானது என்று எண்ணுவதோடு, மூடத்தனமான சடங்குகளை எல்லாம் அறியாமையின் காரணமாக கையாண்டு வருகின்றனர்.
நான் புத்தனையோ, வள்ளுவனையோ, முகமது நபியையோ மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுவதில்லை. இவர்கள் மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்றால், அவர்கள் அதிசயமானவர்கள் என்று கருதி மரியாதை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. மனிதன் என்று கருதினால்தான் அவர்களுக்கு மதிப்பு உண்டு.
எவன் ஒருவன் அறிவை சுதந்தரமாக விட்டு எந்தக் காரியத்தையும் சிந்திக்கின்றானோ, அவன் எல்லாம் புத்தன் அவன் எல்லாம் வள்ளுவன் இராமசாமி இப்படி ஆகலாம், புத்தன் என்றாலேயே புத்தி உடையவன், புத்தியைக் கொண்டு எதையும் ஆராய்பவன் என்பதன் பொருள்.
இந்தக் கருத்தை ஈரோட்டில் நடைபெற்ற புத்த மாநாட்டில் எடுத்துச் சொன்னேன். உலக புத்த சங்கத் தலைவரான திரு. மல்லல சேகராவும் இதனை ஒத்துக் கொண்டார். நேற்று கோலார் புத்த சங்க ஆண்டு விழாவிலும் கூறினேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.
புத்தர் வள்ளுவர் இவர்கள் கருத்துகளே முடிந்த முடிவு. இவைகள் எந்த காலத்துக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது. புத்தர், வள்ளுவர் ஆகியவர்கள் வாழ்ந்த காலம் அன்றைய மக்கள் நிலை முதலியவைகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும். புத்தர் 2500 ஆண்டுக்கு முன்னும், வள்ளுவர் 2000 ஆண்டுக்கு முன்னும் வாழ்ந்தவர்கள். அன்றையதினம் இருந்த கேடுகளுக்குப் பரிகாரமாகவும், அன்றைய அனுபவத்தை ஒட்டியும் எடுத்துச்சொல்லி இருக்கின்றார்கள். அன்றைய ஆசிரியர்களின் வைதீக மார்க்கத்தைக் கண்டித்து உள்ளார்கள். இன்றைய நிலையிலும் ஆரியர் ஆதிக்கம் இருக்கின்றது. இந்தக் கருத்துகளை நாம் பாராட்ட வேண்டியதுதான்.
சிக்கி - முக்கிக்கல் காலத்து மனிதனுக்கு இன்றைய மின்சார விளக்கைப்பற்றி தெரிந்து இருக்கமுடியுமா? மனிதன் பழைய சங்கதி என்றாலே ஜாக்கிரதையாக சிந்திக்கவேண்டும். அப்படியே ஏற்றுக்கொள்ளுவது ஒருவகைப் பார்ப்பனியம்தான். மூடநம்பிக்கையானது தான் எதையும் யார் சொன்னதாக இருந்தபோதிலும், எந்த காலத்தில் கூறப்பட்டு இருந்தபோதிலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், உன் அறிவு கொண்டு சிந்திக்கவேண்டும். இப்படித்தான் புத்தரும், வள்ளுவருமே கூறியும் உள்ளார்கள்.
இராமாயணமும், பாரதமும் கி.மு.200, 300 இல் எழுந்திருக்க வேண்டும். இராமாயணம் முந்தியது, பாரதம் பிந்தியதாகும். இப்படி 2000 ஆண்டுக்கு முன் மக்கள் அறிவு என்ன இருந்து இருக்க முடியும்? சிக்கிமுக்கிக்கல் காலத்தவர்கள் ஆயிற்றே, அந்தக் காலத்து மனிதன் மூளையில் எழுந்த கருத்து இன்றைக்கு எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்? இவைகள் எப்படி பின்பற்றத்தகுந்ததாக இருக்க முடியும்? இவைகள் இருக்கத் தகுந்தது, போற்றத் தகுந்தது என்று எவனாவது சொல்லுவானேயானால் இதில் கண்ட போற்றத்தகுந்த கொள்கைப்படி நடக்கத் தயாராக இருக்கின்றானா? பாரதத்தில் ஒருவன்கூட அவன் அப்பனுக்குப் பிறக்கவில்லை. இப்படி இருக்க எவனாவது ஒத்துக்கொள்ளுவானா? பாரதத்தில் திரவுபதிக்கு 5 புருஷன். இன்றைக்கு அது இருக்கவேண்டும்.
போற்றவேண்டியது என்பவன் எவனாவது தங்கள் மனைவி மகளை 5 பேரைக் கட்டிக் கொள்ள சம்மதிப்பவன்? இதனை ஒத்துகொள்ள-மாட்டான். ஆனால், அந்த கதையை மட்டும் கொண்டாடுகின்றானே என்ன நியாயம்?
தோழர்களே! இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருக்கின்றான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால், புத்த இராமாயணம், சமண இராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும், கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப்பட்டாள். சுமார் 70 வருஷம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரச குடும்பத்தில் இருந்து வந்து இருக்கின்றது. நமது கடவுள்கள் என்பவைகளும்கூட தங்கச்சியையும், மகளையும் கட்டிக்கொண்டதாக புராணங்களில் காண்கின்றோம்.
இராமன், அவன் அப்பன் தசரதனுக்குப் பிறந்தவன் அல்ல; யாகப் புரோகிதனுக்குப் பிறந்தவன். அந்த காலங்களில் அது குற்றமாகக் கருதப்படவில்லை. புத்திரகா மேஷ்டி யாகம் என்றால், யாகப் புரோகிதனுடன் பிள்ளை இல்லாவிட்டால் கலவி செய்து குழந்தை பெற்றுக் கொள்ளுவது என்பது தான் பொருள்.
ஏன் இதனை எடுத்துச் சொல்லுகின்றேன் என்றால், அன்றை மக்கள் அறிவு நடப்பு இவ்வளவுதான். அது இன்றைக்கும் எப்படிப் பொருந்தும்? என்பதை எடுத்துக்காட்டவேயாகும். நம் கதைகளிலும், புராணங்களிலும் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று ஆரம்பிக்கும். இன்று அரசன், இந்த நாட்டில் எங்கே இருக்கிறான்? உலகத்தில் பெரும்பாகங்களில் இராஜாக்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டுவிடவில்லையா? எனவே, எதையும் முன்னோர் சொன்னது, செய்தது, பழையவழக்கம் என்பதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அறிவுகொண்டு ஜாக்கிரதையாக சிந்திக்க-வேண்டும். இராமாயணத்தில் கூறுகின்றான். எவன் ஒருவன் கடவுள், மதம் முதலியவைகளையும், முன்னோர்கள் நடப்புகளையும் அறிவு கொண்டு சிந்திக்கின்றானோ அவன் எல்லாம் நாத்திகன் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னொரு இடத்தில் எவன் ஒருவன் அறிவு கொண்டு நீதி பேசுகின்றானோ அவன் நாத்திகன் என்று கூறியுள்ளது. இப்படியாக அறிவை உபயோகப்படுத்தியவர்கள் எல்லாம் நாத்திகர்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விட்டார்கள். அறிவு கொண்டு சிந்திக்காத காரணத்தினாலேயே, நாம் இந்த 20ஆம் நூற்றாண்டிலும் இழிமக்களாகவும், காட்டுமிராண்டி மக்களாகவும் இருக்கின்றோம் விஞ்ஞான அறிவு பெற்ற மேல்நாட்டுக்காரன் எவனாவது நம்மை மனிதன் என்று ஏற்றுக்கொள்ளுவானா? என்று குறிப்பிட்டார்கள்.
மேலும் பேசுகையில் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரங்கள் ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும், அரசியல் பித்தலாட்டக்காரர்களின் தன்மைகள் பற்றியும் தெளிவுபடுத்தி அறிவுரையாற்றினார்கள்.
------------------

யார் அந்த பார்பன் ?
தந்தை பெரியார் பார்பனன் என யாரை குறிப்பிடுகிறார் ...  அடுத்த புனைவில் தெரிய படுத்துகிறேன் .....

உங்களில் யாருகேன்னும் தெரிந்தால் தெரிய படுத்துங்கள் நண்பர்களே 

T.ராஜேந்தர் இளைஞர்களை மிரட்டப்போகிறார் ....

பத்திரிக்கை உலகம் “டல்” அடிக்கும் சமயங்களில் பத்திரிக்கையாளர்கள் சில விவகாரமான ஆட்களைப் பேட்டிக் கண்டு நிமிண்டி விடுவார்கள்.ஆட்கள் காரமாகவோ அல்லது லூசுத்தனமாகவோஅல்லதுஅரைவேக்காட்டுத்தனமாகவோ அல்லது புத்திசாலித்தனமாகவோ பேசி விவகாரமாகி அது ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஓடும்.வாசகர்களுக்கும் பொழுதுபோகும்.

அந்த லிஸ்டில்.....


T.ராஜேந்தர்,இளையராஜா,சு.சாமி,சோ,இளங்கோவன்,
ஜெயகாந்தன்,விவேக்,கலைஞர் மற்றும் சிலர் இதில் அடங்குவார்கள்.இப்போது T.ராஜேந்தர்.

அவர் விகடனுக்கு அளித்த பேட்டியில்வழக்கமாக “நான் எம்.ஜி.யார்,கலைஞர்,ஜெயலலிதான்னு மூணு பேரோடு மோதினவன்” என்று 1,00,008 தடவையாகச் சொல்லிவிட்டு “தமிழ் நாடே மிரளும்,காதல்ல உருளும்.காதல்தான் கதை.படத்தில் ஏ டு இசட் இசை மழை.அதில் வரும் ஏழு பாடல்கள் தான் இனிமே இளைஞர்களோட சொத்து.” என்று தன்னுடைய அடுத்தப்படத்தைப் பற்றி தன்னம்பிக்கையோடு சொல்கிறார்.

அண்ணா இதெல்லாம் ஒவரா தெரியலீங்களாண்ணா?

T.ராஜேந்தர் என்றாலே தன்னம்பிக்கையின் பிரதிநிதி என்று
சொல்லுவார்கள்.அவர் முதலில் தன்னையும் பிறகு சாகா வரம் பெற்றக் காதலையும்,(எகிப்து மம்மி செட் போட்டு டூயட்டில் பின்னுவார்) மீதியில் தங்கச்சிகளையும் நம்பி  படம் எடுத்து வெற்றிப்பெற்றவர்.

ஆனால் அது முன்னொரு காலத்தில்.Once upon a time.அவர் காலத்திய ”காதல் அழிவதில்லை” தாடி இளைஞர் ரசிர்களுக்கு ரிட்டையர்மெண்டுக்கு நாலோ அல்லது ஐந்து வருடம்தான் இருக்கிறது.ஒரு வேளைஅவர்களை மிரள வைப்பாரோ?

லேட்டஸ்ட் இளைஞர்கள் இவரின் ”வீராசாமி” (14 பாடல்கள்) என்ற படத்தைப் பார்த்துவிட்டு  மிரண்டு போய் வீட்டை விட்டு வெளியே  ஒரு வாரம் வராமல் இருந்தார்கள்.

அண்ணா ஏற்கனவே எடுத்த “சொன்னால்தான் காதலா” ”காதல் அழிவதில்லை”தமிழகம் மிரண்டதான்னா..? காதலில் புரண்டதான்னா?"ஏழு பாடல்கள் தான் இனிமே இளைஞர்களோட சொத்து " இதுவரை போட்டதெல்லாம் செத்தச்சா சொத்தச்சான்னா?

போங்கண்ணா,,, தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சிண்ணா! நீங்க ரொம்ப குறும்புங்கண்ணா.இது மாதிரி பேசின ஜனங்க ஒத்துக்க மாட்டாங்கண்ணா..!

Saturday, July 3, 2010

பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

மிகவும் நல்ல பதிவு ..... படித்து ரசித்ததை உங்களுக்க்காக ........ மறுபதிவு .... மறுக்க முடியாத உண்மை ......

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?
வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.
இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.
ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..
000
pichaiஇலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..
கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…
மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.
இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..
அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!
எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?
வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.
000
புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)
புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.
மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.
எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..
நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.
30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?
விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)
அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.
நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.
பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.
முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.
வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர...

அந்தக் கண்களும் சில காதல்களும்

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும்
இரு விழிகள்
0 0 0
சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல் பயணித்திருக்கும் நாயகியின் விழிகளும் அதன் மொழிகளும்தான். படம் நிகழ்வதென்னவோ எண்பதுகள் எனினும் அந்தக் கண்கள் மட்டும் என் கனவுகளில் தொன்னூறுகளை இழுத்து வந்து நிறைத்து விடுகின்றன. சட்டென விழிப்பு வருகையில் ஏமாற்றமுறுகின்றேன் நான். மீளவும் கனவுக்குள் நுழைதல் குறித்து அவாவுகிறது மனம்.
சட்டெனச் சந்தித்து விலகும் விழிகளின் மொழிகளில் ஒருபோதும் அச்சத்தையும் நாணத்தையும் மொழிபெயர்த்ததில்லை நான். ஆகக் குறைந்தது அவளது விழிகளில்.. முத்தங்களில் பரீச்சயம் அற்ற அந்தப் பதின்ம வயதுகளில் சட் சட் என உடலில் மின்சார அதிர்வுகளை நாட்தவறாது பார்வைகளால் மட்டுமே பரிசளித்துக் கொண்டிருந்தாள் அவள். எதிர்ப் பாலரிடம் தோன்றும் எந்த அதிர்வுகளும் உடல் இச்சையின் பிம்பங்கள் என்பதை அப்போதெல்லாம் நான் அறிந்து வைத்திருக்கவில்லை. “உனக்கு என்னை விடச்சிறந்த எவராவது கிடைக்கலாம். ஆனால் எனக்கு உன்னைத்தவிர இனியொருத்தி இல்லை” என ஒன்றிரண்டு வருடத்தில் நாலைந்து தடவைகளுக்கு மேல் சொல்கிற விளையாட்டின் முதல் படி அது.
பார்த்தால் சொல்லுடா என்பேன் நான். பக்கத்திலிருந்தவன் ஒருபோதும் என்னை ஏமாற்றியது கிடையாது.
பாக்கிறாளடா பாக்கிறாள் என்று அவன் காதுகளிடையே அலறும் பொழுதுகளில் சடாரெனத் திரும்பி அவள் விழிகளை களவு செய்து மொழி பெயர்க்க முயல்வதுண்டு. பென்சில் சீவும் சிறுவட்ட கட்டர் (cutter) ஒன்றின் பின்னிருக்கும் கண்ணாடியூடாக ஒருதடவை அவள் என்னை அவதானித்ததறிந்து மிதந்தேன்.
eyeநிறையப் பேசியும் எழுதியும் புரிந்து கொள்ள முடியாத இந்நாட்களைப் போல் அல்லாது அவளது விழிகளில் இருந்து விளங்கிக் கொண்டது அதிகம். ஏன் தாமதம் என்றதிலிருந்து இனி எப்போ சந்திக்கலாம் என்பது வரை அவள் ஒரு வார்த்தையும் பேசியதில்லை. ஆனால் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றிற்கான பதில்கள் என் கண்களில் இருந்ததா என்பதை அவள்தான் சொல்ல வேண்டும். பின்னாளில் பேசத் தொடங்கிய பிறகும் அவளது வார்த்தைகளை விடவும் பார்வைகளை அதிகம் விரும்பினேன்.
நீண்ட பெருங்காலத்தின் பின் அவளைச் சந்தித்து மதியம் தாண்டியவொரு பொழுதில் வாசலில் பிரிந்த போது அவள் பார்வையை மொழி பெயர்க்க முயன்றேன். எனக்கே எனக்கான எந்தச் செய்தியும் அதில் இல்லை. ஆனாலும் அதனை பத்திரப் படுத்திக் கொண்டேன்.
0 0 0
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு இப்போதும் காதலில் (ok.. காமத்தில் நட்பில் அன்பில் . சோமி கவனிக்க – ) இந்தப் பார்வைக் குறிப்புக்கள் உள்ளதா எனத் தெரியவில்லை. நகர் சார் சூழலில் அதற்கான தேவையற்றுப் போய்விட்டது போலத்தான் தெரிகிறது. மொபைல் போன் உண்டு எஸ் எம் எஸ் இருக்கிறது ஈமெயில் உண்டு என்னத்த கண்ணால பேசுறது என்பது உண்மைதான். ஆனாலும் அது போல வருமா என்பது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும் இல்லையா..?
0 0 0
இன்றைக்கு யோசித்துப் பார்த்ததில் காதல் தொடர்பில் நான் நிறையப் பேருக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது. நேற்றும் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் தெலைபேசி வெள்ளையினப் பெண்ணைத் திருமணம் செய்து வீட்டில் பெற்றோருடன் வசிக்கலாமா என்றார்.
பாடசாலை நாட்களில் சேயோனுக்கு அவனை விட அதிகம் காலம் எடுத்து யோசித்துச் சொல்லியிருக்கிறேன். அவன் ரூட் விட்ட அதே பெண்ணை விரும்பிய இன்னுமொருவன் என்னிடம் ஆலோசனை கேட்ட போது அவனுக்கும் சொல்லியிருக்கிறேன். என்னமோ தெரியலைடா மற்ற பெண்களைப் பார்க்கும் போது உருவாவதை விட இவளை பார்க்கும் போது மட்டும் என்ன என புரிய முடியாத அவஸ்தை மிகு உணர்வு தோன்றுவதாக சேயோன் என்னிம் சொன்னதை அவன் மறந்திருக்கலாம். என்னால் முடியவில்லை.
காலம் இதைவிடக் கொடுமையான வேளைகளையெல்லாம் என்மேல் கவிழ்த்திருக்கிறது. காலையில் வாசலில் காத்திருந்து யாருக்காக நான் பின்தொடர்ந்தேனோ அவளையே காதலிப்பதாய் ஒருவன் இடியிறக்கி என்னையே கேட்டுச் சொல்லச் சொன்னான். ங்கொய்யால.. அவ்வளவு பெரிய தியாகியாக எல்லாம் என்னால் இருக்க முடியவில்லை.
மிகக் கடுமையாக ஸ்கெட்ச் போட்டு ஆலோசித்து திட்டங்களை வரைந்தது என்றால் அது சோமிதரன் விடயத்தில் தான். எத்தனை தூக்கம் தொலைத்த இரவுகள் ! நண்ப, நன்றி மறவாதிரும்
கோபிராஜ் விசயம் ரொம்பவும் வித்தியாசமானது. கேளடா கேளடா கேட்டுச் சொல்லடா என்றவருக்கு நான் தயக்கத்தையே பதிலாக்கினேன். அவளோடு பேச பயமாய் இருக்கென்றேன். அவர் சொல்கிறார். பயப்பிடாதே.. எனக்காக பேசு. பயம் வரும் பொழுதுகளில் நான் சொல்வதை மனதில் நினைத்துக் கொள். பயம் தெளிந்து துணிவு பிறக்கும். அவருக்காக அவளோடு பேசும் பொழுது எனக்குப் பயம் வந்தால் அவர் மனதில் நினைக்கச் சொன்ன மந்திரத்தைச் சொல்லவா.. ? அது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம். அடிங்கொய்யால.. $%&%$§/&%$
வரும் யூன் மாதத்திற்கிடையில் எனக்காக கேட்டுச் சொல்லடா என்ற நண்பர்கள் மார்ச் ஏப்ரல்களில் ” வேண்டாம்.. வேறை ஒண்டு ஓகேயாச்சு” என்ற கதைகள்..
எண்ணிப் பார்த்தால் (இது இரண்டு அர்த்தத்திலும் வரும்) நான் ஆலோசனை கொடுத்த எல்லோருக்கும் காதல் காதில் சங்கூதித்தான் சென்றது. அது என் தவறு அன்று. விடா முயற்சியும் தொழில் பக்தியும் அவர்களுக்கு இல்லாவிட்டால் நான் என்ன செய்வது? சேயோனுக்கு அந்தப் பெண்ணின் பெயரே மறந்து விட்டது. சோமிதரனின் பெயரும் மறக்கப் பட்டிருக்கும். ஆனாலும் எல்லோரும் இப்போது இயல்பாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் மகிழ்ச்சியுடன் என்றும் சொல்ல முடியும். எல்லோரும் புறக்கணிக்கப் பட்ட பொழுதுகளில் அழுதவர்கள் புலம்பியவர்கள் வாழ்வு முடிந்ததென வரிகள் எழுதியவர்கள்.
இதுவே இயல்பும் யதார்த்தமும். எதிர்ப்பால் ஈர்ப்பின் படபடப்பை அதிர்வை இன்னும் என்னென்னவோ ஆன எல்லாத்தையும் அனுபவிப்போம் அனுபவியுங்கள். அதன் புறக்கணிப்பையும் சஞ்சலத்தையும் கண்ணீரையும் அனுபவிப்போம் அனுபவியுங்கள். மீளவும் இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்வோம் இடம்பெயருங்கள். எப்போதாவது அதை நினைத்து கதையும் கவிதையும் எழுதுவோம் எழுதுங்கள். ஆனால் ஒரு விடயம். இலக்குகள் மாறுபடலாம். ஆனால் இலட்சியம் ஒன்றுதான். அதை நினைவில் நிறுத்துவோம். நிறுத்துங்கள்
இதற்கு மேலும் காதலைப் பற்றி எழுதினால் நடக்கிற கதையே வேறு என காதிற்குள் எச்சரிக்கை விடப்படுவதால் சில திருத்தங்களுடன் நிறுத்திக் கொள்கிறேன். காதல் கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும்.
-மீள்பதிவு 18.09.2008